Monday, April 10, 2017

நிர்வாணம்..

#நிர்வாணம்.. பிறக்கும் போது நிர்வாணம் அழகாய்தான் தெரிகிறது.. உடல் தளர்ந்து தோல் சுருங்கி மீண்டும் தவழும் போதும் கூட நிர்வாணம் அழகுதான்.. இடைப்பட்ட காலத்தில் அது மானத்தோடு பேசப்படுகிறது.. தலைநகரில்.. நிர்வாணமாய் என் தமிழன்.. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றெதல்லாம் போய் கடனில் பசியில் வறுமையில் இந்த தேசத்து உழவன் கேட்பாரற்று அம்மணமாய் கிடக்கிறான்.. .. பல்வேறு போராட்ட வடிவங்களை நடத்தி கடைசியில் சந்திப்பதாக சொல்லி நாட்டின் பிரதமர் ஏமாற்றியதால் வெகுண்டு ஆடைகளைந்து அம்மணமாய் நின்றான் எம் தமிழ்குடிமகன்.. நாடு சிரித்தது உண்மையில் வெட்கப்படவேண்டியது நாடும் ஆள்வோரும்தான்.. .. மான மரபில் வந்தவன் அம்மணமாய் நிற்கலாமா என்கிறார்கள் சிலர்.. எனக்கு கூட கோவம் வந்தது தான்.. மானம் பெரிதென வாழ்ந்த சமூகம்தான்.. ஆனால் அகோரிகள் வாழும் நாட்டில் அம்மண சாமிகள் உலவும் பூமியில் ஆடைகட்டியவன் கேனயனாகி போவதால் அம்மணமாய் நிற்கிறோம்.. ஆங்கிலேயனிடமும் அதற்முன் ஆண்டுவந்தவனிடமும் அம்மணமாய் அனுப்பிவைத்து சுகம்/பதவி பெற்றவர்கள் நம்மை பார்த்து அம்மணமாய் நிற்பதாய் சொல்வதுதான் வேடிக்கை.. ஆசைக்காக,அழகிற்காக ஏதேனும் சாதிப்பதற்காக நிற்கவில்லை.. வேறுவழியின்றி.. இருக்கிறதை உருவிவிடுவதற்கு முன் நாங்களே உருவி நிற்கிறோம் நிர்வாணமாய்... தேசம் நிர்வாணமாய்.. .. எங்கள் உரிமைகளை கேட்கிறோம்.. முறையாக எங்களுக்கு தரவேண்டிய நீரை வாங்கி தந்திருந்தால்..நாங்களும் பட்டுத்தி..பட்டோடு வந்து மரியாதை செய்திருப்போம்.. வழியில்லாமல் போய்.. வறண்டுபோன இதயத்தோடு.. இனி ஒன்றுமில்லை எங்களிடம் கோவணம்தான் அதையும் வேண்டுமானால் எடுத்துக்கொள் என்பதை ஆளும் பாசிச அரசிற்கு உணர்த்தவே.. ஆடை களைதல்.. .. #இனியும்_பொறுப்பதற்கில்லை… .. தோழர் ஆலஞ்சி..

No comments:

Post a Comment