ஈ.வெ.ரா சாலை..
இது சாலை அல்ல எமது பாதை
தமிழர்களை சமன்படுத்திய பாதை .. தமிழருக்காக உழைத்த பெருங்கிழவன் சமைத்த பாதை
அல்லல்படுவோரை காக்கும் பாதை .. எமது பிள்ளைகள் கல்வியில் சிறக்க அறிவில் மிளிர காரணமாய் அமைந்த பாதை .. எம்மை எமக்கே உணர்த்தி நீ..பழந்தமிழன் கல்வியில் கலாச்சாரத்தில் பண்பாட்டில் உலகுக்கே பாடமெடுத்தவன் என உணரவைத்த பாதை.. எம் தமிழ் மொழி மூத்ததென சொல்லி புரியவைத்த பாதை..
..
கலையும் கலாச்சாரம் உன்மீது திணிக்கபட்டது இதெல்லாம் உனதில்லை உனது கலாச்சாரம் மனிதம் சார்ந்தது மக்களை மகிழ்விப்பது .. வேற்றுமையற்ற உயர்சிந்தனை கொண்டது ..வீரம் பயமறியாபோக்கு பசித்தவனை அரவணைக்கும் பெருவாழ்வு வாழ்ந்தவன் நீ என உணர்த்திய பாதை.. வந்தேறிகள் வழிகெடுத்து உன் மீது திணித்ததெல்லாம் சீழ்வடிவும் சிந்தனைகள் .. புரட்டும் புராணமும் உனதில்லை..நீ இயற்கையை வணங்கிய பெருமகன் உலகின் மூத்தக்குடி என புரியவைத்த புதியபாதை..
..
இதிகாசங்கள் உனதல்ல நீ பின்பற்ற வேண்டியது திருக்குறள் என உனக்கு வகுப்பெடுத்த பாதையிது.. மூடத்தனத்தை தூக்கியெறி முட்டாளாய் திரியாதே.. சாதியோ மதமோ உனதல்ல நீ.. தமிழ்க்குடி இடையில் வந்ததுதான் நீ நம்பும் மதமும் சாதியும் மதமாற்றமும்.. நீ இயல்பானவன் இயற்கைபிறவி.. உன் மீது சுமத்தபட்ட கழிவுகளை துடைத்தெறி என அறிவுசொன்ன பாதை..
..
படி எவன் தடுத்தாலும் படி.. அறிவுக் கொண்டுபார்.. எவன் சொன்னாலும் அறிவேற்காததை ஏற்காதே.. உரிமையை எவன் தடுத்தாலும் விடாதே உனக்கானதை எவனும் எடுக்க அனுமதியாதே.. உன்னைவிட எவனும் உயர்வில்லை, அடுத்தவன் உணர்வை மதி .. எல்லோரும் சமம் .. ஏற்றதாழ்வுகாட்டாதே..
என சொல்லி புரியவைத்த புதிய பாதை..
உனக்கானதை தடுத்த பாசிச கூட்டத்தை சூழ்ச்சியை முறியடித்து, அரசியல் சாசன சட்டத்தில் திருத்தம் செய்து உரிமையை மீட்டுதந்தது புரட்சி செய்த பாதை..
..
சனாதனமும்,வர்ணாசரமும் உனதில்லை ..பெண்களை அடிமைகளாய் நடத்த சொன்ன இழிநிலை உனதில்லை என உணர்த்தி
பெண்கள் இணையானவர்கள், பெண் ஆண்களுக்கு கீழ்படிந்தவர்கள் அல்ல எல்லாவற்றிலும் அவர்களுக்கு உரிமை உண்டு.. பெண்கள் கல்விகற்வேண்டும் .. ஆணுக்கு இணையாக வேலைவாய்ப்பில் இடம்பெறவேண்டும்.. ஆண்குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும் பெண்குழந்தைகளை படிக்கவை என்ற புரட்சியாளன் அமைத்த பாதை..
மானிடப்பற்றொன்றே மகத்தானது.. சாதிப்பற்றோ மதப்பற்றோ இனப்பற்றோ ஏன் மொழிப்பற்றோ எனக்கில்லை
மானிடப்பற்று எனக்குள்ளதென்ற தெளிவாக வகுத்த பாதை இது..
..
நல்வழிப்பாதை..
நானிலம் சிறக்க..
நல்லவர்தம் வாழ்வு சிறக்க
மனிதர்களை மனிதர்களாக்க..
மூடம் நீக்கி மறுமலர்ச்சி தந்த
மா மேதை சமைத்த பாதை ..
ஈ.வெ.ரா..சொல் அல்ல
சுடர்விடும் விளக்கு..
இருட்டை விரட்ட வந்த கிழக்கு
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment