தகப்பன்சாமி..
இனம் காத்தவனே..
இடறுகள் ஒருபோதும் உம்மை தளர்த்தியதில்லை
சண்டை போட்டுக்கொண்டே இருந்தாய்
பகைவன் உன் ஆற்றல் கண்டு
வாளெடுக்க மறந்ததுண்டு
உன்
தமிழ் எதிரியையும் மயக்கியதுண்டு..
உன்னைப் போல் ஒருவன்
இனி வருவானா..
உன் நாதம் எழும் போதெல்லாம்
சமூகம் நீதி கண்டது
உன் குரல் பகையை வென்றது
நீ
அண்ணாவிடம் இதயத்தையும்
ஆசானிடம் (பெரியார்) துணிவையும்
காயிதெமில்லத்திடம் கண்ணியத்தையும் பெற்றவன்
உனை வெல்ல எவனுமில்லை என்றாலும்
நிதானம் இழக்காமல் நின்றாடினாய்
..
14 வயதில் தமிழ்க்கொடியேந்திய
நீ..
செம்மொழியாய் தமிழை உயர்த்தி
நாணயமற்ற கிறுக்கர்களின் வாயடைத்தாய்
எண்பதாண்டுகள் பொதுவாழ்வு
நாதியற்ற மக்களின்
நடுவொடிந்த மனிதர்களின்
ஒடுக்கபட்டவனின்
தாழ்ந்துநின்றவனின்
குரலை செவிமடுத்து
அவனோடு களம்கண்டு
சப்தமற்றவரின் குரலாய் ஓங்கியொலித்தாய்
வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் வறியவரின் நிலை உயர்த்தி
மறுக்கபட்டவனின் உரிமையை மீட்டுதந்தாய்..
..
உன்னால் மட்டுமே முடிந்தது
பள்ளத்தில் நிற்போரை
படிகளில் ஏற்றிட ..
பள்ளி செல்லாத பாட்டனின்
பேரன் பட்டதாரியானதெல்லாம் உன்னால்தான்..
மகளிர் கல்வி
இலவச மின்சாரம்
ஊர்தோறும் பள்ளி
மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரி
நீ..
செய்து முடித்ததெல்லாம்
ஒன்றியம் தொடரவே முப்பதாண்டானது
நீ..
மூலம்
உன் சிந்தனையும் செயலும்
தொலைநோக்குகொண்டது
..
கோவா திரைப்படவிழாவில்
பராசக்தி திரையிட பயந்து
மலைக்கள்ளனை திரையிட்டார்கள்
பாவம் மலைக்கள்ளனும்
நீ தந்தெனயறியாதோர்
உன் வசனம்
இரத்தத்தை சூடேற்றியது
பகைவர் பதறினார்
துரோகிகள் வாயடைத்தனர்
தமிழன்னை சிரித்தாள்
..
தமிழர்களின் திருமந்திரமே
உன் மாயவித்தை கண்டு
மயங்கியவர்கள் உண்டு..
உன் எழுத்து வீரம் பேசியது
கலைப் பண்பாடு மீட்டது..
பகுத்தறிவு துணைக்கொண்டு
நீ..
தீட்டியதெல்லாம் பயன் தந்தது
உனைவெல்ல எவனுமில்லை
உனை தொடராமல் எவனுக்கும்
அரசியல் வாழ்வில்லை
உனைச் சுற்றிய இயங்கவைத்த
ஓய்வறியா சூரியன் நீ.
..
அரசு இயலே
உன் அடிச்சுவடிதான்
அரசியலின் அரிச்சுவடி
உன்னை கற்றுதான்
இனி எவரும்
அரசியல் செய்யமுடியும்
உன் பாதைதான்
தெளிவான அரசியல்பாதை
உனை இகழ்ந்தோ புகழ்ந்தோ
பிழைத்தவன் ஆயிரம்
நீயே.
பொதுவாழ்வின் அன்னம் ..
..
அச்சமன்றவனே..
ஆரூர் தந்த அறிவுச்சுடரே
இடறில்லா பயணத்தில் - உன்
ஈகையால் செழித்ததுதமிழர்வாழ்வு
உன்னை நம்பியவர் வீழ்ந்ததில்லை-என
ஊர்சொல்லும்
எழமுடியாமல் வீழ்ந்தவரையும் உயரத்தில்
ஏற்றிட உழைத்தாய்
ஐயமின்றி இன்று தமிழ்நாடு..
எங்கள் தகப்பன் சாமியே
ஒளிதந்தாய்
ஓங்குக உன் புகழ்..
உன் புகழ் இறவா..
..
எம் ஞானதந்தையே..
நீ தந்ததும் தரமறுத்ததும்
எம் வாழ்வில் பயன்தந்தது
நீ.. யின்றி அமையாது தமிழ்நாடு
உனை மறக்காது தமிழர் நெஞ்சம்
வையம் உள்ளவரை உம் புகழ் நிலைத்திருக்கும்..
வீரவணக்கம்..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment