Wednesday, May 17, 2023

அன்பின் முதலமைச்சர் .. 
மாண்பமை மு.க..ஸ்டாலின் 
Honorable 
Chief Minister of Tamil Nadu 
M. K. Stalin 

நாகரீக அரசியல் ..,
அரசியல் இலக்கணத்தில் சிறியதாக இனிய ஓசை எழுப்புமே அன்றி காரியத்தில் துளையிட்டுவிடும் ..சமீபத்திய செயற்பாடுகள் ஒன்றை உணர்த்தியிருக்கிறது.. இரண்டாண்டு அரசு அதிகாரம் வெகுமக்களின் அன்பை எந்தளவு பெற்று தந்ததோ அதற்கு சற்றும் குறையாமல் முணுமுணுப்பையும் பெற்று தந்திருக்கிறது.. 
..
நெடிய அனுபவமும் அசராத உழைப்பும் நெறிதவறாத செயலும் 
நிலை உயர காரணம்  என்பதை அறிவோம் ஆனால் கூட இருப்போரும், குழி பறிக்க காத்துநிற்போரும், சமயம் கிடைக்காத என ஏங்கிநிற்கும் பகை முன் நம்மை நிர்கதியாய் நிறுத்த தயங்காதவர்கள்.. அரச இயந்திரம் அதிகார போதையில் தனக்கு இணக்கமில்லாமல் நடத்தவிடாது .. நிறைய இடையூறுகள் தரும் அதையெல்லாம் மீறி அரசு இயந்திரத்தை நடத்துவது கடினமான செயல் .. அதை ஒரளவு வெற்றிகரமாக கையாண்டவர்கள் வரலாற்றில் படமாகிறார்கள்.. வேறெங்கும் தேட வேண்டியதில்லை தலைவர் கலைஞர் போதும் .. அவரே நமக்கு பாடம் 
..
கட்சி மிக முக்கியம்.. ஒருமுறை செல்வி.ஜெயலலிதா அதிமுக இரு அணியாக பிரிந்திருந்த நேரத்தில் ஜானகி முதல்வராக வந்தார் அப்போது ஆட்சியை விட கட்சி முக்கியம் .. கட்சி இருந்தால் பதவி தானே வருமென்றார் .. ஆம் அடித்தளம் சரியாக இருந்தால் கட்டிடம் வலுவாக இருக்கும் .. கலைஞர் காலத்து தொண்டனைப்போல் இப்போதெல்லாம் காண்பதறிது.. 
உழைக்கிறார்கள் ஆனால் அதில் சுயநலம் மேலோங்கி நிற்கிறது..  
காலத்தின் தேவை கருதி உதயநிதியை கொண்டுவந்தீர்கள்,  மக்களும் பயிற்சி பெறட்டும் என வரவேற்றார்கள் ஆனால் அதை சிலர் தங்களின் வருங்கால கனவிற்காக மேளம் கொட்டுகிறார்கள் .. 'சின்னவர்' வழியில் என சிலாகித்து எழுதி காலூன்ற பார்க்கிறார்கள் .. 
உழைப்பவர்கள் தான் ஆனால் தன் புகழுக்காக தன்னை உயர்த்திக் கொள்ள பொய்க்கொண்டு ஆடுகிறார்கள்.. கட்சியை விட தங்கள் செலவாக்கிற்காகவே கைதட்டும் இவர்கள் ஆபத்தானவர்கள்..
..
விமர்சனங்களும், மறுப்புகளும் ஏனென்ற கேள்வியும் அக்கறையோடு கூடியது.. இயக்கத்தின்பால் தன்னலமற்ற அன்பும் உணர்வுபூர்வமான பற்றும் கொண்டது.. அவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் இயக்கத்தின்/ கட்சியின் வெற்றியை தனது வெற்றியாக கொண்டாடும் பெரும் மதிப்பிற்குரியவர்கள் இவர்களின் கரங்களை பற்றிக்கொண்டாலே போதும் .. சில ஒட்டுண்ணிகளால் இறுதியில் அவப்பெயரே மிஞ்சும்..
..
கட்சியை கடந்து திமுக ஆட்சிக்கு வரவேண்டுமென நினைத்தவர்களும் அதற்காக தங்களளவில் உழைத்தவர்களும் கவலைக் கொள்கிறார்கள் .. கட்சிக்குள் ஒருசிலரின் ஆதிக்கமும் தொண்டர்களை அகல நிறுத்தி சிலர் சாதித்துக்கொள்ள நினைப்பதும் வரும்காலத்தில் சறுக்கலை தரும்  மக்களின் பெரும் நம்பிக்கையில் சிறிய ஓட்டை போதும் சனாதனவாதிகள் அதை அகலபடுத்திவிடுவார்கள்..
..
வெளிப்படையாகவே  சிலர் தங்கள் பிள்ளைகளுக்காக உதயநிதியை உயர்த்தி பிடித்து இருக்கிறேன் அய்யா என சிலர் வளைந்து நிற்பது சுயமரியாதை இயக்கத்தின் சாபக்கேடு.. சிலதுகளை விலக்கியும் சிலரை எச்சரித்தும், நீண்டநாட்கள் அதிகாரத்தை அனுபவித்து சுகம் கண்டவர்கள் விடாது தங்களுடைய மக்களுக்காக கேட்பவர்களை ஓரமாக நிறுத்திவிட்டு புதியவர்களுக்கு உண்மையான கொள்கை பிடிப்புள்ளவர்களை அரவணைத்து செல்லவில்லை என்றால் விலை கொடுக்க வேண்டிவரும்..
..
தங்களின் கடும் உழைப்பு சிலரின் சந்தர்ப்பவாத செயலால் வீணாகபோய்விடும் .. மூத்த தலைவர்கள் வரும்தலைமுறைக்கு கதவை திறக்க மனமில்லாமல் தங்கள் வாரிசுகளை முன்னிறுத்துவதும்  அவர்களை புகழ்பாடிகளை கொண்டு துதிபாடுவதும் வெகுமக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது..
சில வேண்டதாகதவைகளால் நல்வாய்ப்பு கைநழுவிப் போகலாம்.. நமக்கான நம் இனத்திற்கான தேவைகள் நிறைய இருக்கிறது .. சனாதனவாதிகளும், சில இனத்தின் கோடாரிகளும், காத்திருக்கின்றனர்.. 
எச்சரிக்கை..
..
திமுக ஆட்சிக்கு வரவேண்டுமென விரும்பிய பொதுமக்கள் சிலர் முகம் சுளிக்க தொடங்கியிருப்பது தெரிகிறது.. 12 மணிநேர வேலை,அமை‌சசரவை மாற்றம் தொடங்கி கள்ளசாராய சாவிற்கு 10 லட்சம் நிவாரணம் என்ற அறிவிப்பு எதற்கு என்ற கேள்வியும் திசை மாறுகிறதா, விடியல் ஆட்சி என பேசுகிறார்கள்..
கவனம்.. கட்சிகாரன் கூட சஞ்சலபடுகிறான் வாக்குகேட்டு போனபோது தந்த உறுதிமொழியை கூட நிறைவேற்ற முடியவில்லை தன் வார்டுகளுக்கும் கூட நியாயமாக உதவ முடியவில்லை.. அரசு அலுவலகம் கட்சிகாரன் செல்லமுடியாத சூழல் .. ஆனால் அதிமுககாரன் சாதித்துகாட்டுகிறான் .. இதெல்லாம் வரும் தேர்தலில் நமக்கு பாடம் நடத்தும் .. 
.. 
ஐம்பதாண்டு பொதுவாழ்விற்கு சொந்தகாரருக்கு பாடமெடுப்பதா என  பதவிக்காக கூவும் சிலர் விமர்சனம் செய்வதை கேள்வி கேட்கிறார்கள் திமுக வரலாற்றை அறிந்தும் சுய நலத்திற்காக வகுப்பெடுக்கிறார்கள்.. கலைஞரெனும் மாபெரும் தலைவன் விமர்சனங்களை செவிமடுத்து அதற்கு தக்க பதிலளித்து இயக்கத்தை வலுப்பெற செய்தார் ..  
"ஆலமர நிழலில் எதுவும் வளராது'..
அடுத்த தலைமுறை தலைவனை முன்னிறுத்த வேண்டுமென கடிதமெழுதியதற்கு 'காலம் தலைவனை தேர்வு செய்யும்' என பதில் தந்து எம்மை வியப்பில் ஆழ்த்தியவர்.. இயக்கம் நல்ல தலைவனை இனங்காட்டியது..  தளபதி அவர்களே இந்த நீண்ட கடிதம் இயக்கத்தின் மீதும் இனத்தின் மீதும் கொண்ட பெரும் நம்பிக்கையில் நான்காம் தலைமுறை திராவிட மாடலாய் ஒலிக்கவும் ஜொலித்திடவும் வேண்டியே அன்றி வேறெதும் ஆசை இல்லை..
.. 
வாழ்க திராவிடம்..

ஆலஞ்சியார்

No comments:

Post a Comment