Thursday, August 3, 2017
கண்ணாடி..
கண்ணாடிக்கு
வயதாகிவிட்டதோ..
முன்புபோல்
அழகாய் இல்லை..
..
அம்மா தலைவாரிய போது
அவளோடு சேர்ந்து
சிரித்து நின்ற போது
எத்தனை அழகாய் இருந்தது
இந்த கண்ணாடி..
பள்ளிக்கு செல்லும் போது
நான் பார்த்த அதே கண்ணாடி..
எத்தனை அழகாய் இருந்தது..
அரும்பு மீசை வர..
அண்ணனின் மல்லுவேட்டியை
அவனுக்கு தெரியாமல் கட்டி நின்ற போது
ஆஹா.. எவ்வளவு அழகு
இந்த கண்ணாடிக்கு..
பெருநாள் திருநாளில்
புத்தாடை உடுத்தி
பூரித்து நின்றபோதெல்லாம்
நல்ல ரசமாக இருந்தது இந்த கண்ணாடி
காதல் வந்து தலையை
சீவி..சீவி.. சிங்காரம்
செய்த போதெல்லாம்
எத்தனை பிரகாசமாய் ..
ஜொலித்திந்த கண்ணாடி..
கல்யாண மாப்பிள்ளையாய்
நலுங்கு தேய்த்து குளித்து
நறுமணம் பூசி.. நின்ற போது
பிரமித்து நின்ற கண்ணாடி..
கரம் பிடித்தவளை
கழுத்தோடு சேர்த்தணைத்து
காரியமாய் கிசுகிசுத்தை
கண்டும் காணாமல்
கள்ள மௌனம் காத்த கண்ணாடி..
..
நான் வரைந்த ஓவியம்
என் கழுத்தை கட்டிக்கொண்டு
கண்ணத்தில் முத்தமிட்டு
தாடி குத்துத்துப்பா
என்ற போது..
பேரழகாய் பெருமையாய்
கர்வத்தோடு ஜொலித்த கண்ணாடி.
..
என்னவாயிற்று இந்த கண்ணாடிக்கு
ரசம் போனதோ..
முன்பு போல் அழகாய் இல்லை..
என் மீது பொறாமையோ
என் அழகை பார்த்து பார்த்து
புளித்துப்போனதோ ..
ஆனால் ஒன்று சொல்வேன்..
ஏய்.. கண்ணாடியே..
நீ ...
முன்பு போல் இல்லை
புறத்தை பார்த்து பார்த்து
புறத்தை காட்டி காட்டி
உன் புறமும் மங்கிப்போனது
இனியேனும்..
அகத்தை காட்டு
அது ..
பேரழகாய் மின்னும்.
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment