பக்கீர் சேக்மைதீன்..
நெல்லை தந்த பக்கீர்..
பக்கீர் எனும் சொல் தன்னை இழந்து மெஞ்ஞானச்சுடரில் கரைந்து உலகாசபாசங்களை மறந்து வாழும் வாழ்வு.. ஒரு நாடோடியைப்போல ..
தமிழக இஸ்லாமிய வாழ்வியலில்
இவர்களின் பங்கு தவிர்க்கமுடியாதது .. இப்போதெல்லாம் அரிதாகிப்போன பக்கீர்கள் வரவு நல் இசைகீதங்களை பாடி தப்ஸ் அடித்து இறைஞ்சிவாழும் எளியவாழ்வு .. (இந்துமதத்தில் பிராமணர்கள் எப்படி அடுத்தவரை அண்டி இறைஞ்சி வாழ வேண்டுமோ அதைப்போல வாழவேண்டும்) .. இவ்வுலகில் ஆசைகள் துறந்த வாழ்வு .. துறவுநிலை அல்ல.. (துறவறம் இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை)
இவர்கள் இஸ்லாமிய வரலாறுகளை அரபுலகின் மகான்களின் வரலாறுகளை பாடி திரியும் வானம்பாடிகள் .. இவர்களுக்கென்று (பாதை) தரிக்கா பகுதாத் அரசர் முஹையத்தீன் ரலி அவர்களின் வழியொத்தது ..
..
ரிஃபாய் தரிக்காவில்
தாயிரா(தப்ஸ்) கொண்டு
இஸ்லாமிய ஆன்மிக பாடல்களை பாடுவார்
நூர் மசாலா ...
முஹையத்தீன் மாலை ...
பாத்திமா, மற்றும் எண்ணற்ற
நபிமார்கள் வரலாறுகளை பாடி மக்களை மகிழ்வித்தவர் சேக்மைதீன் பாவா..
..
வழுத்தூருக்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்புண்டு .. கோடைகால இரவுகள் இவர் வருகையால் "இஸ்லாமிய கலை இரவுகள்" களைகட்டும் .. கீழத்தெரு நிறைய மார்க்க பிரசாரங்களின் மேடையாகி இருக்கிறது .. நூறுமசாலா எழுநாட்கள் பத்துநாட்களென இரவுகள் களைகட்டும் ..காந்த கம்பீரகுரலில் இவர்பாட துணைக்கு மூவர் துதிபாட ரசனை மிகு காலமது ..
வழுத்தூர் பக்கீர் ஹபிபுல்லாசா அழைத்துவருவார் நல்ல இஸ்லாமிய கீதங்கள் என அதுவொரு தேனொழுகும் இரவுகள் பக்தி பரசவம் தாண்டி இஸ்லாமிய கலை இரவுகளாய் மிளிரும் ..
இவர் சிங்கை ஹனீபா இசைதட்டிற்காக பாட தொடங்கியதும் இஸ்லாமிய இல்லங்களில் கேசட் வடிவில் ஒலிக்க தொடங்கியதும் இவர் நிகழ்ச்சிகள் குறைய தொடங்கி பிறகு காணாமல் போனது
..
நல்ல குரல் வளம் நயமாக எடுத்தியம்பும் திறமை கோர்வையாக வரலாற்றை செப்பும் விதம் இடையிடையே தன் சகாக்களை கொண்டு ஆமாம் சொல்ல சொல்லியும் கேள்வி எழுப்பியும் ரசனையை கூட்டி களைகட்ட வைப்பார் .. முதியவர்கள் பெண்கள் இளந்தாரிகள் எல்லோரும் திண்ணைகளில் அமர்ந்தும் தெருக்களில் பெஞ்சில் அமர்ந்தும் இவரின் குரலில் மயங்கி லயிப்பார்கள்.. அதுவொரு கனாக்காலம்
..
திருநெல்வேலி பொட்டல் புத்தூர்
சொந்த ஊர் .. இவரின் குரல் ஒலிக்காத இஸ்லாமிய கிராமங்கள் இல்லை ..நாகூர் கூட்டில் இவரின் குரல்கேட்டு மயங்கும் பறவைகள் ஏராளம்.. நல்ல உள்ளம் படைத்த தனித்திறமை வாய்ந்த பாடகர் .. சொல்லில் சுவைக்கூட்டி இசைக்கும் ஆற்றல் மிகு பாட்டுக்காரன் .. சில நினைவுகள் வந்து போகிறது ..
இவரின் மகள் என் பெரியம்மா வீட்டில் உதவிக்கு இருந்தார்.. எங்கள் வீட்டில் நீண்டகாலம் சமையல் பொறிப்பேற்றிருந்த பீபாத்துபூவா தனக்கு உதவிக்காக அழைத்துவந்து வைத்திருந்தார்கள் .. ஒரு முறை குற்றாலம் சென்ற போது மறைந்த பக்கீர் லியாகத் அலியும் தம்பிம்மாவும் பொட்டல்புத்தூர் வரை சென்று இவரை பார்த்துவந்தோம் .. உடனே எங்களை அழைத்துக்கொண்டு பாபநாசம் வரை சென்று தாமரபரணியில் குளித்துவிட்டு வரும் போது "மாங்குயிலே பூங்குயிலே " என்ற பாடலை பாடிய போது மெய்மறந்து ரசித்து நின்றதெல்லாம் நெஞ்சில் ரீங்காரமாடுகிறது ..
..
தமிழ் முஸ்லிம் கலாச்சாரங்கள் மெல்ல மறைய அல்லது மறுத்து இவையெல்லாம் "சம்பூர்ண" இஸ்லாத்தில் இல்லையென விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு நல்ல நிகழ்வுகள் மக்களை மகிழ்விற்கும்
விடயங்கள் மறைந்து போனது ..
இஸ்லாமிய கோட்பாடுகளை மீறாத மக்கள் மனம் கவர்ந்தவைகள் இந்த மண்ணின் கலையோடு கலந்த கலைகள் .. பக்கீர்கள் மிக மோசமாக நடத்தபட்டதும், வருவாய் இல்லாத சூழலும் இன்று பல வழிதோன்றல்கள் பல்வேறு தொழில் தேடி சென்றுவிட்டார்கள் இருக்கும் சிலரையேனும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் .. எல்லோராலும் பக்கீர் ஆகிவிடமுடியாது ..
..
நல்ல குரல் வளமும் சொல் ஆளுமையும் ஏற்ற தாரிக்காவில் ஒழுங்கு குலையாமல் இஸ்லாமிய மக்கள் நெஞ்சில் நிறைந்திருந்தவர் சேக் மைதீன் பாவா ..
நாலு பக்கீர்களின் குரல் இன்னமும் சிலர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment