Friday, January 11, 2019

காதல்

என்னதான் ரப்பர் கொண்டு அழிக்க நினைத்தாலும் முடியாத சில வடுக்கள் உண்டு .. நெஞ்சை கீறி நட்டதைப்போல ஆழமாய் அடிமனதில் இன்னமும் மெல்ல தரும் வலியாய் .. மறந்து தொலைக்க நினைக்கும் போதெல்லாம் வறண்ட மண்ணில் சின்னதொரு தூறலைப்போல் நீர் விழுந்தவுடன் வெடித்து கிளம்பும் மொட்டாய் இருந்துகொண்டுதான் இருக்கிறது .. .. அரும்புவிடும் மீசையோடு சேர்ந்து ஆசையும் துளிர்விட்ட நேரம் .. கையில் ஏதோவொரு புத்தகத்தோடு அக்ரஹார கோவில் நிலத்தில் அமர்ந்து கவிதை நெஞ்சோடு காத்திருந்த பொழுதெல்லாம் வரம் வாங்கி வந்தது .. மெல்ல அவள் நடந்துவரும் அழகு.. உள்ளம் சிலிர்த்து ஏதேனும் பொய் பேச சொல்லும் .. அருகில் அமர்ந்து ஏதேதோ கதைத்தபோது .. செவிடனைப்போல் வேறொரு லோகத்தில் சஞ்சரித்ததெல்லாம்.. மழைக்காலப்பொழுதில் .. நனைந்து ... ஒதுங்கிநின்று மழைநின்று இலைசிந்தும் துளியை உன் முகத்தில் கை விரலால் துடைத்து அருகணைத்து தந்ததெல்லாம்.. ஆற்றங்கரையில் விரல்பிடித்து அழகுநடை நடந்து .. அக்கரை தோப்பில் அமர்ந்து காதல் பேசிய கருவிழிகள்.. பௌர்ணமி இரவில் ஆற்றுமணலில் முகம் மூடி படுத்திருந்த போது .. அருகில் வந்தமர்ந்து விரல் கோதியதெல்லாம் .. யாம் பெற்ற வரம் .. இதெல்லாம் மறந்து தொலைய எப்படி முடியும் கண்மணி.. கடுங்குளிரில் இளஞ்சூடாய் நீ.. அணைத்து தந்த முத்தம் சத்தியமாய் காமத்தில் வந்ததில்லை கண்ணே .. பொய்யாய் கவிதை தந்து உன்னை கேலி செய்தபோது கூட என்னை புருவம் உயர்த்தி ரசித்ததெல்லாம்.. பெரியாரை பேச தொடங்கியதும் விழிபிதுங்கி ஙே .. என விழி உருட்டும் பேரழுகு .. மறக்கவா முடியும் .. காலசுழற்சியில் காணாமல் போய்.. நீண்ட நாள் கழித்து ஒரு நண்பகல் பொழுதில் தஞ்சை பேருந்து நிலையத்தில் கண்டு நல்லாயிருக்கியா என கேட்டபோது .. மறந்த சில நொடிகள் நெஞ்சில் அறைந்ததை போலிருந்ததே.. எவ்வளவு நேரம் பேசி நின்றோம் .. குடும்பம் குழந்தை வாழ்க்கையென வேறொரு தேசத்தில் வாழ்ந்த போதும் உன் விழியோரம் உருளும் கண்ணீர் காதல் சொன்னதடி.. ஏன் விட்டுவிட்டாய் ..இன்னும் கொஞ்சம் போராடியிருந்தால் விடாமல் துரத்தியிருந்தால் கோட்டை கட்டியிருக்கலாமே என்றது உன் விழிகளில் திரண்ட கண்ணீர்.. அப்போது நீ மட்டுமே அதிகம் பேசினாய்.. நான் மௌனியாய்.. நான் பேசியபோதெல்லாம் மௌனம் காத்தவள் .. காதலை தொலைத்தவள்.. இப்போது பேசுகிறாள் பேசட்டும் என்றிருந்தேன் .. தேன்சொட்டும் சொல்லெடுத்து காதல்மொழி பேசியவள் .. யதார்த்தமாய் கதைத்த போதும் காதலின் உயிரோட்டத்தை உணர்ந்து நின்றேன்.. அருகில் நின்ற மகளை காட்டி மகிழ்ந்திருந்தாய் .. கடைசியாய் வரட்டுமா என்றாய்.. Still love you என்ற போது இன்னும் நீ திறந்தவே இல்லை என்ற தலையில் கொட்டியபோது கூட .. நீ பேரின்ப பேரழகாய் தெரிந்தாய்.. .. இப்போது சொல்லுங்கள் .. மறக்கமுடியுமா என்ன? .. நெஞ்சை கிழித்து நட்டதை.. .. #காதல் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment