பேசு..
காற்று
தென்னங்கீற்றின்
காதோடு
கதைப்பதைப்போல..
மலரின்
இதழில்
வண்டமர்ந்து
ரீங்காரமிடுவதைப்போல
மரக்கிளையில்
தொங்கும்
மாம்பழத்தை
அணில் கொறிப்பதைப்போல
மெல்லிய ஓசையில்
பேசு ..
..
காவிரிப் படுகையில்
மயில் தோகைவிரித்தாட
மேகம்
தராத மழைப்பொழுதில்
(இருண்ட வானம்)
தென்னமரத்தில்
அணில் குதித்தேறும்
அழகிய தருணம் ..
சின்ன சின்ன குரலில்
கிளிகளும் குருவிகளும்
இசைபாட
மெய்மறந்து நான் நிற்கையில்
பழங்கதைகள்
நெஞ்சில் நிழலாட
பூமி அதிராமல்
நடைபோட்டு வந்து
காதருகில்
ஏதோ சொன்னாய்..
..
பேசாத மொழியில்
பேசி தீர்க்க
எண்ணமெல்லாம்
வழிந்தோடும்
எண்ணற்ற சொற்கள்
சுவைகூடிய நளினம்
அகந்தையற்ற அன்பு
காவிரி பெருவெள்ளத்தில்
மிதந்துவரும்
ஒற்றை இலையைப்போல
தனிந்திருந்தேன்
உன் கரம் ஏந்தாதா என..
பூவரசம்பூ நிறத்தில்
ஒற்றை ரோசா
உன் கூந்தலுக்கு அழகுதான்
ஆனால்
மல்லிகை சரம்
உன் நெஞ்சில்
தொங்குமழகுபோலில்லை..
சத்தமில்லா கொலுசு
எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை
வருமொசை அறிவிக்காமல்
அதென்ன ..
..
கரம்கோர்த்து
கரையோரம்
நடந்ததெல்லாம்
கனவாகிப்பேனாலும்
மழை நின்று
இலை சிந்தும் துளியில்
மரத்தில் சாய்ந்து
தந்த முத்தம்
நெஞ்சில்
வரைபடமாய் ..
லோலாக்கின்
நடனத்தில்
பித்தனைப் போல்
கவிதை பேசியதும்
கைநீட்டி காற்றையளந்து
விரல்கொண்டு முகத்தில் வரைந்த ஓவியம்
நதியோரமர்ந்து
ஓடும் நீரில்
காலடித்து
சன்னகுரலில்
பாடி மகிழ்ந்தது
எப்போது
குடமுருட்டி வந்தாலும்
நிழலாடுகிறதே
..
வா..
வந்து பேசிவிட்டு போ
வேண்டாவெறுப்பாய்
சிலவார்த்தையெனினும்
அது
தென்றலைப்போல சுகம்தருமே
உன் குரலில்
சிலவரிகள்
அது இசையாகுமே..
புத்தகப்புழு என
கிண்டல்
செய்ததைையெல்லாம்
மறு பதிப்பு செய்துவிட்டு போ
காதல்
எத்தனை இனிமை ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment