Friday, November 18, 2016
பக்கீர்
#வாழ்வியல்..
பக்கீர்மார்களை பற்றி நீண்டநாட்களாக எழுதவேண்டுமென்று நினைத்திருந்தேன்.. அவர்கள் வாழ்வியலை பற்றி நிறைய விடயங்களை அறிந்தும் சென்று கண்டு ஆய்ந்தும் நிறைய பக்கீர்களிடம் பேசியும் பழகியும்.. அவர்களின் வாழ்வியல் சார்ந்த விடயங்களை அவர்களின் நெறிமுறைகளை ,கொள்கை கோட்பாடுகளை
கவனித்துமிருக்கிறேன்..
படத்தில் இருப்பவர்கள் லியாகத் அலி மற்றும் அலி..
இவரின் தந்தை ஹபிபுல்லாசா தான் எனது சிலம்பாட்ட குருநாதர்..எங்களுரை சேர்ந்த பக்கீர்மார்களில் தலைமையானவராக இருந்தார் இவரிடம்தான் ஊரிலுள்ள இளந்தாரிகள் சிலம்பம் கற்றுக்கொண்டோம்..
..
ரிஃபாய் த்ரிக்காவில் இருப்பவர்கள் பக்கீர்கள் என்றால் தனக்கென்று எதையும் சேர்த்து வைத்துக்கொள்ளாதவர்கள் ..அடுத்த வேளை சோற்றிக்கு யாசித்து தின்பவனே பிராமணன் என்கிறதே இந்து மதம் அதைபோல .. இவர்கள் அனைத்தின் மீதும் ஆசையை துறந்தவர்கள் என்ற நிலைப்பாட்டில் வாழவேண்டும்..
..
பக்கீராக ஆகவேண்டுமெனில் .. நிறைய சடங்குகள் உண்டு அவையாவும் இப்போதெல்லாம் செய்யபடுவதில்லை இமை முடியை கூட எடுத்துவிட்டு மௌத்தை கபனிடுவதுபோல குளிப்பாட்டி கபனிட்டு இறந்தவரைப்போல அடக்கம் செய்யவேண்டும்.. சில நிமிடங்களுக்கு பிறகு வெளியில் எடுப்பார்கள் அப்படி செய்யபடுபவரே அவர்களில் பீர் ஆகும் தகுதியை பெறுவார்..
ஹபில்லாஷா குடும்பத்தில் அப்துல் அலிக்கு மட்டும் காரைக்காலில் நடந்தது..
..
இன்றைக்கு பக்கீராக வேண்டி அதிகம் மெனக்கடுவதில்லை யாரும் அந்த நிலைக்கு வர விரும்புவதில்லை என நினைக்கிறேன்.. தவ வாழ்க்கையென ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் இப்போது அதில் பெரிய வருமானமோ அல்லது மரியாதையோ கிடைப்பதில்லை என நினைத்து ஒதுங்கிக்கொள்கிறார்கள்.. அதைவிட இஸ்லாமிய மார்க்க வழிமுறைகளில் இதெல்லாம் இல்லை என்கிற கருத்து பலமாக எழுப்பபட்டதும் அது பெரிய தாக்கத்தை இவர்களில் ஏற்படுத்தி இவர்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதித்தது...
காலபோக்கில் மெல்ல மெல்ல பக்கீர் முறையிலிருந்து மாற தொடங்கி.. பிற தொழில்களுக்கு சென்றுவிட்டார்கள்.. இவர்களை அந்தந்த ஊர்ஜமாத்கள் சரியான முறையில் கவனிக்காததும் இவர்களின் உரிமைகள் குறித்து கவலைபடாததும் .. இவர்கள் இந்த "தொழிலை" விட காரணங்கள் ஆனது..
..
சிலம்பாட்டம் குஸ்தி,சுருள்கத்தி என எல்லா விளையாட்டுக்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பார்கள்..
யாசித்து உண்ணும் நிலை என்ற ஒன்று இவர்களின் வாரிசுகள் பின்தொடர மறுத்ததும் காலபோக்கில் இவர்களின் எண்ணிக்கை குறைய காரணமானது.. நோன்புகாலங்களை தவிர்த்து பெரிய வருவாய் எதுவும் கிடைப்பதில்லை ..
..
ரிஃபாய் தரிக்கா வில் இப்போதெல்லாம் சூஃபிக்கள் நிறைய வருவதில்லை இவர்களின் வாழ்வியல் கலாச்சாரம் முற்றிலுமாக மாறி பிற தொழில்களை நோக்கிய இவர்களின் பார்வையும் வருங்காலங்களில் #பக்கீர்மார்கள்.. யார் என தேடும்நிலையை ஏற்படுத்தும்.
ராகத்தோடும் இசையோடும் பாடும் திறன்பெற்றவர்களாக வீரம் விளையாட்டு சேவை மனபான்மையென உலகவாழ்வின் மீதான ஆசையை அதிகம் விரும்பதாவர்களாக.. காதிரியாவின் பின்ஜாமீன்களாக அறியபட்டவர்கள்
இப்போதெல்லாம்.. வெவ்வேறு மார்க்கத்தில்(பாதையில்) சென்றுகொண்டிருக்கிறார்கள்..
..
வரும் தலைமுறைகளுக்கு இவர்களைப்பற்றி செய்திகள் பெரிய ஆவலை தூண்டலாம்.. காரணம்
அப்போதெல்லாம் பக்கீர்களை பாரப்பது அரிதாகிபோகும்..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment