Sunday, April 11, 2021

திருமா..
தொல்.திருமாவளவன் என்ற அரசியல்வாதியோடு முரண்பட்டும், உடன்பட்டும் இருக்கிறோம்.. ஆரம்பகால அரசியலில் தன்நிலை நிறுத்தலுக்காக அவரின் பேச்சும் செயலும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.. தன் இன மக்களின் விடுதலை என்ற குறுகிய வட்டத்திலிருந்து திருமா கரையேறி வெகுகாலமாகிவிட்டது.. அதைகூட நம் பார்வையில் குறைகூற முடியாது.. பட்டியிலினமக்களை நடத்தும் விதம் இப்போதும் சர்ச்சைக்குரியதுதான் .. சில நிலக்கிழார்கள் அவர்களை வைத்திருக்கும் இடம் வேதனைக்குரியது.. தீண்டாமை முழுவதுமாக மக்கள் மனங்களிலிருந்து நீங்கிவிட்டதா என கேள்வி எழுப்பினால் பதில் இல்லை.. சில ஆண்டபரம்பரை என சொல்லிக்கொள்வோர் இன்னமும் நெய் ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம்
..
அடங்க மறு அத்துமீறு திருப்பி அடி என்ற வாசகம் தலித் இளைஞர்களை ஒருங்கிணைக்க சுயம் எழ சுயமரியாதையை ஊட்ட செய்தது.. சில சம்பவங்கள் சறுக்கலை தந்தாலும் அவர்களின் பயணம் நெடுக காயங்களோடே இருந்தது .. எந்த சம்பவத்தை குறிப்பிட்டு சொல்லி புண்படுத்த விரும்பவில்லை மாறாக திருமா தவிர்க்கமுடியாத சக்தி என்பதில் மாற்றுகருத்தே இல்லை.. படித்தவர்கள் திருமாவோடு இல்லை என்ற வாதத்தை முழுவதுமாக நிராகரிக்கிறோம்.. படி,பண்படு செயல்படு என இளைஞர்களை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறார்.. சிலரை போல முரடர்களாக முட்டாளாக , எங்கே விபரம் தெரிந்தால் திருப்பி அடிப்போனே என்று வெறியூட்டவில்லை.. ஆரம்பகாலங்களில் சரக்கு இருக்கு முறுக்கிருக்கு என்று பேசியவர்தான் ..உணர்ச்சி விளிம்பில் நிறுத்தியவர்தான் ஆனால் காலம் கனியவைத்திருக்கிறது.
..
திமுகவோடு முரண்பட்டு நின்றபோது கூட நாம் அணுசரனையோடுதான் பார்த்தோம் ..சில நினைவுகளும் சில கசப்புணர்வுகளும் கடந்துபோயின.. ஆனாலும் ஒடுக்கபட்ட மக்களிடமிருந்த ஒரு தலைவன் உருவாவது கடினம் .. உருவான சிலர் பாசிசத்தின் ஏவல்களாய் மாறிப்போனதும், தங்கள் செல்வாக்கை, செல்வத்தை உயர்த்திக்கொள்ள துரோமிழைத்த வரலாறுகள் நெடுக உண்டு .. ராம்விலாஸ் பஸ்வான் தொடங்கி பூவைஜெகன் வரை இந்தியா முழுவதும் சமரசம் செய்துக்கொண்டவர்கள் ஏராளம்.. சனாதனத்தை எதிர்ப்பதில் தன் சமூகமக்களை அரசியல்படுத்துவதில், விழுப்புணர்வை ஏற்படுத்தியதில், ஒழுங்கு செய்ததில் திருமாவின் பங்கு அளப்பரியது.. சமகால அரசியலில் தலித் இனத்தையும் உள்ளடக்கிய அரசியல்பாதையை வகுத்து, உறுதி செய்தவர்.. தலித் அல்லாதோரும் விரும்புகிறவராய் மாற்றிக்கொண்டு பயணிக்கிறார்.. சாதிபலம் மட்டும் போதாது என்பது உணர்ந்து களம் காண்பதும்,சாதிமதமற்ற  பொது அரசியலே நிலைத்து நிற்க உதவும் என்பதை உணர்ந்து செயல்படுகிறார்..இதெல்லாம் தன் சமூகமக்களை வழிகெடுக்கும் "கேடுகெட்ட" வர்களுக்கு புரியாது.. சமூகத்தை அடகுவைத்து சுகவாழ்வு வாழும் இனத்தை காட்டிகொடுக்கும் வீணர்கள் அறியமாட்டார்கள்..
..
திருமாவை விமர்சிக்க ஆயிரம் காரணம் உண்டு அதேபோல் அணைத்துக்கொள்ளவும்..
#istandwiththiruma
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment