Saturday, February 23, 2019

இனியேனும் நல்லவனாய்

நான் நானாக வேண்டும்.. இப்போது காணும் நான் நானில்லை.. .. நான் எனும் அகந்தை எப்போது வந்தது நான் நானானதாலா எப்போது சிரித்திடும் இயல்பில்லை இப்போது.. வந்தவர் யாரென்று பார்த்து பின் பேசும் வழக்கம் எனதில்லை வல்லனுக்காய் வழங்கி நிற்கும் செயல் எனதில்லை வந்து விழும் சொல்லில் .. பொய் சேர்ந்தததெப்போது அறிவில்லை அமுதமொழி தனை .. எனக்காய் கொஞ்சம் வளைத்தொடித்து ஏனென புரியவில்லை.. .. சிறு புள்ளியாய் இருந்தபோது என்னோடிருந்த நேர்மை.. பயிலும் போதும்.. நன்கு பயின்றவரோடு பயணித்தபோதும்.. நல்லவர் சபையை நாடி திரிந்தபோதும்.. நாடோடியாய்.. நல் மனிதரை சந்தித்து திரிந்த போதும் .. பசியறிந்த சாப்பிட்டாயா என முகம் தெரியா கிழவி கேட்டபோதும்.. பசி மறந்து தலையாட்டி கடந்தபோதும்.. கையில் காசின்றி.. நடந்தே சான்றோர் கூட்டத்தை காண.. அலைந்த போதும்.. ஊர்சுற்றி திரிந்து.. அந்திநேரத்தில்.. சில வயல்வெளி கூத்தை ரசித்து நின்றபோதும்.. சூரியன் மறையும் ..பின் எழும் நேரம் வரை வயலில் காவல் காத்து நெல் மூட்டை அருகே விழுந்து கிடந்தபோதும்.. பெரியப்பனனின் பேச்சை மீறா பொன் வசந்த காலம் அது .. .. பொய் சொல்லி பழக்கமில்லை.. வாசலில் நிற்கும் வறியவரை விரட்டியதில்லை இரக்கம் கொண்ட கண்கள் .. ஈகையோடு கூடிய எளிய வாழ்வு.. அப்பனின் அறிவு.. நடை நேர்த்தி.. அண்ணனின் நிமிர் ..திமிர்.. அன்பை மட்டுமே தந்த அம்மா.. யாரையும் முகம் சுழிக்க வைக்க்காதேவென்ற பெரியப்பன்.. சாவின் அருகில் நின்றாலும்.. தர்மத்தோடு பேசு.. எதிரியே ஆனாலும் எள்ளுவதை குறை.. நீ.. போராடும் எதிரி உனை விட தாழ்ந்தவனெனில் மோதாதே.. என்ற அப்பனின் அறிவுரை எங்கு போனது எல்லாம்.. .. இப்போது பேச தொடங்கும் முன் முகம் பார்க்கிறேன்.. அவன் தோற்றத்திற்கு தகுந்தாற்ப்போல் வந்து விழும் வார்த்தைகள்.. சத்தியமாய் எனதில்லை என்னுள் மிருகம் சட்டென்று கக்கிவிட்ட விசத்துளிகள் அவை.. எள்ளிநகையாடும் செயல்.. பலகாலம் என்னுள் அடங்கி கிடந்த மனபேய் செயல் அது.. முதுகுக்கு பின் சிரிப்போரை விடுத்து நேர்நின்று கதைப்போரின் மீது வாள் வீச சொன்னது என் சிற்றறிவு.. .. மாறுதல் வேண்டும் எப்போதும் நானாய்.. தப்பில்லா எண்ணமாய்.. தவறியும்..தீ சொல் பேசாத தீங்கிழைக்காத கடும் சொல் தவிர்த்து.. கவின் மிகு சொல்லெடுத்து உண்மையின் அருகாமையில் நின்று கதைக்கவேண்டும்.. வல்லவனை விடுத்து நல்லவனுக்காய் சிலகாலமேனும் உழைத்திட வேண்டும்.. .. இனியேனும் நல்லவனாய் வேண்டும்.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment