Thursday, May 4, 2023

மாபெரும் தலைவனுக்கு நினைவு சின்னம் ..
தன் வாழ்நாளில் பெரும்பகுதியை சட்டமன்றத்திலும், பொதுவாழ்வில் 80 ஆண்டுகள் ஏற்றமிறக்கம் என எந்நிலையிலும் தடமாறாத தன்னிகரில்லா தலைவனுக்கும் சென்னை கடற்கரையில் பேனா சின்னம் .. இனி தமிழகத்தின் LANDMARK பேனா சிலை 
..
கோவில் கூடாதென்பதல்ல கொடியவரின் கூடாரமாக மாறாக கூடாதென்பதற்காக என முழங்கிய பேனா , மலமள்ளும் என் சகோதரனுக்கு உள் இடஒதுக்கீட்டை கையிலும் தலையிலும் மலத்தை சுமக்கும் அருந்ததியருக்கு 3% விழுக்காடு தந்து தலைமேல் தூக்கி ஆடுகிறேன் என்ற பேனா 
பள்ளத்தில் கிடப்போரை படிகளில் ஏற்றிட பகுத்தறிவு துணைக்கொண்டு திட்டம் தீட்டிய பேனா .. சிறுபான்மை சமூகத்தவர் கல்வி வேலைவாய்ப்பில் இடம்தர உள்ஒதுக்கீடு செய்த பேனா 
..
முதல் பட்டதாரிக்கு கட்டணமில்லா கல்வியை தந்த பேனா,  உள்ளாட்சிகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு தந்த பேனா .. பெண்களுக்கு சொத்தில் பங்கு தந்ததால் இந்திய குடும்ப உறவுகள் சிதைந்து போகும் என பழைமை பேசி வஞ்சித்தார்கள் .. ஆனால் இந்த திராவிடப் பெருவுடையாரின் பேனா தான் பெண்களுக்கு "சொத்தில் பங்கு" என உத்தரவிட்டது .. பெண்கள் கல்வியை உறுதி செய்ய தாலிக்கு தங்கம் என்றதும் இந்த பேனா தான் ..
பிற்படுத்தபட்ட இடஒதுக்கீட்டை உயர்த்தியதும், சமத்துவபுரம் கண்டதும், மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரி தந்ததும், அனைவருக்கும் கல்வி,  சமஉரிமை, வேலைவாய்ப்பு, என ஓயாது எழுதி அதை செயல்படுத்திய பேனா .. மனிதனை மனிதனே இழுப்பதா என்ற பேனா தான் கைரிக்ஷாவை ஒழித்தது .. சமய நல்லிணக்கம் சமூகநீதி, ஒடுக்கப்பட்டோருக்கு முன்னுரிமை என 80 ஆண்டுகள் முழக்கமிட்டு பெற்று தந்த பேனா ..
..
நவீன தமிழகத்தை செதுக்கிய பேனா .. இந்த பேனா சிந்திய துளிகளில் முளைத்ததுதான் இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சியும்,கட்டமைப்பும்,  இந்திய ஒன்றியம் இன்று சிந்திக்க தொடங்கியருப்பதையெல்லாம் முப்பதாண்டுகளுக்கு செய்து சாதனை படைத்த பேனா .. காதுகேட்காத  சிறுவர்களுக்கு ஒற்றை கையெழுத்தில் செவித்திறன் கண்ட பேனா ..
..
கேலியும் கிண்டலும், வன்மமும், பொய்யும், வழக்குகளும், தொடர்ந்த சுழன்றடித்தபோதும்  அறம் வெல்லும் என்ற நம்பிக்கையோடு மக்கள் தொண்டாற்றிய மகத்தான தலைவன்.. 
இந்திய ஒன்றியம் கண்ட தன்னிகரில்லா தலைவர் கலைஞர் சமசரமில்லாத போராளி, சமூகநீதிக்காக  தொடர்ந்து எழுதியும் பேசியும் செயல்படுத்தியும் வந்தவர், பெரியாரின் சீடராய் அண்ணாவின் தம்பியாய், தமிழகமக்களின் பேரன்பிற்குரியவராய் திகழ்ந்தவர் .. 
வறியவருக்கு செவிசாய்க்கும் இறையாய் திகழ்ந்த பேரருளானனுக்கு தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை கடலில் பேனா சின்னம் .. தடைகள் பலகடந்து தடம்பதித்த மாபெரும் தலைவனுக்கு தமிழ்நாடு செய்யும் நன்றிகடன் ..  பொல்லாங்கு பேசுவோரும், புறமுதுகில் குத்துவோரும், அரசியல் கழிசடைகளும்,ஆணவத்தில் கொக்கரித்த பாசிசத்தின் கள்ளகுழந்தைகளும் தந்த இடையூறை தகர்ந்து கம்பீரமாக எழுந்து நிற்தும் கலைஞரின் பேனா ..
.. 
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment