Saturday, May 20, 2023

**********************************

ரகசியம் சொல்கிறேன்
காதை கொடுங்கள்
நான் நானில்லை ..
நிஜத்தில்..
நான் நானில்லை..
முகம் வேறு..
அகம் வேறு...
..
உள்ளில் வஞ்சம்..
பிறர் வாழ..
வழிவிடுவதேயில்லை..
எல்லாம் எனக்காது..
அடுத்தவர் உரிமையா..
நான் தருவருதே..
அவர் உரிமை..
..
பங்காளி 
தேங்காய் உடைத்தால்
நான் கொட்டாங்குச்சியை அல்ல
அவன் கையையே உடைக்கிறேன்..
..
வெளியில் தெரியும்
எதுவும்..நிஜமில்லை..
..
உள்ளில் மிருகம்
மூகமூடியணிந்து..
சிரித்து பேசி..
பலரை படுகுழியில்
தள்ளுகிறது ..
தவறென்று தெரிந்தும்.
மனதில்  துளியும்
இரக்கம் கொள்ளாமல்.
கீரிடம் சூட்டிக்கொள்ளகிறேன்..
..
அடுத்தவர் பாதையை
அடைத்து..
எனக்கென..ஒருபாதை..
நான் மட்டுமே
செல்லும் தனிபாதை
வேண்டுமென்கிறேன்..
..
சுற்றம் சொந்தம் கூட
எனைச் சுற்றியே
இயங்க வேண்டுமென்ற
பேராசைக்காரன்..#நான்
..
உலகம் எனக்கானது
என்ற அகம்பாவம்..
எதற்கும் அடங்காத திமிர்
யார் சொல்லும் கேளாமை,
அறியாமை..
பெரியவர் தம்மை மதிக்காத
கொடுஞ்செயல் ..
எல்லாம் உண்டு என்னிடம்..
வெளியில் காட்டாதவாறு
யாரும் எனை 
இனம்காணாதவாறு..
..
நான் நானில்லை
நிஜத்தில்லை
மனிதனில்லை..
மனிதம் மரத்துப்போன
முகமிழந்த..
போலி முகமூடியணிந்த
பொல்லாதவன் ..
..
எல்லோரும்..
சொல்கிறார்கள்
#நான்_மனிதன்..
..
*************************************

சிலநேரம்..
நம்மை கடந்து போகும்
நிகழ்வு எதும் ..
நமக்கில்லை என
எண்ணுவதுண்டு..
சின்ன சலனத்தைக்கூட
ஏற்படுத்துவதில்லை.  
நமக்கு மிக நெருக்கமான
ஏதோ ஒருவகையில்
தொடர்புடைய  .
என்றாவது ஒருநாள்..
நம்மை நேரடியாய் ..
சில வேளை ..
இதயத்தில் ரணத்தை..
மாறா வடுவை
தரக்கூடிய
நிகழ்வு கூட
நமக்கில்லையெனும் போது..
சஞ்சலமில்லாமல்
நம்மால் இயங்க முடியும்..
..
மரணம் அழகு..
அத்தனை கொடூரமில்லை..
என்றாவது
நம்மை தழுவும்..
ஆரத்தழுவும்..
இயற்கையோடு
நம்மை கொண்டு சேர்க்கும் ..
மண்ணில் உரமாவோம்..
..
நிறைய வாழ்ந்தவனோ
நிம்மதி இழந்தவனோ..
பேராசை கொண்டவனோ
பேரறிவாளனோ.
மண் சமன் செய்யும். 
மரணம் அழகு.. 
இயல்பாய் வருமெனில்..
தனியாய் வருமெனில்..
#மரணம்கூட_அழகு..
..
ஆலஞ்சியார் 

செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்
..
2..
சின்னம் ..
தன் வாழ்நாளில் பெரும்பகுதியை சட்டமன்றத்திலும், பொதுவாழ்வில் 80 ஆண்டுகள் ஏற்றமிறக்கம் என எந்நிலையிலும் தடமாறாத தன்னிகரில்லா தலைவனுக்கும் சென்னை கடற்கரையில் பேனா சின்னம் .. இனி தமிழகத்தின் LANDMARK பேனா சிலை 
..
கோவில் கூடாதென்பதல்ல கொடியவரின் கூடாரமாக மாறாக கூடாதென்பதற்காக என முழங்கிய பேனா , மலமள்ளும் என் சகோதரனுக்கு உள் இடஒதுக்கீட்டை கையிலும் தலையிலும் மலத்தை சுமக்கும் அருந்ததியருக்கு 3% விழுக்காடு தந்து தலைமேல் தூக்கி ஆடுகிறேன் என்ற பேனா 
பள்ளத்தில் கிடப்போரை படிகளில் ஏற்றிட பகுத்தறிவு துணைக்கொண்டு திட்டம் தீட்டிய பேனா .. சிறுபான்மை சமூகத்தவர் கல்வி வேலைவாய்ப்பில் இடம்தர உள்ஒதுக்கீடு செய்த பேனா 
..
முதல் பட்டதாரிக்கு கட்டணமில்லா கல்வியை தந்த பேனா,  உள்ளாட்சிகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு தந்த பேனா .. பெண்களுக்கு சொத்தில் பங்கு தந்ததால் இந்திய குடும்ப உறவுகள் சிதைந்து போகும் என பழைமை பேசி வஞ்சித்தார்கள் .. ஆனால் இந்த திராவிடப் பெருவுடையாரின் பேனா தான் பெண்களுக்கு "சொத்தில் பங்கு" என உத்தரவிட்டது .. பெண்கள் கல்வியை உறுதி செய்ய தாலிக்கு தங்கம் என்றதும் இந்த பேனா தான் ..
பிற்படுத்தபட்ட இடஒதுக்கீட்டை உயர்த்தியதும், சமத்துவபுரம் கண்டதும், மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரி தந்ததும், அனைவருக்கும் கல்வி,  சமஉரிமை, வேலைவாய்ப்பு, என ஓயாது எழுதி அதை செயல்படுத்திய பேனா .. மனிதனை மனிதனே இழுப்பதா என்ற பேனா தான் கைரிக்ஷாவை ஒழித்தது .. சமய நல்லிணக்கம் சமூகநீதி, ஒடுக்கப்பட்டோருக்கு முன்னுரிமை என 80 ஆண்டுகள் முழக்கமிட்டு பெற்று தந்த பேனா ..
..
நவீன தமிழகத்தை செதுக்கிய பேனா .. இந்த பேனா சிந்திய துளிகளில் முளைத்ததுதான் இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சியும்,கட்டமைப்பும்,  இந்திய ஒன்றியம் இன்று சிந்திக்க தொடங்கியருப்பதையெல்லாம் முப்பதாண்டுகளுக்கு செய்து சாதனை படைத்த பேனா .. காதுகேட்காத  சிறுவர்களுக்கு ஒற்றை கையெழுத்தில் செவித்திறன் கண்ட பேனா ..
..
கேலியும் கிண்டலும், வன்மமும், பொய்யும், வழக்குகளும், தொடர்ந்த சுழன்றடித்தபோதும்  அறம் வெல்லும் என்ற நம்பிக்கையோடு மக்கள் தொண்டாற்றிய மகத்தான தலைவன்.. 
இந்திய ஒன்றியம் கண்ட தன்னிகரில்லா தலைவர் கலைஞர் சமசரமில்லாத போராளி, சமூகநீதிக்காக  தொடர்ந்து எழுதியும் பேசியும் செயல்படுத்தியும் வந்தவர், பெரியாரின் சீடராய் அண்ணாவின் தம்பியாய், தமிழகமக்களின் பேரன்பிற்குரியவராய் திகழ்ந்தவர் .. 
வறியவருக்கு செவிசாய்க்கும் இறையாய் திகழ்ந்த பேரருளானனுக்கு தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை கடலில் பேனா சின்னம் .. தடைகள் பலகடந்து தடம்பதித்த மாபெரும் தலைவனுக்கு தமிழ்நாடு செய்யும் நன்றிகடன் ..  பொல்லாங்கு பேசுவோரும், புறமுதுகில் குத்துவோரும், அரசியல் கழிசடைகளும்,ஆணவத்தில் கொக்கரித்த பாசிசத்தின் கள்ளகுழந்தைகளும் தந்த இடையூறை தகர்ந்து கம்பீரமாக எழுந்து நிற்தும் கலைஞரின் பேனா ..
.. 
ஆலஞ்சியார்
..
3.
ஆரியம்/திராவிடம்..
..
ஆரியத்தின்  எதிர்மறை தான் திராவிடம்.. திராவிடம் காலாவதி ஆகிவிட்டதாக ஆர்.என்.ரவி புலம்புகிறாரே.. அவர் புலம்புவதிலிருந்தே திராவிடம் முன்பைவிட முனைப்போடும் வீரியத்தோடும் செயல்படுகிறதென தெரிகிறது .. சூடு பட்டால் அலறதான் செய்வார்கள் .. 
..
பெண்களை படிக்காதே என்றது ஆரியம் .. 
வா படி உதவிதொகை தருகிறேன் உனக்கே முன்னுரிமை என்றது திராவிடம் ..
வர்ண அடுக்கைச் சொல்லி தாழ்ந்தவன் உயர்ந்தவன் என்றது ஆரியம் ..
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றது திராவிடம் ..
பெண்களுக்கு சொத்தா.. குடும்ப உறவு சிதறுமென்றது ஆரியம் 
சொத்தில் பெண்களுக்கும் சம பங்கென ஒன்றியத்திற்கே வழிகாட்டியது திராவிடம் ..
ஒரு இனத்தை அழிக்கவேண்டுமென்றால் அவன் பண்பாட்டை சிதைக்கவேண்டும் அதற்கு முதலில் நூலகத்தை இல்லாதாக்கவேண்டும் அதைதான் அண்ணா நூலகத்திலும் செய்ய துணிந்தது ஆரியம் .. ஆனால் எல்லா இடங்களிலும் நூலகம் என்பதை இலக்காக்கியது திராவிடம் 
.. 
அடுக்கிகொண்டே போகலாம்..  
ரவி போன்றோருக்கு ஏன் எரிகிறதென்றால் பிற மாநிலங்களில் செய்வதைபோல மதத்தை சாதியைச் சொல்லி மக்களிடையே மோதலை  தமிழ்நாட்டில் உருவாக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் வெளிப்படையாகவே தெரிகிறது ..
எதை சொன்னாலும் மக்களே அதை கூறுபோட்டு ஆய்ந்து முகத்தில் கரியை பூசுகிறார்களே என்ற ஆதங்கம் .. 
திராவிட பெருங்கிழவன் அந்தளவு உழைத்துவிட்டு சென்றிருக்கிறான் அவனோடு முடிந்தது என்று நினைத்தால் அவனது தம்பிமார்கள் பெருஞ்சுவரை எழுப்பி காத்து நிற்கிறார்களே என்ற கோபம் அவர்களை எரிச்சலடைய செய்கிறது 
..
சரஸ்வதி நதி கலாச்சாரம் என்று புழுகி, தேடி பார்த்தும் கிடைக்காததால் சிந்துசமவெளி பண்பாட்டை கொண்டவனின் வரலாற்று அதிர்வுகள் கீழடியாய் கிடப்பதால் செய்வதறியாது புரட்டுகளில் காலம் இனியும்  ஓடாதென்று உண்மையை வெளிவந்தே தீரும் என்பதால் பதறுகிறார்கள் ..
..
எதைச் சொன்னால் கோவம் வரும், எதைச் சொன்னால் பகை நடுங்குமென தெரிந்து படையோட்டம் நடத்துவதால் தளபதியின் "தீ" சொல் சுட்டெரிக்கிறது ஆரியம் குலைநடுங்குகிறது .. மொழியைச் சொல்லி சாதியைச் சொல்லி மதத்தைச் சொல்லி தமிழர்களின் ஒற்றமையை சிதைக்க முடியாது.. அவனை ஒருங்கிணைக்கும் சொல் திராவிடம் .. 
ரவி பதறுவதும் அங்குதான் 
..
திராவிடம் சொல் அல்ல 
இனத்தின் அடையாளம் 
..
ஆலஞ்சியார்
..
4.
தங்க ஊசி என்பதாலேயே வயித்துல குத்திக்க முடியாதுடா என்று எங்கம்மா சொல்லும் ..
மாண்பமை ஸ்டாலின் அவர்களே தொழிலாளர் வேலைநேர சட்டதிருத்தம் ஏற்றுக்கொள்ளமுடியாதது 
..
12 மணி நேரவேலை என்பது உடல்சோர்வை மட்டுமல்ல மன அழுத்தத்தையும் தரும்.. இதை அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன் .. மூன்றுநாட்கள் ஓய்வென்பதெல்லாம் கடைசியில் "அதிகநேர வேலை " செய்தால் பணம் தருகிறோம் என்ற நிலையை எட்டும் .. 8 மணிநேர வேலை என்பதே நீண்டநெடிய போராட்டத்திற்கு பிறகு கொண்டுவரபட்டது 
..
கார்ப்ரேட்களின் கணக்குகூட்டலுக்கு அரசாங்கம் செவிசாய்க்குமெனில் இழப்பு நமக்குதான் என்பதை காலம் உணர்த்தும் .. இந்த ஆட்சிக்கு நல்ல பெயர், மக்களிடத்தில் நிம்மதியோடு வாழ்கிறோம் என்ற நம்பிக்கையும், கட்சிகாரனை கூட சிபாரிசுக்கு விடாமல் நேர்மையோடு ஆட்சி நடத்துகிறார் என்ற நல்லபெயர் ஒரே நாளில் சரிந்துவிடவேண்டுமா ..
..
தங்களின் அமைச்சர்களில் தங்கமாய் மின்னும் தங்கம் தென்னரசு அதிமுககாரர்கள் கூட விரும்புகிற அமைச்சர், நிதானம் தவறாத நேர்வழியில் திறமையோடு துறையை நடத்திவருகிறவர் .. அதிகாரிகளின் பரிந்துரையோ கார்ப்பரேட்களின் நெருக்கடிக்கோ வளைந்து போவாரெனில் அது திராவிட மாடலுக்கு தீராத வினையை தரும் .. குழு அமைத்து பரிசீலினை செய்வதாக சொல்லியிருப்பது ஆறுதலை தந்தாலும் .. மக்களும் தொழிலாளர் சமூகமும் விரும்பாத, இந்த சட்டவடிவு திரும்ப பெறவதே சாலச்சிறந்தது 
..
மனிதர்களை இயந்திரபடுத்தும் போக்கு மனித உரிமையை பறிப்பதாகாதா ..  8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேரம் உறக்கம் என்பதுதான் நியதி  மனிதனை உரிமையை பறித்து பணத்தாசை காட்டி உழைப்பை உறிஞ்சும் செயல் இது .. 12 மணிநேர வேலைக்கு சட்ட அங்கீகாரம் என்பது விருப்பபட்டால் செய்யலாம் ஆனால்  காலபோக்கில் அது தவிர்க்கமுடியாத  கட்டாயமாகிவிடும் .. நாம் மும்மொழிக்கொள்கை ஏன் கடுமையாக எதிர்க்கிறோம் இந்தி மொழியோ பிறமொழியோ திணிக்கபட்டால் தாய்மொழியை கற்பிக்க கூட ஆளில்லாத நிலை வந்துவிடும், படிக்க யாரும் முன்வரவில்லையென ஆசிரியர் நியமனம் தடைபடும் என்பதாலும் கடைசியில் மெல்ல நம்மொழி சாகும் என்பதால்தான் ..  8 மணிநேர வேலைக்கு சென்று வருவதற்கு 10/12 மணிநேரம் ஆகிறது  இதில் 12 மணிநேரம் என்றால் குறைந்தது 14/15 மணிநேரமாகும்  வேலைஅழுத்தம் இது மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பெரும் பாதிப்பை தரும் 
..
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.. என்றான் வள்ளுவன் 
நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும். இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்..

..
நல்லாட்சியை தருகிற நீங்கள் வெகுமக்கள் ஏற்காத ஒன்றை சட்டமாக்குவதும் முறைதவறிய செயல் ..அரசின் புகழை அது சரித்துவிடும்.. நாடே உற்றுநோக்கும் தங்களின் எண்ணமும் செயலும் இந்திய ஒன்றியமே எதிர்பார்த்து நிற்கும் வேளையில் இந்த இடறல் தேவையில்லை .. தொழிலாளர் விரோதபோக்கு நம்மை வீழ்த்திவிடும் .. 
..
இந்திய ஒன்றியத்திலேயே முதன்முதலில் தொழிலாளர் தினத்திற்கு விடுமுறை அளித்த வரலாறு நமக்குண்டு .. 
இறுதியாக  மௌலான ரூமி அவர்களின் வரிகளோடு முடிக்கிறேன் 
"மழைதான் பூக்களை வளர்க்கிறது
இடி அல்ல" 
..

ஆலஞ்சியார்
..
5.
சஹர்..
இஸ்லாமிய கிராமங்களில் நோன்பு இரவுகளில் பக்கீர் வருகைகள் மிக மிக குறைந்தவரும் காலத்தில் வழுத்தூரில் பக்கீர்கள் சஹர் நேரத்தின் "துயில் எழுப்புதல்"
 செய்வது மதுரமான நிகழ்வாகிறது.. இது தேவைதானா நவீன வசதிகள் உண்டே, நள்ளிரவுநேரத்தில் அமைதியை கெடுக்க "தப்பொலி" ஓசை தேவைதானா என சில நவீன சித்தாந்திகள் கேட்க கூடும்,..
மெல்ல அழிந்துவரும் கலைவடிவங்களில் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று ..
..
இப்போதெல்லாம் பக்கீர்களை காண்பதறிதாய் போய்விட்டது .. பக்கீர் என்பதன் பொருள் கூட இன்றைய பக்கீர்களுக்கு தெரிவதில்லை என்பதுதான் வேதனையான விடயம் ..
.. 
பக்கீர் எனும் பகீீீர் எனும் மூலச்சொல் (பாரசீகம்)  வந்தது தன் எல்லா தேவைகளுக்காக இறைவனை இறைஞ்சுகிற தன்மை அது ஆன்மீக தேவையாகவும் உலகளாவிய தேவையாகவோ இருக்கலாம்  என்பதிலிருந்தே அவர்கள் "துறவிகள் " அல்ல என பொருள் கொள்ளலாம் ..
..
தமிழகத்தில் நாடோடிகள் (சங்ககாலம் முதல் சமகாலம் வரை) நூலில் அ. வசந்தா அவர்கள் எழுதிய ‘பக்கீர்’ கட்டுரையில்
பக்கீர் என்பவர் தன்னிடத்தில் யாதொரு சொத்தில்லாமலும், யாதொரு தொழில் செய்யக் கூட்டாமலிருப்பவனாகவும் அவனிடத்தில் ஒரு நாளுக்குப் போதுமான உணவும் முழு உடுப்பும் இருந்தால் அவன் பக்கீரல்ல” என்பது பொது வழக்கு.. பொருளாதாரத்தில் வசதி படைத்தவர்கள் பக்கீரல்லர் என்பதையும், எவ்வித வருமானமும் இல்லாமல் வாழ்பவர்களே பக்கீர் என்பதையும் இதன்வழி அறியலாம்” .. என்கிறார்
..
பக்கீர்கள் யாசகம் பெறுபவர்கள்  அல்ல அவர்களுக்கென்று பாரம்பரிய பெருமிதங்கள் உண்டு .. 
இஸ்லாமிய ஞான இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையும், பரிச்சியமும் கொண்டவர்கள். தொன்மையான இசைக்கருவிகளை இசைக்கக் கற்றிருப்பார்கள். பார்வையில், பேச்சில், கனிவு, நன்னடத்தை, பற்றற்றத் தன்மை, இசையில், இறைப்புகழில் தோய்ந்து விடுதல் நாடோடிக்குணம் அவர்களின் இயல்பு இவையெல்லாம் ஒருகாலகட்டத்தில் இஸ்லாமிய சமூக மலர்ச்சியில் தேவையற்றதாக அல்லது இஸ்லாம் எடுத்தியம்பாததென பேச்சு வர தொடங்கியதிலிருந்து எல்லாம் மாறிப்போனது 
..
சூபித்துவத்தை ஒருபுறமும்  இறைநேசத்தை மறுபுறமும் கொண்டவர்கள் மனிதகுலநேசத்தை கொண்டு எளிமை பரந்த நோக்கு சமய உணர்வு கொண்டவர்கள் ஆனால் காலபோக்கில் ஏக இறைவனுக்கு மாறுபடுவதாக சொல்லி இவர்களை இஸ்லாமிய சமூகத்தின் "நவீனர்கள்" மெல்ல புறக்கணிக்க தொடங்கினார்கள்
இவர்களின் உடை இஸ்லாமிய பொது சமூகத்திலிருந்து மாறுபட்டு பச்சை /வெள்ளை தலைபாகை கண்டமாலை பாசிமணி ஜிப்பா என மாறுபடுவதும் நாடோடி வாழ்வியலை கொண்டதும் இவர்கள் இஸ்லாமிய சமூகத்திலிருந்து ஒடுக்கபட காரணங்களில் ஒன்றாகியது 
..
இன்றைக்கு மிகவும் புறக்கணிக்கபட்டவர்களாக பக்கீர்கள்
இருக்கிறார்கள் பழைய மரபுகள் புதிய  வழிதடங்களில் பயணிக்க முடியாமல் வாழ்வாதார நெருக்கடியால் பிற தொழில்களுக்கு சென்றுவிட்டார்கள் .. அர்ப்பணிப்போடு கலைநயமிக்க இறைநேசபாடல்களில் ஒலித்து சமயநெறிகளை பின்பற்றிவந்த சமூகம் இஸ்லாமிய சமூகத்தாலேயே தேவையில்லாத நிலைக்கு ஆளாகி பக்கீர்கள் வரவும் குறைந்து போய்விட்டது ..
..
வழுத்தூர் தொன்மைகளை கைவிடாமல் காத்துநிற்பதில் பெருமிதம் தோன்றுகிறது .. இது நம்பிக்கையை எல்லாம் மீறி நல்ல கலைவடிவ நாடோடி தென்றல் வீசுவதை ரசிக்கவும் போற்றவும் துணை நிற்கவும் வேண்டியது கடமை ..
எல்லோரும் பக்கீர் ஆகிவிட முடியாது .. 14 நாட்கள் தவமிருந்து தலை முதல் பாதம் வரை ரோமங்களை நீக்கி இறைந்தவரை போல  சடங்குகள் செய்து கபனிட்டு அடக்க செய்யவேண்டும் .. சிறு துவாரத்தில் காற்று புக சில மணிதுளிகள் பீர்மார்களும் பக்கீர்களும் பைத் பாடி மீண்டும் தோண்டி எடுத்து  அவரை பக்கீர் ஆக்குவார்கள் .. இப்போதெல்லாம் "அடக்கம் " செய்யும் சடங்கு தவிர்க்கபடுகிறதெனும் பக்கீராக சில வரையறைகள் உண்டு .. இஸ்லாம்  ஏற்கிறதா என்ற கேள்வியும் இவர்கள் வாழ்வில் பெரும் நெருக்கடியைதந்ததென்றாலும் தமிழ்நாட்டில் பக்கீர்கள் வரவும் பெருக்கவும் பெருமளவில் குறைந்ததென்பதை மறுக்க முடியாது ..
..
மிகசிறந்த கலையோடு கூடிய வாழ்வியலை வாழ்ந்தவர்கள், நெறியோடும் புகழோடும் நல்ல குரலவளத்தோடும் ஞான பெருக்கோடும் வாழ்ந்த சமூகம் 
பக்கீர் சமூகம் .. இனி வரும்காலங்களில் ...?
..
ஆலஞ்சியார்
..
6..
ஆன்மீகம்..
ஒருவகை பொய்.. இங்கே மதம் கடவுள் உள்ளவரை இந்த ஏமாற்றும் வித்தை அரங்கேறிக்கொண்டே இருக்கும்.. அவரவர் வசதிக்கேற்ப தங்கள் நிலைநிறுப்பை காட்டிக்கொள்ள பொய் எனும் ஆயுதம் அவர்களுக்கு உதவும்..
மதம் சொல்லும் போதே தலைக்கேறிய போதையாய் நம்மை சூல் கொள்ளும் எதையுமே ஏனென்று கேட்காமல் சொல்வதை ஏற்க நம் மூளையின் GOD பகுதியை சலவை செய்யும்..
மனித தேவைகளை மறந்த தெய்வத்தின் நிலை தேடும் போலி பாசாங்கு வரும்.. ஞானமெனும் அறிவை மழுங்கடித்து மெய்ஞானமெனும் பூச்சுற்றும் வேலை செய்யும்.. ஞானமென்றால் அறிவு அறிவெனில் அது தெளிவென்றே பொருள்.. பிறகெதற்கு மெய்யென்று பொய் சொல்லும் கூத்து .. 
..
ஆன்மீகவாதிகளை கூர்ந்து கவனியுங்கள்.. 
கவனமாக நம்மை அவர்கள் பக்கம் இழுப்பார்கள் ..எப்படியென்றோ ஏனென்று கேள்வி எழுப்பினால் .. நம்மை புறக்கணித்து சரிவராதென்றும் ஏன் 
 நம்பிக்கையில்லாமல் வந்தீர் என்பார்கள்.. ஆன்மீகவாதிகளின் ஆயுதம் பொய் .. மக்களின் பயம்/பலவீனம் அவர்கள் மூலதனம்.. வேதம்  கடவுளோடு தொடர்பு மனிதனின் செயல்பாட்டால் விளையும் கெடுதிகளுக்கு..  பரிகாரங்களென 
நம்மை மடமையில் வீழ்த்தும் வித்தை அறிந்திருப்பார்கள்...
துறவு அல்லது இல்லறத்தை விடுதல் என்பது இயற்க்கைக்கு முறணானது.. காமம் இயல்பான நமது ஆசைகளின் வடிகாலாய்.. இன்பமெனும் நிலையை அடைதல்.. இங்கே காமம் அசிங்கமாக பார்க்கபடுவதும்.. அதை தவறென்றும் கற்பென்றும் கட்டுபாட்டை கடுமையாக்கியதும் ..
ஒழுக்கமென்று நம்பவைத்ததும் .. காமத்தில் திருட்டுத்தனம் வந்தது அதற்கு ஆன்மீகம் பெருந்துணையானது.. எந்த ஜீவராசியும்  காமத்தை அழுக்காகியதில்லை மதம் பேசும் பித்தர்கள்..மக்களின் பலவீனத்தின் மீதே வீற்றிருப்பார்கள்.. சில செப்படிவித்தைகள் அறிந்திருப்பர்.. அதைவிட கடைசி ஆயுதமாக காமத்தில் நம்மை நிறுத்தி .. ஒருவகை ஆசையை தூண்டி அடிமைபடுத்தும் வேலை நடக்கும்.. காமம் அழகு.. எந்த ஜீவராசியும் காமத்தை அசிங்கமென்றதில்லை மனிதனை தவிர அதை திருட்டுத்தனமாக அடைய இந்த ஆன்மீகம் துணைக்குவரும்..
..
ஆன்மீகம் பேசுவோரை மதபோதகர்களை  பாருங்கள் தான் மட்டுமே சரி தன் கடவுள் மட்டுமே சரி .. நாம் மட்டுமே நேரான பாதையில் செல்கிறோமென்று மூளைச்சலவை நடத்துவர்.. ஒருவகை போதை தரும் சொற்களால் நம்மை கட்டி போடும் சாகசம் அறிந்து பிற வழிபாடுகளின் மீது வெறித்தனமான வன்மத்தை 
விசவிதையை தங்களை பின்பற்றும் மக்களிடம் விதைக்கும் கேடுகெட்டவர்கள் தங்களுக்குள் போட்டிவந்துவிட்டால் அவர்களின் கடந்த கால நிகழ்கால அசிங்கங்களை பொதுவெளியில் வைத்து அதற்கு இறைவனை துணைக்கழைத்து விவாதிப்பார்கள்.. ஒருவரின் தனிப்பட்ட விடயத்தை நாம் ஏன் தெரிந்துக்கொள்ளவேண்டும் பேச வேண்டுமென்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் நான் யோக்கியன் அவன் அயோக்கியன் என்கிற ரீதியில் கதைப்பதற்கு பெயர் இவர்கள் மொழியில் ஒழுக்கம் ..
..
இப்போதெல்லாம் ஆன்மீகம் ..அரசியலென்று ஆகிவிட்டது அது எவ்வளவு தீமையை தருகிறதென்பதற்கு நடந்தேறும் நிகழ்வுகளே சாட்சியம் வகிக்கின்றன.. எதை உண்பது என்பதில் தொடங்கி எதை செய்யவேண்டும் எதை பேசவேண்டுமென திணிக்கிறார்கள்.. எதுவாகயிருந்தாலும் அது திணிக்கபடுமேயானால் அது மக்கள் மனங்களிலிருந்து அறுந்துவிழும் .. 
இந்த உலகில் மனிதம் பேசுகிற இல்லாததை இல்லையென்று உரக்கசொல்லி .. பொய் புரட்டு இதிகாசம் வேதம் சாதி சடங்கு என மூடமும் மடைமையை புறக்கணித்து அறிவின் நிழலில் நிற்கிற இயற்கையை அதன் வழியில் நம்புகிற  வழிமுறையே  காலம் கடந்தும் நிலைக்கும் அதற்கு பெயர் நாத்திகமென்றால் அதுவே உலகிற்கு அமைதியை செழிப்பை உயர்வை நம்பிக்கையை ஒற்றுமையை தரும்.. மதமென்பது ஒருவகை பிரிவினை அதில் கடவுள் ஆன்மீகம் என்பதெல்லாம்.. ஒருவகை ஏமாற்று.. இது எல்லா மதத்திற்கு பொருந்தும்.. நானே உயர்ந்தவன் என்மதமே சரியென்கிறதைவிட அயோக்கியத்தனம் வேறேதுமில்லை..
..
அன்பே சிறந்த வழி..
..
ஆலஞ்சியார்..
..
7..
ஊடக அறம் ..
நீங்கள் கற்றுக் கொள்ளவேண்டிய இடம் ஒன்றுண்டு .. ஆம்  எப்போதும் "அறம் வெல்லும்" என்று நம்பிக்கையோடு நின்ற பேரருள் செல்வம் .. எத்தனை கீழ்த்தரமான செயல்கள் வந்து மோதி நின்றபோதும் அறம் தவறாமல் ஊடகத்தின் பொருள் உணர்ந்து செயல்பட்டவர் .. எத்தனை விலைபேசல்கள் மிரட்டல்கள் வந்தன .. மிசா ஒன்று போதும் முழுவதுமாக முடக்கபட்ட போது கூட துண்டு சீட்டில் அச்சடித்து மவுண்ட் ரோட்டில் விநியோகம் செய்த அறம் .. பொய்களால் வலைப்பின்னி நகரமுடியாமல் செய்திடலாம் என்ற போதும் கொள்கை உறுதியோடு நின்றாடிய அறம் .. குடும்பத்தை கேலி பேசியும் வஞ்சகத்தோடு இட்டுகட்டி மானம் கெடுக்க நினைத்த போதும் இவன் ஓடிவிடுவான் என நினைத்தோரை எதிர்த்துநின்று புன்னகையால் சாய்த்த அறம் 
அந்த அறத்திற்கு கருணாநிதி என்ற பெயருண்டு 
..
இன்றைக்கு உத்தமர் போல் வேடமிட்டு இனத்தையும் பண்பாட்டையும் சிதைப்போரிடம் கைட்டி நிற்போர் .. சில ஆயிரங்களுக்கு விலைபோகும் கயமை.. நெறியில்லா நெறியாள்கை தகுதியில்லாதோரிடம் ஊடகம் சிக்கி தவிக்கிறது .. கொள்கையை பேசுங்கள் சரியோ தவறோ உங்களுக்கென்ற பாதையை தேர்வு செய்து களமாடுங்கள் .. தவறென்றாலும் உங்களின் உறுதிபாடு முக்கியம் இன்றைய தவறு நாளை விளங்கங்களோடு சரிசெய்ய இயலும் .. ஆனால் விலைபோனால் "அடிமாடு" தான் 
..
ஊடகத்துறையை தேர்வு செய்யும் போது கொஞ்சமேனும் நன்மையோடு, மக்களுக்கு சேதியை கொண்டு சேருங்கள் .. நடுநிலை என்பது ஒருவகை இயலாமை .. தெளிவோடு பயணிக்க மறுப்பவர்களின் தடுமாற்றதிற்கு மறுபெயர் ..  இன்றைய ஊடகத்துறையின் நிலை பரிதாபத்திற்குரியதாகிவிட்டது .. நாட்டுநலன் மக்கள் நலன் என்பதெல்லாம் பணத்தை கொண்டு தீர்மானிக்கபடுவது கேவலமான ஒன்று ..  
..
கலைஞரை போல ஊடகத்தை கையாள முடியாது தலைவனாகவும் மூத்த பத்திரிக்கையாளனாகவும், எதிர்கருத்து கொண்ட பத்திரிக்கைகளுக்கு/பத்திரிக்கையாளர்களுக்கு முன்னுரிமை தருவாதாகட்டும் ..  
அதே நேரம் செய்தியில் உண்மை கெடாமல் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற அக்கறை .. ஜனநாயகமாண்பு கெடாமல் கையாண்டவிதம் .. ஒவ்வொருவரும் கற்கவேண்டிய பாலபாடம் .. அரசியலில் மட்டுமல்ல ஊடகத்திற்கும் கலைஞர் பெருமகனின் வாழ்வு புதிதாய் வருவோருக்கு அரிச்சுவடி 
..
இளம் ஊடகவியலாளர்களே 
நெஞ்சுரத்தோடு வாய்மை வெல்லும் என நம்பிக்கையோடு அறத்தின் பக்கம் நில்லுங்கள் .. விலைபோனவர்கள் விலாசம் தெரியாமல் போன வரலாறு நிறைய உண்டு .. 
அறம் வெல்லட்டும் 
ஆம் அறமே இறுதியில் வெல்லும் 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment