Saturday, April 17, 2021

விவேக்

விவேக்..
வடிகர் என்பதை தாண்டி அவருக்கென்று சில முகங்கள் இருந்தன.. நல்லதை செய்யவேண்டும் நம்மால் முடிந்தளவு விழிப்புணர்வை பரப்புதல்,என ஒரு சமூகபார்வை அவருக்கிருந்தது .. நகைச்சுவையோடு எதைச் சொன்னாலும் பொல்லாப்பு வராதென்ற உண்மையை உணர்ந்திருந்தார் .. மக்களை மகிழ்விப்பவன் சற்று கோமாளியாக இருப்பது நன்று.. 
நகைச்சுவை சிறந்த மருந்து அதை தொடர்ந்து செய்வது சமூகத்தில் நல்ல பலனை தரும்..
சிலவரிகளில் உண்மையை உரக்கச் சொல்லிவிடலாம்.. 
அவா வேற வர்ணம்..
அவாளு வரணும் என்பார்  நகைச்சுவையோடு கூடி பேரிடியாய் இறக்கிவைப்பார்..
..
அவருக்கு சாதி இருந்தது மதம் கூட ஆனால் அதன் பிடியில் சிக்குண்டு மதியிழக்கவில்லை சிலநேரம் கேடயம் அது முடிந்த பிறகு தூக்கியெறிதல் நல்லதென்ற அறிவிருந்தது ..
எங்கோ அவர் சறுக்கியிருக்க வேண்டியவர் நிதானித்து தவிர்த்து தன் களப்பணியை அக்கறை காட்டி மறுவடிவம் பெற்றார்.. மரம் நடல் இந்த மண்ணிற்கு நீ செய்யும் நன்றிகடன்.. வரும் தலைமுறைக்கு நீ செய்யும் பேருதவி.. அதை தொடர்ந்து செய்து மக்கள் மனங்களில் இடம்பிடித்தார்..
..
கலைஞர் அவர்களால் "சின்னகலைவாணர் " என அழைக்கபட்டவர்.. ரிஷியிடம் பெற்ற வரம் அது..சமூக பார்வையோடு கூடிய எண்ணங்கள் மூடநம்பிக்கைகளை அவர்பாணியில் கிண்டல் செய்து மக்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தல் அதற்கு நகைச்சுவை பேராயுதமாய் இருந்து காத்தது ..
அவருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் அதை வெளிகாட்டிக் வெறிக்கொள்ளவில்லை மூடங்களை விமர்சிக்கும் தைரியம் இருந்தது .. பசியும் வறுமையும் படிப்பினை தரும் ஆசான்கள் என நம்பியவர்.. 
..
ஒரேயொரு நிகழ்வு போதும்.. துன்பபடும் போது தோள்நிற்பது தேவையறிந்து உதவுவது அதை வெளியில் சொல்லாமல் காப்பது.. விவேக் நல்ல மனிதர் இதை மரியாதைக்குரிய நடிகர் குமரிமுத்து சொல்வதை கேட்டால் புரியும் தன் மகள் திருமணத்திற்காக நாடகத்தில் நடித்து வந்த தொகையை முழுவதுமாக தந்து பேருதவி செய்தவர் .. சின்னக்கலைவாணர் என சொன்னதன் பொருள் இப்போது புரியும்..
..
போய்வாருங்கள் விவேக்..
காலம் நினைவில் கொள்ளும்
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment