Sunday, May 12, 2019
தாய்
உஸ்தாது
பச்சை மண்ணை தன் வித்தையால் கலையாக்கி காட்டும் மேதைகள் யாருக்கு எப்படி சொன்னால் விளங்குமென அறிந்து அவன் புத்தியின் கூர் தீட்டும் கலை அறிந்தவர்கள் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் தான் எனினும் யார் எப்படி எதில் ஜொலிக்க முடியுமென அறியும் பேராற்றல் கொண்டவர்கள் சிறுவயதில் ஆழ பதிந்திடும் விதையை நம்மில் விதைத்து அது
அறிவுச்சோலையாய் பூத்துகுலுங்குவதை கண்டு ரசிக்கும் குழந்தைகள் ..
..
அம்மா
தாயே முதல் ஆசான் என்கிறது .. அவளிடமிருந்து குழந்தைகள் 3000 சொற்களை பாடசாலைக்கு செல்லும் முன்னே கற்றுக்கொள்கிறது எது பிடிக்கும் என்று அறிந்தவள் மட்டுமல்ல தாய்.. எப்படி சொல்வதென்பதையும் எப்படி புரியவைப்பதென்பதையும் அறிந்து நம்மை வளர்ப்பவள் என் முதல் ஆசான் என் தாய்
என்னுள் சிலதேனும் நல்லதை காண்பீர்களெனில் எல்லாம் அவள் தந்தது.. தமிழ் மீது தீராத பற்றுக்கொண்டவர் .. சீறாபுராணமும் முஹையத்தீன் மாலையும் அவள் பாடி படிக்க அதன் ராகம் என்னை தமிழோடு கட்டிப்போட்டது .. அதிகம் ஆசைபடாதே என்றதும் வறுமையின் நிழல் கூட படாதவாறு வளர்த்ததும் .. பசிக்கிறவனை கண்டால் பரிவோடு ஏதேனும் தந்தனுப்பியதும் .. எல்லைமீறாத கட்டுபாடுகள் செதுக்குமென செப்பியதும் .. உயரங்களில் இல்லை உன் வளர்ச்சி உள்ளங்களில் என போதித்ததும் . உனக்கென்ற கடமையில் பின் வாங்காதே உடன்பிறந்தவர்களை மறவாதே .. வரும் போகும் ஆனால் நிரந்தரமாய் உறவின் பலம் வேண்டும் வாக்கு தந்தால் அதை நிறைவேற்று .. முடியாதென்றால் வாக்கு தராதே ..அளவோடு பேசு அதையும் அறிந்து பேசு ..பொய் கொல்லும்..பசி வந்து உண் பார்த்து பழகு.. அதிகம் படி..
இத்தனை இலகுவாய் வாழ்வியலை நான் யாரிடமும் கற்றதில்லை .. என் தாய் என்னிடம் நானூறு மேற்பட்ட புத்தகங்களை தந்துவிட்டு போனார் .. பர்மா தேக்கில் செய்த மரபெட்டியில் பாதுகாத்து வைத்திருந்தவை..
அறிவை தேட அதுவே உத்வேகமாய் அமைந்தது ..
..
வாழ்வியல் எதார்த்தத்தை ஒருவன் உணரவேண்டுமெனில் முதலில் தாயை படி ..
உன் உயர்வில் உன்னிலும் அதிகம் அக்கறைகொண்ட ஜீவன் .. தாயை தவிர உன்னை உண்மையாய் நேசிக்கிற ஒருவரை காண்பதரிது
தாய் அது மட்டுமே உண்மை ..மற்றதெல்லாம் (கடவுள்உட்பட) நம்பிக்கை தான்.. உன் அறிவின் ஆரம்பம் தாய்
..
தாயே மிக சிறந்த ஆசான்..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment