Monday, April 8, 2019
மனிதர்கள்
சில மனிதர்கள் ..
நம் வாழ்வில் சில கற்றல்களில் ஆசானாய் வந்து நம்மை செப்பனிட்டு சென்றுவிடுவார்கள் .. சிலர் நம்மை புதிய பாதையில் நம்மை அறியாமலேயே செலுத்திவிடுவார்கள் .. யாரென்று முகமறியாத சிலர் நம்மில் தாக்கத்தை உண்டாக்கி சுவடே தெரியாமல் மறைந்துபோவார்கள்
அப்படி சிலர் ..
வாயக்கா வாயக்கா என்று தெருவில் மழலைச்சொல்லில் வாழைக்காய் விற்றுக்கொண்டு வருவார் ..வேட்டி மேல் துண்டு அணிந்திருப்பார்
அவர் பெயரெல்லாம் தெரியாது தெருவிற்கு வந்தால் அவரை பகடி செய்வதில் தான் அதிக ஆர்வம் வரும் ..கேலி கிண்டல் செய்தாலும் முகம் சுளிக்க மாட்டார் தன் வியாபாரம் முடிந்தால் திண்ணையில், அமர்ந்து நாம் பேசுவதை கவனித்து கொண்டே இருப்பார் எதுவும் பேசமாட்டார் .. சிறுவர்களுக்கு அவரை சீண்டுவதுதான் வேலை நான் கூட கிண்டல் அடித்து மகிழ்ந்திருக்கிறேன் .. ஆனாலும் அவருக்குள் ஒளிந்திருக்கும் திறமை நமக்கு தெரியாமலேயே இருந்தது ..
..
ஒருநாள் தெருவில் சிலம்பம் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த போது தன் வியாபாரத்தை முடித்து விட்டு வந்து அமர்ந்தவர் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தார் .. நான் ஆடிக்கொண்டிருந்தேன் .. யார் கிட்ட கத்துகிட்டே என்றார் குறவஞ்சியை கத்துக்க தேனி கம்பம் அருகில் ஒருவரிடம் கத்துக்கிட்டேன் பெரிய ஆசான் மலைச்சாமி என்றேன் .. ஒழுங்கா கத்துகொடுக்கலையா என்றார் .. இங்கிருந்து (தஞ்சை) அங்கபோய்தான் கத்துக்கணுமா என்றார்
சட்டென்று கோபம் வந்தது உஸ்தாத் ஹபீபுல்லாசா
சொல்லி தான் அங்கு சென்று சிலம்பம் கத்துகிட்டேன் மிகபெரிய ஆசான் என்றதும் .. முறையாக கத்துக்கல .. அல்லது கத்துக்கொடுக்கல என்றார் .. அவரின் மெலிந்த உருவத்தையும் அவரது அழுக்கேறிய உடையும் தோற்றமும் என்னை கேலி செய்ய வைத்தது.. யோவ் போயா தஞ்சாவூரில் பஞ்சா வேடிக்கையில ஆடி பரிசெல்லாம் வாங்கிருக்கேன் என்று கர்வத்தோடு எகத்தாளமாய் சொன்னேன் .. அப்ப பரிசு கொடுத்தவனுக்கும் சிலம்பம் தெரியாது போலியிருக்கு என சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே நகர்ந்து போய்விட்டார் ..
..
எனக்கு இரவெல்லாம் தூக்கமில்லை நாம சரியா கத்துக்கலையோ என்று மனம் அலைமோதியது மறுநாள் வருவார் அவரிடம் மீண்டும் விளையாடி காட்டணும் என்ற நினைப்பு .. இரண்டு மூன்று தினங்கள் ஆளை காணோம் நானும் கோபம் தணிந்து மறந்தே போய்விட்டேன் சில நாட்கள் கழித்து வீட்டில் அமர்ந்திருந்த போது வாயக்கா வாயக்கா என்ற சப்தம் .. என்னை ஏதோ செய்தது தெருவிற்கு வந்து பார்த்தேன் .. தூரத்தில் சென்றுக்கொண்டே இருந்தார் .. நான் வாழைக்கா என்றழைத்ததும் சாயங்காலம் வரேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டார் .. அன்று மாலை வரை அவரைப்பற்றிய சிந்தனை மட்டுமே இருந்தது .. அன்று மாலை 6 மணி இருக்கும் வந்தார் நான் ஆடியது சரி இல்லையா என்றேன் .. ஆடுறே அதுல ஒழுங்கு இல்ல .. சொல்லிட்டு வேட்டி மடிச்சு கோவணமா கட்டிட்டு ஆடுனாரு..
பிரமிப்பா இருந்திச்சு .. இந்த மனிதருக்குள் இவ்வளவு திறமையா .. தோற்றத்தை வைத்து மதிப்பீடு செய்ய கூடாதென்று எனக்கு உணர்ந்தியது இந்த நிகழ்வு ..
எதிரியை அடிக்கிறது இல்ல..
நம்ம ஆடுன அவன் அதிரணும் திணறணும் என்ன செய்ய போறான்னு முழிக்கணும் ஆடுறதிலும் அழகு இருக்கணும் .. அதே நேரம் எந்த ஒழுங்கையும் மீறாமலும் இருக்கணும் .. இது எதுவும் உன் ஆட்டத்தில இல்லைன்னாரு..
..
கண்ணு கலங்கிடுச்சு ஆசானே .. கட்டி பிடுச்சுகிட்டேன் .. ஆம்
நம்மையும் அறியாமல் நம்மை சரி செய்வார்கள் சிலர்.. எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் சொல்லி தருவார்கள் .. நம் திமிரை உடைத்தெறிந்துவிடுவார்கள் திறமையிருந்தும் அகந்தை இல்லாமல் அமைதிகாப்பார்கள் .. வாழ்வில் இப்படி நிறைய ஆசான்கள் உண்டு ...
நம்மை வழிநடத்த செப்பனிட சொல்லி தர ..
எளிய மனிதர்களாய் நம்மோடு இருப்பார்கள் தற்பெருமைகொள்ளாதவர்கள் .. இவரும் என்னை செப்பனிட்டவர் தான்
..
#ஆசான்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment