ஒரு தலைவனின் பயணம்..
அரசியல் இலக்கணமாய் திகழ்ந்த வரலாறு..
என்பதாண்டுகள் ஏற்றமிறக்கத்தோடு வழிநெடுக பகைவரும், துரோகிகளும்,வாளெடுத்து நின்றபோதும் புறமுதுகு காட்டாத பெருந்தலைவன்.. வஞ்சத்தால் வீழ்த்த நினைத்தார்கள், படுகுழியில் தள்ளிவிடலாமென திட்டம் தீட்டினர்.. சூழ்ச்சிகளை வெல்லும் சூத்திரம் அறிந்திருந்தான்.. வெற்றியோ தோல்வியோ அவருடைய இயக்கத்தை தடுக்க இயலவில்லை..
..
தஞ்சையில் உட்புற சிற்றூரில் (திருக்குவளை) பிறந்து இந்திய ஒன்றியத்தின் தவிர்க்கமுடியாத தலைவனாய் தன்னை நிலைநிறுத்தியவன்..
இந்தியா இப்போது சிந்திப்பதை முப்பதாண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தி காட்டியவன்..பகைவருக்கோ சிம்மசொப்பனம். இன எதிரிகளோ செய்வதறியாது கை பிசைந்து நின்றார்கள்.. மாபெரும் இயக்கத்தின் அடித்தளம் தகர்ந்துவிடாமல் காத்துநின்ற தலைவன்.. எத்தனை அம்புகள், வீழ்த்திட நினைத்து முடிந்தது பார் "சகாப்தம்" என சில கைகூலிகள் கவிதைபாட, தளராது எழுந்து நின்று ஆடியது கண்டு மிரண்டனர் சதியாளர்கள்..
..
கலைஞரின் கலைப்பயணம் காட்டாறு போல் ஆரிய திணிப்பை அடித்துக்கொண்டு போனது.. தீந்தமிழில் சுழற்றிய சொற்ச்சொடர்கள் ஆரியத்தின் அடிவயிற்றை கலக்கியது.. "ஆகாரத்திற்காக அழுக்கை தின்று தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன்" என்றெழுதி யாரும் அதுவரை சொல்லாத உவமையோடு இலக்கியம் படைத்தார் மிரண்டது தமிழ்த்திரை.. கலைஞரின் எழுத்தாணி சமநிலையை போதித்தது .. கயமையை சுட்டெரித்தது.. எதிரிக்கும் வாழ்வு தந்தது .. யாருமே தொடாத யாருமே தொட முடியாத உயரத்தை தொட்டது .. தொல்காப்பியத்திற்கு எளிய உரை எழுதி எமக்கெல்லாம் புரியவைத்தது கலைஞரின் பேனா.. கலைஞர் வசனமென்றால்
கைதட்டியது பெருங்கூட்டம்.. அதுவரை வடமொழி கலப்பில் உரையாடல் தந்த சினிமா கலைஞரின் வரவிற்கு பிறகு தான்
தமிழ் சிம்மாசனத்தில் அமர்ந்தது..
தமிழ்த்திரை வசனத்தை முன்னிறுத்தி பயணிக்க தொடங்கியது
கலைஞரின் எழுதுகோல் தலைக்குனிந்த போதல்லாம் தமிழன் தலைநிமிர்ந்தான்..
..
சொக்கவைக்கும் பேச்சு வார்த்தையில் சிலம்பம் கட்டி ஆடியபோது எதிரியும் மெய்மறந்து நின்றான்.. அடுக்குமொழியில் தேன்கலந்து தித்திக்க பேசும்போது தமிழ்நாடே நாட்டியமாடியது.. எப்போதும் எதிர்பார்ப்பார்கள்
வீழ்ந்ததாய்தான் வரலாறு.. தமிழ்உணர்வை வீரத்தை இளைஞர் நெஞ்சில் விதைத்தது இவரின் பேனா.. அரசியல் எதிரிகள், சித்தாந்த பகைவர் கூட இவர் மொழியில் மயங்கி நின்றார்கள்..
..
பகுத்தறிவு துணைக்கொண்டு, வாளேந்தி நின்றபோது செய்வதறியாது கதிகலங்கி நின்றது பகை.. தொலைநோக்குப்பார்வை , அடத்தளமக்களின் மேம்பாடு, அனைவருக்கும் கல்வி, இயலாதோர்க்கு முன்னுரிமை,
தீட்டும் திட்டங்களெல்லாம் எளியவர் பயன்பெற வேண்டும்..
மீன் சோறு போட்டவர்களுக்கு மத்தியில் நீ மீன் பிடிக்க கற்றுதந்தவர்..
கையில் தண்ணீர் கிடைத்த போதெல்லாம் தாகித்தவனை தேடிக்கொண்டிருந்தவர்..
நவீன தமிழ்நாட்டை வடிவமைத்தவர்.. மக்கள் பணியில் தொய்வின்றி ஓய்வின்றி உழைத்தவர் .. இனம்,மொழி,பண்பாடு நாகரீகம் இவற்றை காக்க பெருஞ்சுவராய் நின்ற பெருமகன் .. தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் எதோவொருவகையில் இவரின் அரசியலால்,அதிகாரத்தால் அணுகுமுறையால் பயனடைந்திருக்கிறது கல்வியில் வேலைவாய்ப்பில் அதுவரை மறுக்கபட்டவர்களுக்கு உரிமை கிடைத்திருக்கிறது.. இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சியும் கட்டமைப்பும் எல்லாம் திராவிட பெருவுடையான் கலைஞரால் நிகழ்ந்தது தான்
..
தலைமைப்பண்பில் எப்போதும் சிறந்து விளங்கினார் , தொண்டர்களோடு தொடர்பு அவரது சுவாசமாக இருந்தது . உடன்பிறப்பே என விளித்து முரசொலித்து ஊட்டம் தருவார் .. தோல்விகள் வரும்போதெல்லாம் மறுநாள் முரசொலியை தேடும் .. அதுவே அருமருந்தாக தொண்டனுக்கு அமையும்.. அடிமட்ட தொண்டனுக்கும் குரல் கொடுக்க எதிர்க்க, வினா எழுப்ப, உரிமை தந்தார்
எழுப்பிய கேள்விக்கு விளக்கம் தந்து ஜனநாயகம் காத்தவர்..
இயக்கத்தின் பலம் எது என்பதை உணர்ந்திருந்தார்..
..
நூற்றாண்டு கண்ட பேரியக்கத்தின் பெருமைமிகு தலைவர்.. ஆக சிறந்த ஜனநாயகவாதி .. தலைச்சிறந்த ஆளுமை, அறம்சார்ந்த அரசியல் கலைக் களஞ்சியம்.. பொதுவாழ்விற்கு வருவோருக்கு
இவரின் வாழ்வியல் மிகச்சிறந்த பாடம் கலைஞரின் நூற்றாண்டுவிழாவை கொண்டாடுவோம்..
..
வாழ்க! கலைஞர் புகழ்!!
#கலைஞர்100
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment