Friday, June 24, 2022

25.6.1975...
#கறுப்புதினம்

இன்றைய இளைய சமூகம் அதிகம் அறிந்திராத நாள்...
அவசரநிலைபிரகடனம். எமர்ஜென்ஸி. மிசா... MISA - Maintenance of internal Security Act...
..
இந்திய சட்ட செயலாக்க பிரிவினருக்கு அதிகாரம் வழங்கி சட்டம் நிறைவேற்றப்பட்டது. எந்தவொரு தனிநபரையும் கைது செய்யலாம். அவரது செயல்பாடுகளை  முடக்கலாம். அவரது உடமைகளை பறிமுதல் செய்யலாம். இச்சட்டம் அதிகளவில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டது...

இந்தியாவின் இரும்பு பெண்மணி என அறியப்பட்ட இந்திராகாந்தி செய்த மாபெரும்  #வரலாற்றுப்பிழை...

நாடெங்கும் ஜனநாயகவாதிகள் சிறைப்பிடிக்கப்பட்டார்கள். கருத்து சுதந்திரம் நசுக்கப்பட்டது. பத்திரிக்கைகள் சென்சார் (தணிக்கை) செய்து வெளிவந்தது...
தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்பட்டதும் இந்த மிசா காலத்தில் தான்...

மகோரா (எம்ஜிஆர்) போன்ற ஜால்ராக்கள் இந்திராவின் நடவடிக்கையை எதிர்க்க அஞ்சி வாய்மூடியாய் இருந்தனர்...
காமராஜரைக் கைது செய்யவேண்டுமென்ற கோரிக்கையை நிராகரித்த கலைஞர், ஆட்சி போனாலும் பரவாயில்லையென காமராஜரை கைது செய்ய மறுத்தார்...

மிசாவில் திமுகவினர் அதிகளவில் சிறைச்சென்றனர். மாறன் தளபதி  உள்ளிட்டோர் ஒருவருடம் கொடும்சிறையில்... ஆனால் அப்போது வெளியே ம.கோ.ரா(எம்ஜிஆர்) டூயட் பாடிக்கொண்டிருந்தார். இவரையெல்லாம் புரட்சிதலைவனாக்கிய தமிழகம் செய்த மாபெரும் தவறு ஜனநாயகத்தின் ஆணிவேரையை அசைக்க தொடங்கியது எனலாம்...

மிசாவில் கூட கலைஞர் தன் எழுத்தை நிறுத்தவில்லை மாறாக உடன்பிறப்புகளுக்கு புரிகிறமாதிரிதான்  எழுதிக்கொண்டிருந்தார்.. 
யாரெல்லாம்  அண்ணா நினைவிடத்திற்கு வரவில்லையென எதிர்மறையாக எழுதினார்.. படிக்கிறவர்களுக்கு கலைஞர் எழுத்தை புரிகிறவர்களுக்கு புரியும்..  கலைஞர் முரசொலி இதழை அச்சிட்டு  மவுண்ட்ரோட்டில் (அண்ணாசாலை) மக்களுக்கு வழங்கிய வரலாறெல்லாம் நடந்தது .. அன்று முன்தினம் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சர்  நடுரோட்டில்
பத்திரிக்கை விநியோகம் செய்துக்கொண்டிருந்தார் .. மக்களிடம் தன் கருத்து/செய்தி  செல்லவேண்டும் என்ற உறுதியோடு செயல்பட்டார் .. என் எதிராளி என்றிருந்தும் சோவிற்கு துக்ளக்கை அச்சடித்து தந்தார் .. கூட இருந்த கோமாளிகள் சிறைக்கஞ்சி ஓடியொளிந்த போதும், அஞ்சாது அவசரநிலை பிரகடனத்தை எதிர்த்தவர் .. தன் மகனை
M. K. Stalin 
கைது செய்து அழைத்து சென்ற போதும் 
சமரசம் செய்துக்கொள்ளவில்லை .. எதிர்ப்பதில் மூர்க்கமாகவும் அணைப்பதில் அன்போடும் வாழ்ந்த மாபெரும் தலைவன் 
இப்படியொரு தலைவரை இந்திய ஒன்றியம் கண்டதில்லை
நடுரோட்டில் கலைஞரை காரையோட்டிய துரோகி பண்ரூட்டி ராமசந்திரன் நிறுத்திவிட்டு ஓடியதும் அந்த காரை கண்ணப்பன் ஓட்டிவந்ததும் அதனால் காரோட்டி கண்ணப்பன் என அழைக்கபட்டதும் இன்றைய தலைமுறை அறியவேண்டும்
..
இந்திய ஒன்றியத்தின் ஜனநாயகத்தை காத்து நின்ற போர்வீரன் .. வடஇந்திய தலைவர்களுக்கு பாதுகாப்பான இடமாக  தமிழ்நாடு இருந்ததில் கலைஞரின் நாட்டின் மீது கொண்டிருந்த நம்பிக்கையும் ஜனநாயகத்தை காக்க வேண்டுமென்ற உறுதியும் தெரியும்..
ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் சிலர் கலைஞரின் நெஞ்சுறுதியை கண்டு படிக்கலாம் ..
..
மிசா இந்திய ஜனநாயகத்தில் கரும்புள்ளியாக இருந்தது...

25.6.1975 - கறுப்புதினம்...
..
ஆலஞ்சியார்

Thursday, June 23, 2022

OPS..
எங்கு தோற்றார் ..
அரசியல்வாதியின் அடிப்படை தகுதிக்கு கூட தன்னை தயார்படுத்திக்கொள்ளாதவராகவே வலம் வருவதும் எடுப்பார்கைப்பிள்ளையாகவே இருப்பதும் பின்னடைவை தந்திருக்கிறது ..
..
சசிகலா தன்னை பதவி விலக சொன்ன போது விலகி சில நாட்களில் "கேட்பார்" பேச்சை கேட்டு தர்மயுத்தம் இருந்தபோதே அவரின் சரிவு தொடங்கிவிட்டது.. குருமூர்த்தியின் சூழ்ச்சி இரையானது தெரியாமல் நாடகமாட "அத்தாட்சி" வேறொரு முடிவெடுக்க அது தவறென்றாலும் கீழ்நோக்கி பயணிக்க தொடங்கினார் பன்னீர் ..
பழனிசாமி காரியம் ஆகும்வரை காலை பிடித்துவிட்டு பின் வாரிவிட "அத்தாச்சியும் "  அரசியல் அபலையாக நிற்க வேண்டிவந்தது 
..
அதிமுகவை காப்பாற்றுவதாக எண்ணி பழனிசாமியோடு கைகோர்த்ததும் "மோடி" சொன்னதால் துணை முதல்வரானேனென பொதுவெளியில் உளறி தன்னை ஒரு பலவீனமானவராக காட்டிக்கொண்டார் .. கட்சிபதவி அல்லது அரசு பதவி இரண்டில் ஒன்றை தந்தால் இணைய தயாரென அன்றைக்கு காய்நகர்த்தியிருந்தால் இன்று கட்சியின் மிக முக்கியமானவராக தெரிந்திருப்பார் .. பன்னீரை பலிகேடாக்கி பாஜக மிக சாதூர்யமாக தனக்கு இசைவான ஒரு ஆட்சியை கொண்டு தமிழகத்தின் வளர்ச்சி நலன் உரிமைகளை பறித்து மெல்ல மெல்ல வடவருக்கு வாசல் திறந்து தனித்துவமாக இருந்த தமிழகத்தில் கலப்படம் செய்து காரியம் சாதித்துக்கொண்டது .. நீட் விடயத்தில் யாரையும் கலந்தாலோசிக்காமல் ஆர்எஸ்எஸ் வளர்ப்பு மானங்கெட்ட பாண்டியராஜனை கொண்டு கையெழுத்திட வைத்ததும், தமிழகத்தின் வேலைவாய்ப்பில் தமிழருக்கான உரிமையை காவு கொடுத்ததும், காவித்தனம் குடியேற வழிவகுத்ததும், தகுதியற்ற அடிமைகளால் தமிழகம் இழந்தவைகள் .. இன்னும் நிறைய..
..
பொதுக்குழுவில் தனக்கு ஆதரவில்லை என்பதை உணர்ந்து வெளிநடப்பு நடத்தி சிக்கலாக்கியிருப்பது தற்காலிக தீர்வு தான் .. பன்னீரை கை கழுவ தயாராகி வருகிறது பழனி தரப்பு .. வலுவான தலைவரல்ல எனினும் சரியாக காய்நகர்த்தி அதிமுகவை 
கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்திருக்கிறார் .. தொடர்ந்து விட்டு கொடுத்தே பழகியப்போன பன்னீர் இன்று கையேறுநிலையில் .. இந்த கூடாரம் சிறுக சிறுக உடைத்தெறிய வேண்டும் என்பதில் பாஜக அதிகம் கவனம் செலுத்துகிறது .. தொடர்ந்து இருசாராரும் எதிரெதிராய் நின்றால் பாஜக வலுபெற உதவும்.. 
பிரதமர் சொன்னதால்  துணை முதல்வர் பதவியை ஏற்றேன் என்ற சுயபுத்தியில்லாமல் செயல்படும் பன்னீரின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் ..
..
பன்னீர் பழனி
இருவருமே பாஜகவின் ஆடுகள் .. எப்போது யாரை பலி கொடுப்பதென முடிவு செய்யும் அதிகாரம் எஜமானருக்கே உண்டு அடிமைகள் தலையசைத்தே தீரவேண்டும்.. அதிமுக பலவீனபடுத்துவதைவிட 
கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்ற நாக்பூரின் திட்டம் அது செயலாக்க தொடங்கியிருப்பது வெளிப்படையாக தெரிகிறது.. அன்றைக்கு பன்னீரையும் பழனியை கைக்கோர்த்துவிட்டவர்கள் இன்று வெளியில் இருந்து கவனிப்பதிலேயே ஆடும் ஆட்டத்தின் சூழ்ச்சி புரியும்..
முதல் ஆடு பலியாகிறது 
..
ஆலஞ்சியார்

Wednesday, June 22, 2022

திரவுபதி முர்மு..
பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் .. பழங்குடியினத்தவர் 
முன்னாள் ஜார்கண்ட் ஆளுநர் ..
பாஜக பெண்ணை நிறுத்தியிருக்கிறது பார்த்தாயா.. அதிலும் பட்டியிலினம் என சிலர் பேச அரைகுறை மனதோடு பேச தொடங்கியிருக்கிறார்கள்
..
அதிகாரமிக்க பதவிகளில் பட்டியலினத்தவரை கொண்டுவருவோமா .. கடந்தகால அனுபவங்கள் இன்றைய குடியரசு தலைவர் கோவிலின் வெளியே நிறுத்தினோமே .. குடியரசு தலைவருக்கு இந்த கதியா என யாரும் வாய்திறக்கவில்லையே.. 
அதிகாரமிக்க பதவிகளில் யார் இருக்கிறார்கள் அல்லது அவர்களை இயக்குபவர்கள் யார் 
அவர்கள் வரைவதுதான் திட்டம் அவர்களின் எண்ணங்கள் தான் சட்டம் ..
திரவுபதி வைத்து ஆடுவதெல்லாம் அவர்களுக்கு பழக்கமானதுதான் ..
..
அப்துல்கலாமை அமர்த்தியபோது  சிறுபான்மையின் அலங்காரமென பேசியதும் அவர் இந்துத்துவாவின் மெல்லிய ரேகை படர்ந்த ஆமாம் எனும் ஆசாமி என்பதும் நாடு கண்டதுதான்.. யார் வந்தாலும் நாக்பூரின் சொல்லுக்கு ஆடும் தலையாட்டி தான்.. பொம்மலாட்டத்தில் எந்த பொம்மையாய் இருந்தாலென்ன..? கயிறு ஆட்டுபவன் கையில் ..
..
எதிர்க்கட்சிகள் நிறுத்தியிருக்கிற 
யஷ்வந்த் சின்கா .. பலகட்சிகளில் வலம் வந்து கடைசியில் மம்தா கட்சியிலிருந்து விலகி இப்போது பொது வேட்பாளர்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜி எனக்கு அளித்த மரியாதைக்கும் அன்புக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இப்போது ஒரு பெரிய தேசிய நோக்கத்திற்காக நான் கட்சியில் இருந்து ஒதுங்கி, அதேசமயம் அதிகமாக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த முடிவை மம்தா பானர்ஜி ஏற்பார் என நான் நம்புகிறேன்.’’ எனக் கூறியுள்ளார்..
..
இன்னும் சில கட்சிகள் முடிவை அறிவிக்கவில்லை மராட்டியத்தில் ஆளும் அரசு ஆட்டம் காண்கிறது .. பொது வேட்பாளர் மெச்ச தகுந்தவரா என்றால் பதில் இல்லை எனினும் வேறு வழியில்லை என்பதே யதார்த்தம் .. வெற்றியை நோக்கி செல்ல சில படிகளே உண்டு ஆனால் 
வெற்றி வாய்ப்பு உச்சியில் 
பொறுத்திருப்போம் .. இது எதிர்க்கட்சிளின் ஒருங்கிணைப்பிற்கு தொடக்கமாக இருக்கட்டும் 
..
ஆலஞ்சியார்

Monday, June 20, 2022

திராவிடம்..
ஆயிரம் ஆண்டுகளாய் அடிமைபட்டு கிடந்த 
இனத்தை தட்டியெழுப்பி .. 
சுயம் மீட்சியை கற்று தந்து.. 
மதம் சாதி கடந்து ஒன்றுபட கற்று தந்தது.. இனம் மொழி பாலினம் மறந்து மனித நேயத்தோடு வாழ சொன்னது ..
அடிமையல்ல நீ.. உன் உரிமையை யாரிடமும் அடகு வைக்காதே.. 
சக மனிதனை பிரித்து பார்க்காதே.. ஏற்றதாழ்வில்லை மனித குலத்தில் உயர்வென்றும் தாழ்வென்றுமில்லை என உணர்த்தியது..
சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளை களைந்து நம்மை நேர்படுத்தியது.. ஈராயிரமாண்டாய் நம்மை சுரண்டி பிழைத்த ஈனர்களை அடையாளம் காட்டியது..  
உனதுரிமையை பறித்துக்கொண்டு உன்னையே கீழானவனாய் சித்தரித்து தொடாதே .. தூர நில் பார்த்தாலே பாவம் .. நிழல் பட்டாலே தீட்டு.. கல்வி கற்க நினைத்தால் ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்று என்றவனை அடையாளம் காட்டியது
..
தாய்மொழியில் சமஸ்கிருதத்தை கலந்து அதுதான் தமிழென காட்டி .. தமிழனின் கலாச்சார பண்பாட்டில் ஆரியத்தை புகுத்தி கடவுள் சாதி வேதமென கதைகட்டி ..
ஏற்றதாழ்வை வாழும் சித்தாந்தமாக்கி .. புனையபட்ட புரட்டை ஆன்மீகமென்ற பெயரில் புராணகதையாக்கி 
தமிழினத்தை சிறுக சிறுக சிதைக்கும் பெருந்திட்டத்தோடு வந்த வந்தேறிகளை 
தடுத்து நிறுத்தியது திராவிடம்..
..
உ.பி.யில் தன் கூட்டாளிகளோடு கோவிலுக்கு சென்ற தாழ்த்தபட்ட பட்டியிலின 
இளம்பெண்ணை அம்மணமாக்கி தெருவில்  நிறுத்தியிருக்கிறார்கள்.. 
அதை  அரசும் கேட்கவில்லை..
இதைதான் உண்ண வேண்டும் என மிரட்டுகிற நிலை.. அதை அங்கே எந்த
அரசியல்கட்சிகளும் கேட்கவில்லை.. காரணம் அங்கே பெரியாரைப்போல சமூக சீர்த்திருத்தவாதி அங்கில்லை .. 
சமூக புரட்சியில் மக்களின் மனநிலையை மாற்றி சமமாக மதித்திட வேண்டுமென மக்களிடம் விழுப்புணர்வை ஏற்படுத்திடவில்லை.. அடித்தால் திருப்பி அடி.. 
உன் துண்டு உன் தோளில் போட யாரை கேட்கவேண்டும்.. உன் காலை உன் தொடைமீது போட யார் மறுப்பது
என சுயமரியாதையை கற்று தர அங்கே நாதியில்லை.. 
பெண்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு ..சமஉரிமை சொத்தில் பங்கென ,சுயம் எழ, நிற்க வழிசெய்தது திராவிடம்
..
இடைசாதிகாரனை கொம்பு சீவி ஆடும் ருத்ரதாண்டவம் .. இங்கேயும் சாதிய மோதல்கள் குடிசையை கொளுத்தும் மாவீரசெயல் நடக்கிறது ஆனால் மீசை வைத்தாலே கொலை செய்ய தூண்டும் ஈனச்செயல் இங்கில்லை.. சாதிய மோதலை சில பாசிசவாதிகள் தூண்டிவிடுகிறார்கள் உ.பி.யைப்போல மத்திய பிரதேசத்தைப்போல சாதிவெறி தாண்டவத்தை இங்கே நடத்திட முயல்கிறார்கள்.. இங்கே இன்னமும் ஈரம் மிச்சமிருக்கிறது .. பெரியாரும் கலைஞரும் தந்த சமூகநீதிக்கான வரையோலை எங்களிடமிருக்கிறது .. திராவிடத்தை வீழ்த்திடலாமென சிலர் கனவு காண்கிறார்கள் .. அவர்களின் கனவு உடைபடும் .. 
..
#திராவிடமாடல்
இளைய தலைமுறையினிடம் திராவிடமே தந்ததைப்பற்றியும் .. இதுவரை தமிழினத்தை காத்து நிற்பதுபற்றியும் பேச தொடங்கியிருக்கிறோம் ..
என்ன செய்ததென வரலாற்று ஆவணங்களோடு கதைக்க தொடங்கியிருக்கிறோம்.. புதியதொரு மறுமலர்ச்சியை நோக்கிய நகர்வாய் மனித குலம் மேம்பட அறிவுகொண்ட பார்வையோடு சமநீதி சமமான பார்வை .. தொலைநோக்கு சிந்தனை ஏற்றதாழ்வற்ற நிலை.. நமது உரிமையை பறிக்க நினைப்போரை இருக்குமிடம் தெரியாமல் செய்து நமது நிலம் நமது உரிமை என நாமே உருவாக்குவோம்..
காட்டிகொடுத்தும் ..
காட்சிதந்தும் பிடிங்கிய உரிமைகள் மீட்டோம்  தொடர்ந்து காப்போம்..
திராவிடம் எமது அரண்..
..
ஆலஞ்சியார்

Saturday, June 18, 2022

இந்தியா எரிகிறது..
இந்தியா ஒளிர்கிறது போய் 
இந்தியா பற்றி எரிகிறது.. 
#அக்னிபாத் ..
..
உலகின் மிகப்பெரிய ராணுவம் நாட்டின் சேவர்கள்களை தனியாரிடமிருந்து கொள்முதல் செய்வதற்கு பெயர் அக்னிபாத் .. 25% விழுக்காடு வேலை  நாலுவருடம் முடிந்ததும் வெளியேறி வேறு பணிகளுக்கு செல்லலாம் .. கடந்த இரண்டர வருடமாக ராணுவ வீரர்கள் தேர்வு  நிறுத்தபட்டதும் பின் தனியார் பயிற்சி என்பதும் திட்டமிடலே .. நாட்டின் பாதுகாப்பில் அக்கறையற்ற செயலாகவே காண்கிறோம்.. 
..
ஆர்எஸ்எஸிக்கு ஆள் எடுக்க  அரசு செலவில் பயிற்சி தர ஒரு ஏற்பாடே தவிர வேறொன்றும் இல்லை .. வடமாநில இளைஞர்கள் கல்வியறிவில் பின்தங்கியவர்கள் ராணுவத்தில் சேருவதை குறிக்கோளாக கொண்டவர்கள் மிகப்பெரியளவில் கலவரம் செய்கிறார்கள் இதற்கு போராட்டம் என பெயர் .. அமைதியாக போராடினால் கலவரகாரன் என வீடு இடிக்கபடும் .. இதுதான் இப்போதைய புதிய இந்தியா ..
..
₹200 கோடி அரசு சொத்துகள் தீக்கிரையாகின.. அரசு சொத்தை சேதபடுத்தினால் அது கலவரகாரரிடமிருந்தே வசூலிக்கபடும் என உ.பி.அரசு சொன்னது ஞாபகம் வருகிறது .. அரசு அதிகாரத்தை
நல்லவர்கள் நாட்டின் மீது தீராத பற்றுடையோர் மக்கள் மீது பேரன்பும் நம்பிக்கையையும் உடையவர்களிடம் கொடுக்காமல் வியாபாரிகளிடம் கொடுத்தால் இப்படிதான் நாசமாகும் .. மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் சொந்தமாக விமானம் இல்லை விமான நிலையங்கள் தனியாரிடம், பொது சொத்துக்களை தனியாருக்கு கொடுத்துவிட்டு மூளை கூட சுமையானவர்கள் நாட்டை குட்டிசுவராக்குகிறார்கள் ..
..
கிழக்கிந்திய கம்பெனியிடம் அடிமைபட்டு கிடந்த நாம் இன்று குஜராத் மார்வாடிகள் கம்பெனிகளிடம் அடகுவைக்கிறோம் .. ஏர்இந்தியாவை நடத்தமுடியவில்லையென திருப்பி தந்ததைப்போல செய்யாமல் இருந்தால் சரி .. எந்தவொரு திட்டமாவது மக்கள் நலன் சார்ந்திருக்கிறதா .. கல்விகூட மதசாயம் பூசி கொள்கிறது .. எங்கும் எதிலும் மதத்தை புகுத்தும் அயோக்கியத்தனம் அதை ரசிக்கும் நடுநிலைவாதம்,எதிர்க்கிறவன் குரல்வளையை கடிக்க துடிக்கும் ஓநாய்கள்.. நீதியை விலைபேசும் கொடூரம் .. எதிரணியை பலவீனபடுத்தி, அதற்காக பலஆண்டுகாலம் காத்திருந்து கோடாரிகளைக் கொண்டே சாய்க்கும் சூழ்ச்சி .. இவையாவும் தற்காலம் பலன் தரும் .. ஆனால் காலம் வலியது திருப்பி பார்க்கும் போது அழிவு தேடிவரும்
..
17 வயது இளைஞர்களை ராணுவ பயிற்சிக்காக தேர்வு செய்வார்கள் என மநு பேசும் ஆளுநர் சொல்கிறார்.. 17 வயதில் கல்வியை தர வேண்டுமே தவிர ஆயுதத்தை அல்ல..  கற்கும் வயதில் சீர்மிகு கல்வி மறுக்கபடுவது எதிர்காலத்தில் இப்படியே வைத்திருந்தால் தான் தாங்கள் நினைப்பதை நடத்தமுடியும் எப்போதும் உயரத்தில் நிற்க முடியுமென்ற "தர்மம்" காக்க நினைக்கிறார்கள் .. பரவலாக போராட்டம் வலுக்கிறது .. ஒரு வேளை இரும்புகரம் கொண்டு அடக்கபடலாம் ஆனால் பாதுகாப்பில் விரிசல் வரும் ..
முன்னாள் மேஜர் ஜெனரல் டி.பக்ஸி
இத்திட்டத்தை கேட்டு திடுக்கிட்டு போனதாக "ப்ரண்ட்லைன்"க்கு பேட்டியளிக்கிறார்.. தயவு கூர்ந்து செயல்படுத்தாதீர்கள்
for god's sake please don't to it.. என அச்சத்தை வெளிபடுத்தியிருக்கிறார் ..
நாட்டுமக்களுக்கு என்ன தேவை என பிரதமருக்கு தெரியவில்லையென ராகுல் சொல்கிறார் .. தமிழ்நாட்டின் முதல்வர் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியிருப்பதும் இடதுசாரிகள் எதிர்ப்பதும் கருத்தில் கொள்ளவேண்டும்
..
அறிவாளிகளை வழங்கிய நாடு இன்று மூடர்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகிறதே.. உலகமே கொண்டாடிய தேசம் இன்று மதவெறியின் பிடியில் .. 
 ..
நாட்டை கெடுக்கும்
நாசக்காரர்களே
மக்களின் நீண்டமௌனம் 
ஆழ புதைத்துவிடும் .. 
சிறு சிலிர்ப்பு போதும் 
கரையேற முடியாமல் அமுங்கிபோவீர் ..
..
ஆலஞ்சியார்

Thursday, June 16, 2022

புல்டோசர்..
குற்றம் நிறுபிக்கப்படாத நிலையில் அதில் சம்பந்தப்பட்டதாக கருதப்படுகிற நபர்களின் வீடுகள் தரைமட்டம் ஆக்கப்படுகிறது .. நாட்டின் தலைமையமைச்சர் 
மோடி  வாய்திறக்க மறுத்து மௌனம் காக்கிறார் .. இத்தனை நாட்களாகியும் மௌனம் கலைந்தபாடில்லை .. நாட்டின் சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் வேட்டையாடபடுகிறார்கள் .. மசூதிகளில் "லிங்கத்திற்காக" அலைகிறார்கள் .. ஆனால்  எதிர்ப்பாய் பல்வேறு குரல்கள் கேட்க தொடங்கிய பிறகும் வாய்திறக்காமல் இருப்பது உண்மையில் கவலைதருகிறது 
.. 
இந்திய அரசிலமைப்பு உயர்ந்த பதவியை தந்திருந்தாலும் நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்பின் தலைவராக இருந்தாலும் வந்த வழி  நமக்கு நிறைய போதிக்கிறது 
2002 ஆம் ஆண்டு  மறக்க முடியாத வரலாறாக பதிவாகியிருக்கிறது 
மோடி  என்கிற நபர் பிரபலமானதும் அப்போதுதான்
அவரது ஆட்சியில் குஜராத்தில் நடைபெற்ற #இனகருவறுத்தலை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது.. அப்போது மோடி அவர்கள்  என்ன பேசினார் என்பதும் அன்று  பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்கள்  "அரசதர்மத்தோடு" நடந்துக்கொள்ளுங்களென அறிவுரை சொன்னது நினைவிற்கு வருகிறது
 இன்று வரைக்கும் அவர் அரசதர்மத்தோடு நடந்துக்கொள்ளவில்லை என்பது சங்கடத்தை தருகிறது ..
..
அன்று குஜராத்தில் தொடங்கிவைத்தது இன்று இந்தியா முழுவதும் வெறுப்பு அரசியலை சர்வசாதாரணமாக பாஜகவினர் கையிலெடுக்கிறார்கள் ..மோடி பிரதமரானதிலிருந்து 110  இஸ்லாமியர்கள் கொல்லபட்டிரு க்கிறார்கள் அதில் 40 குழந்தைகள் வெட்கி தலைகுனிய வேண்டிய பிரதமர் நாளொரு வேசத்தில் நாடகமாடிக்கொண்டிருக்கிறது "தொப்பி" போட்டு முஸ்லீமாக நடிக்கவில்லை மற்ற எல்லா வேடமும் போட்டிருக்கிறார் ..
அவதார புருஷர் என்று நம்பியவர்களே இவர் "அவதார புருஷர் அல்ல அரிதார புருஷர்" என 
புரிந்துக் கொண்டார்கள்..
..
நாட்டை வளபடுத்துவார் பலபடுத்துவார் என நம்பியவர்களே இன்று அகல பாதாளத்திலிருந்து கதறுகிறார்கள் நாட்டின் வீழ்ச்சி எங்கு கொண்டு நிறுத்துமோ தெரியவில்லை .. மதமும் ஜாதியும் மூத்திரமும் ஊறுகாயும் நாட்டை வலுவான நிலைக்கு கொண்டு செல்லாது .. உலகரங்களில் இந்தியாவின் முகம் கருமைபடர தொடங்கியிருக்கிறது .. பொருளாதாரத்தில் விழும் போதெல்லாம் மோடியை காக்க முஸ்லிம்களின் கறி தேவைபடுகிறது..  ஊடகங்கள் கேள்வி கேட்குமோ என அஞ்சி 
OH MY GOD என ஓட்டம் பிடிக்கிற நிலை .. தொடர்ந்து தப்பிக்க முடியாது.. நீதி வலியது திருப்பி கணக்கு கேட்கும் .. 
..
சட்டத்திற்கு புறம்பாக ஆக்ரமித்து கட்டபட்டிருந்தாலும் இடிப்பதற்கு முன் நோடீஸ் நீதிமனற அனுமதி என எதையும் கணக்கில் கொள்ளாமல் போராடினால் வீடு இடிக்கபடுமென புதிய விதி எழுதியது யார்.. நீதிமன்றம் இந்திய சட்டம் இதற்கெல்லாம் மதிப்பில்லையா ..  பத்திரிக்கையாளன் கைதானவுடன் ஒப்பாரி வைத்ததும் உச்சநீதிமன்றம்  தலையிட வேண்டும் என கதறும் போது உடனே செவி சாய்த்த நீதிமன்றம் இப்போது ஏன் அமைதி காக்கிறது.. உ.பி.அரசின் அராஜக போக்கை ஏன் கண்டிக்கவில்லை .. கேள்விகள் ஆயிரம் பதில்தான் இல்லை ..
..
போராடினால் அத்துமீறி போராடினால் புல்டோசர் வருமென்றால் இது நாடா ..? 
முஸ்லிம்களுக்கெதிராக துப்பாக்கியோடு பகிரங்கமாக வந்தவன் வீடு இதுபோல் இடிக்கபட்டதா ..?  இங்கே நீதி சமமில்லையா .. 
ஆடுங்கள் ..
ஆட்டம் நிற்கும் போது எழவே முடியாதளவிற்கு புதைக்குழியில் விழுவீர்கள்..
..
அறம் பிழைத்தால்..
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்..
..
ஆலஞ்சியார்

Monday, June 13, 2022

படி..படி..படி...
படிக்காம ஜெயிச்சவன் ஒருத்தர் இரண்டுபேர காட்டலாம் படிச்சு ஜெயிச்சவன் லட்சம் பேர என்னால காட்டமுடியும் .. படிக்காம ஜெயிக்கலாம் அப்படி எவனாவது சொன்னா நம்பாதே ..
இவர்களெல்லாம் முன்னேறுகிறார்களே என்ற எரிச்சலில்  தவறான பாதையை காட்டும் சூழ்ச்சி ..
தமிழ்நாட்டின் தலைவன் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்

M. K. Stalin 
Chief Minister of Tamil Nadu 
..
ஆம் 
படிக்காம விவசாயம், பண்ணு ஆடு வளர்க்க போ.. லட்சம் லட்சமா சம்பாதிக்கலாம் .. IPS வேலைய ராஜினாமா பண்ணிட்டு ஆடு வளர்த்தேன்  என படிக்க  நினைக்கிறவன் மனதில் விசத்தை விதைக்கிற "பசுமைவிகடன்" விவசாயம் பண்ணி கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இன்ஜினியர் என மயக்கும் வார்த்தைகளை நம்பாமல் படியுங்கள் .. படிப்பு மட்டுமே ஒருவனின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் ..
..
எங்கே படிச்சு மேல வந்துடுவானோ என்கிற அச்சம் பன்நெடுங்காலமாய் கல்வி மறுக்கபட்டவன் உயரத்தை நோக்கி வரும் போது அவனை திசைமாற்றும் சதி.. அதை நம்பாமல் கல்வி ஒன்றே குறையாத செல்வம் .. எப்படியாவது படித்துவிடு என முதலமைச்சர் கவலைக்கொள்கிறார் .. எக்கேடுகெட்டால் என்ன மாட்டு மூத்திரமும் புல்டோசரும் முஸ்லிம்களும் இருக்கும் வரை நம்மை அசைக்கமுடியாதென மக்களை மடையர்களாக வைத்திருக்க நினைக்கும் காலத்தில் படி என்கிறார் திராவிட மாடல் முதல்வர் ..
..
காலையில படி மாலையில விளையாடு என பாரதி பாட்டை பாடமாக்கி அவர்கள் மட்டும் எல்லா நேரமும் படித்துக்கொண்டிருக்க பாவேந்தர் தான் 
"காலையில் படி - கடும்பகல் படி
மாலை இரவு பொருள்படும்படி
கற்பவை கற்கும்படி
வள்ளுவர் சொன்னபடி
கற்கத்தான் வேண்டுமப்படி
கல்லாதவர் வாழ்வதெப்படி"..
படி படி படி என பாடினார் .. 
..
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் தான் திராவிடத் தலைவர்கள் படித்த சமுதாயம் உருவாக வேண்டுமென பாடுபட்டார்கள், பாடுபடுகிறார்கள் ..  
மிக முக்கியமான காலகட்டத்தில் 
வரலாற்றை மாற்றி எழுத துடிக்கும் சனாதனசக்திகள், தமிழகத்தின் விடுதலை வரலாற்றை கூட மறைக்க முயலும் பாசிச சக்திகள், சாதிமத துவேசத்தை எளிதாக நம்மிடையே கடத்த முயலும் இக்காலகட்டத்தில் .. மிகப்பெரிய மாற்றம் என்ற பெயரில் பொய்புரட்டு புராணத்தை புகழ்ந்து கல்வியில் திணிக்க முயலும் வேளையில், எதையும் ஆய்ந்தறிந்து சரியானதை தேர்வு செய்து மாணவச் செல்வங்களின் நெஞ்சில் நல்லதை விதைக்க சரியானவரிடம் அதிகாரம் வந்திருப்பதும் அதை அவர் மிக சாதூர்யமாக கையாள்வதும் மகிழ்வை தருகிறது "எண்ணும் எழுத்தும்"..
..
இந்திய ஒன்றிய அரசு (எல்லாமாநிலத்திற்கும்) ஒதுக்கியதை விட அதிகமாக நிதியை ஒதுக்கி வலுவான கல்வி கட்டமைப்பை தருகிறார் .. நம் பிள்ளைகளை படிக்க வைக்கவேண்டும்..
ஆம் அப்போது தான் இச் சமூகத்தில்
 சிறந்தவர்களாக பண்பாளர்களாக, நல்லொழுக்கமுள்ளவர்களாக, சாதிமதவெறியெனும் சாக்கடையில் மூழ்காமல் எதையும் அறிவுக் கொண்டு சிந்திக்கும் நல்லவர்களாக உருவாக்குவோம் ..
..
நல்லதை விதைப்போம் 
வருங்காலம்  நன்மையே பயக்கும் 
..
ஆலஞ்சியார்

Friday, June 10, 2022

முன்பெல்லாம் அரசியல்வாதிகளிடத்தில் அடிப்படை நாகரீகம், அரசியலைப்பற்றிய புரிதல், கொஞ்சம் ஞானம் இருந்தது.. பொய் பேசுகிறோம் என்றாலும் அதில் எல்லை கடந்துவிடவில்லை அதை நியாயபடுத்த காரணங்களை கொண்டு நடந்தார்கள் .. திரும்ப திரும்ப மறுக்கபட்டதை,அல்லது தெளிவில்லாததை பேசினாலும் அதை ஊடகங்களில் வந்ததென சொல்லி  சமாளித்தார்கள் .. கேவலமான செயல்களை செய்ததில்லை  தனிநபரை விமர்சனத்தை  கீழ்நிலை அரசியல்வாதிகளைக் கொண்டு அரங்கேற்றினாலும் அது கிண்டல் கணக்கில் வரவுவைத்தார்கள் ..
ஒரளவு அரசியல் தெரிந்தும் நெடிய வரலாற்றின் சில பக்கங்களையாவது வாசித்திருந்தார்கள் .. சொல்கிற அளவில் அவர்களுக்கான அரசியல் தொடர்பிருந்தது .. 
..
ஆனால் இன்றைய நிலை மிக மோசமாக இருக்கிறது .. அடிப்படை தகுதி கூட இல்லாதவர்கள் பொதுவாழ்வில் உயர் பதவி அதிகாரத்தில் வந்தமர்ந்தார்கள் .. சேக்கிழார் எழுதிய கம்பராமயணம் என உளறிக் கொட்டி அண்ணாவிற்கு பிறகு அதிகம் நூலகளை படித்தவனென வாய் உளறி கடைசியாக படித்தநூல் எதுவென்ற ஞாபகமில்லை என விழிக்கிறார்கள் .. ஆற்காட்டார் மறைந்தாரென பேச முடிகிறது ..
கட்சியின் தலைவரின் பெயரை கூட சொல்லதெரியவில்லை ஒருவேளை அவரை கட்சியின் தலைவராக எண்ணவில்லையோ என்னவோ.. கூமுட்டைகளால் தமிழகத்தில் அரசியல் அழுக்காகிறது ..
..
சாணக்கியென அவர்களால் நம்பபட்ட ராஜகோபாலச்சாரியார்
தமிழ் நாடு என்கிறார்கள் ஜாக்கிரதை என்றபோது ஆம் இந்தியா நாடே அல்ல அது துணைக்கண்டமென நாடாளுமன்றத்திலேயே அழுத்தமாக சொன்ன பேரறிஞர் ..
தமிழைத்தவிர வேறெதற்கும் தேசிய மொழிக்கான தகுதியில்லை என முழங்கிய காயிதெமில்லத், எப்படி எதிர்க்கட்சியாக இருக்கவேண்டுமென தெரிந்துக்கொள்ளுங்களென பக்தவச்லம் சொன்னபோது அடுத்த முறை எதிர்க்கட்சியாக வந்து எங்களுக்கு உணர்த்துங்கள் என்ற கலைஞர் இப்படி நல்ல விவாதங்களால் அரசியல் செய்தவர்கள் தமிழர்கள் ..ஆனால் இன்றோ வரலாறு தெரியாதவர்களால் அவமானபட வேண்டியிருக்கிறது .. எதையாவது உளறுவது அதன் மூலம் வெளிச்சம் பெறுவதும் அதை மீடியாக்கள் கொண்டாடவதும் அபத்தம் ..
..
தமிழ்நாட்டில் 
,அறிவுசார் இயக்கம் கண்ட நாட்டில், சிலர் மதம் சாதிய சகதியில் சிக்கி தங்கள் முகத்தை இழந்து முகவரிக்காக எதையாவது பேசி தமிழர்களை தலைகுனிய வைக்கிறார்கள் .. பதவிக்காக காலில் விழுந்து கிடந்தவர்கள் மக்கள் தந்த அதிகாரத்தில் ஆட்சி செய்பவரை சந்தடிசாக்கில் வந்துவிட்டதாக சொல்வது வேடிக்கை.. இந்திரா சாவும் எம்ஜிஆர் நோவும்  ராஜீவ் படுகொலையும் அதிமுகவை கரைசேர்த்தது .. 2ஜி எனும் இமாலய கற்பனையை ஊதிபெருக்கி இடையிடையே பார்ப்பன ஊடகங்கள் கட்டுகதைகள் திமுகவை வரவிடாமல் தடுத்தாலும் மக்கள் மீண்டும் மீண்டும் தெளிந்து புரிந்தறிந்து ஆட்சியில் அமர்த்துகிறார்கள் .. காலில் விழுந்தோ,தலை கவிழ்ந்தோ,
கட்சியை உடைத்தோ வாக்கு இயந்திரத்தை நம்பியோ, வெற்றிபெற்ற மாற்றுக்கட்சி மாடுகளை விலைக்கு வாங்கியோ அறியணை ஏறவில்லை..மக்கள் தந்த வெற்றி .. இனியும் விட்டால் இந்த கோழைகள் வடவனுக்கு தாரைவார்த்துவிடுவார்கள் அடிமைகள் தமிழ்நாட்டை அலங்கோலபடுத்திவிடுவார்களென சிந்தித்து திமுகவிற்கு வாக்களித்து வெற்றிபெற செய்திருக்கிறார்கள் ..
..
திமுகவிற்கு எதிரியாக இருக்க கூட தகுதி வேண்டும் .. தயைகூர்ந்து தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள் .. கடந்தகால வரலாற்றை, இப்போதைய நிகழ்வுகளை கூர்ந்து கவனியுங்கள் .. எதையாவது உளறி தமிழனின் மானத்தை கெடுக்காதீர்கள் .. பொய்யும் புரட்டும் புராண கதாபாத்திரங்களும் அரசியலில் நீண்டநாட்கள் தாக்குபிடிக்காது .. உண்மையும்,உழைப்பும், நெறிதவறாத செயலும்,மக்கள் மீதான கனிவும்,மண்ணை நேசிக்கும் உணர்வும், பகைவர்க்கு அஞ்சாமையும், விமர்சனத்தை ஏற்கும் பக்குவமும், நிதானமும்,
துணிந்து செயல்படும் நெஞ்சுரமும்
உயரத்தை நோக்கி செல்லும்போதும் எத்தியபிறகும் பணிவும் இருந்தால் அதிகாரம் கிடைக்கும் அதைவிட மக்களிடம் அங்கீகாரம் கிடைக்கும் 
..
நல்லவைகள் காலம்கடந்தும் பேசபடும், நல்ல தலைவர்களை காலம் கொண்டாடும்,  அரசியல் கழிவுகளை, அவசரத்தில் வந்தவர்களை பொய்யர்களை மக்கள் புறக்கணிப்பதோடு காலமும் மறந்து போகும் ..  முதிர்வற்ற அரசியல் விடலைகள் நா நாக்க வேண்டும் .. முதலில் அரசியலை தெரிந்து இந்த மண்ணின் மனம் நுகர்ந்து,  இனத்தை பண்பாடு கலைசாரத்தை அறிந்து அரசியல் செய்ய வாருங்கள் .. பொழுதுபோக்கிற்காக, பொழுதுபோகாததால் வந்தவர்கள் அடக்கிவாசித்தால் நல்லது 
மானம் காக்கபடும்..
..
தளபதிக்கு M. K. Stalin 
எதிராக அரசியல் செய்ய.. 
எதிரிகளே..
பகைவர்களே..
உங்கள் தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள்
..
ஆலஞ்சியார்
#பழையகிறுக்கல்கள் 
..
புரிகிறதா.
என் பேசும் விழியின்
பேசாமொழி..
உனக்கு புரிகிறதா..

கண்களில் காணும்
காதல் பொய்..
கடைவிழி தேடும்..
காமம் பொய்..
காந்த விழிசொல்லும்
கவிதை பொய்..
கள்ளத்தனமாய்..
நீ..
மெல்ல சொல்லும்..
எல்லாம் பொய்..
..
அன்பு வேண்டுமா..
ஆசை வார்த்தையை குறை
அடுக்கடுக்காய்
மாயமொழியின் 
உளறலை விடு..
கண்ணி வைத்து
எனை கவிழ்க்கும் 
கடைவழியை அடை..
..
அன்பு..
இதயத்தில்
கனிந்ததாய் வேண்டும்
இதழ் வழி வரும்
காய்ந்த மலராய் அல்ல..
..
காதல்..
காதலாய் வேண்டும்..

***************************

நியாயமா 
பேசவந்ததை
பேசாமலே
போகிறாய்..
..
உன் உதடுவரை
வந்த வார்த்தை
மொழியாய் விழாமல்
மௌனிதமாய்
போனதேன்..
..
ஏதேனும்
எதைப்பற்றியேனும்..
எதுவாகினும்..
அல்லது
பொய்யேனும்
பேசியிருக்கலாம்..
..
இதமாய்
இல்லையெனினும் 
கொஞ்சம்
கடுத்தவரிகளிலாயினும்
ஏதேனும்
சொல்லி இருக்கலாம்....
..
எனக்கு
பிடிக்காத ..
பொய்யர்கள் மொழியில்
புராணமாவது..
சொல்லியிருக்கலாம்..
..
ஏதேனும்...
அருகில் அமர்ந்து
ஆசைமொழி..பேசி
அர்த்தமற்ற சிரிப்பை
அழகாக தந்திருக்கலாம் ..
..
//
என்ன இருக்கிறது
பேசயென்கிறாய்..
அதுவும் சரிதான்..
..
நீயும் நானும்
தனிமையிலெனில்..
பேச என்ன இருக்கிறது..
..
இதயம்
பேசும் மொழி..
வார்த்தையாய் 
வந்தால்..

#மெய்யிழக்கும்..

*****************************
..
நான் கவியல்ல,
நீங்கள் விலாசம் மாறி வந்துவிட்டீர் ..

நான் எழதுவது
இலக்கியமில்லை,
இலக்கணம் 
சுத்தமாயில்லை
கிறுக்கலோ,
கிறுக்குதனமோ
கொஞ்சமுமில்லை,
புரியாத வார்த்தையில்
புனைவதில்லை,

அடுக்கடுக்காய்
பொய்யில்லை,
புரிந்தும், புரியாமல்
நான் பின்னுவதில்லை
எதிர் வீட்டுக்காரனும்,
பக்கத்து வீட்டுக்காரனும்
மெளனமாய் என்னிடம் 
பேசியதை..
உரக்க ..
ஊரறிய ..
சொல்கிறேன் 

எழுத்தில் 
சிலநேரம்
பூவாசம்..
சிலவேளை, 
பிணவாசம்
உயர்வைவிட
உண்மையை,
சொல்ல வருகிறேன்..

மூடம் உடைக்க
முகமூடியின்றி
வருவேன்,
பெரியோரை  தருவேன்
பெரியாரையும் தருவேன்

இலக்கணம் உடைத்து
இலக்கியம் தவிர்த்து  
இயல்பைச் சொல்ல
இனிதாய் வருவேன்.

தமிழ்..பேச
தானாய்,
யாரும் அழைக்காமல்
வருவேன்..

நான் கவியல்ல..
விலாசம் மாறி 
வந்துவிட்டீர் .

கிழவனின் கைதடியாய்.
கிறுக்கர்களை,
ஜாதி மத கிறுக்கர்களை
விரட்ட..

வருவேன்..

பெண்களை 
கேலி பேசும்..
பித்தரை கண்டால்
காரி உமிழ்வேன்..
.
இறுதியாய்
ஒருவாசகம்..
#நான்_போலியல்ல.

ஆலஞ்சியார்

Wednesday, June 8, 2022

#நாதியற்றுபோனதா..?

நீண்ட இடைவெளிக்கு பிறகு பால்யகால சிநேகிதனை சந்தித்தேன்.. தேநீர் அருந்திக்கொண்டே "நாதியற்று போய்விட்டோமா" என்றபோது அதிர்ந்து நிமிர்ந்தேன்" நாதியற்ற சமூகமாக போய்விட்டதா" என்றார் ..
..
சிறிது மௌனம் பேச்சு விடுதலை இந்தியா தொடங்கி இன்றைய அவலநிலை வரை நீடித்தது .. இந்தியவிடுதலையில் பிரதான பங்கு வகித்த இஸ்லாமிய சமூகம் பிரிவினையை கையிலெடுத்த போது ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் தொடர்கதையாகி இன்றுவரை அழுத்தபடும் சமுதாயமாக  நிற்கிறது .. ஒருங்கிணைந்த இந்தியாவை பார்ப்பனர்கள் விரும்பவில்லை ஒருங்கிணைந்திருந்தால் இன்றைய பாகிஸ்தான்,வங்கத்திலிருந்து 100க்கு மேற்பட்டவர்கள் எம்பிக்களாக வருவார்கள் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து 80/90 பேர் வரலாம் பெரும் ஆதிக்கம் செலுத்துவார்கள் என அஞ்சி பிரிவினைக்கு நாக்பூர் வித்திட்டதும் அதை கையிலெடுத்து ஆடியவர்கள் பிரிவினையில் உறுதியோடு நின்றார்கள்.. இந்தியாவே எமது நாடென இருந்தவர்கள் நிறைய இன்னல்களுக்கு ஆளானார்கள் ..
வேலைவாய்ப்புகள் கூட கிடைக்காமல் போனது .. "நிக்நேம்" வைத்துக்கொள்ளும் பழக்கம் அப்போது அதிகமானது ராஜப்பா, துரை,செல்லப்பா என்றெல்லாம் பெயரை மாற்றிக்கொண்டு வேலை செய்த வரலாறு உண்டு
..
தமிழக முஸ்லிம்கள் கல்வியில் வெகு பின்னில் இருந்தார்கள் .. முஸ்லிம்களுக்கென்று அவர்கள் நிதியில் உருவான முகமடன் கல்லூரியை ராஜகோபாலச்சாரி அரசுடமை ஆக்கினார் .. பெரும்போராட்டத்திற்கு பிறகு  செவிடன் காதில் ஊதிய சங்கானதால் மீண்டும் சமுதாய மக்களிடத்தில் கையேந்தி பலநாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் நிதியில் உருவானது "நீயூ காலேஜ் " நிறைய கல்வியாளர்கள் உருவாக்கியது அன்று ஒரு நல்ல தலைவர் தன்னலம் கருதாத தலைவர் கண்ணியத்திற்குரியவராக இருந்தார் .. 
இன்று இஸ்லாமியர் நடத்தும் கல்லூரிகள்
வணிக நிறுவனங்களாக இருப்பது மிக பெரிய சோகம் .. 
..
70/80 களில் அரபுநாடுகளில் வேலைவாய்ப்பு வந்தவுடன் பள்ளிபடிப்போடு பெரும் எண்ணிக்கையில் இளைஞர்கள் சென்றார்கள் .. கல்வியில் மிகவும் பின்தங்கிய சமூகமாக மாறியது .. கல்வி ஒன்றே கரை சேர்க்கும் என்ற யதார்த்தம் புரியும் போது வழிநடத்த நல்ல தலைவரோ பணத்தை குறிக்கோளாக கொள்ளாத சிறந்த கல்வியாளர்களோ இல்லாமல் போனார்கள் .. 
..
இப்போது வருவோம் 
நாதியற்று போய்விட்டோமா  என்ற கேள்வி வேட்டையாட தொடங்கியதெப்போது.. எல்லோரும் தலைவனாக ஆசைபட்டார்களே ஏன் .. பிறர் முதுகில் சவாரி செய்தே பழக்கபட்டார்களே ஏன்..? ஒரு எம்பி சீட்டிற்காக சக தோழனை பகைக்கொண்டு பார்க்க தொடங்கியதேன்..? பொது அரசியலை பேசாமல், மத அரசியலை கையிலெடுத்து தங்களை வளபடுத்திக்கொள்ள நினைத்தவர்கள் சமுதாய இளைஞர்களை மூளைச்சலவை செய்து போராட்டம் வன்முறை என சிறைக்கு அனுப்பிவிட்டு ராஜபோக வாழ்கை வாழ்கிறார்கள் ..  உணர்ச்சி பிழம்பில் சமுதாயத்தை நிறுத்தி சமூக அரசியலில் விழிப்புணர்வற்ற இளைஞர்களை 
கொடுங்காற்றில் நிற்கவைத்தது யார்.. அதிகார போதை தான், தான் மட்டுமே சமுதாயத்தில் பேசபட வேண்டியவன் பின்பற்ற வேண்டியவன் என அகங்காரம் இனியொரு சதாப்தம் ஆனாலும் நல்ல தலைவனை உருவாக்கமுடியுமா ..உருவாக விடுவார்களா.. முஸ்லிம் சமுதாயத்தில் பிரிவு அரசியல் கட்சிகளை விட நாக்பூர் விரும்புகிறதென்பது தானே உண்மை .. ஒன்றுபட்டுநின்றால் உரிய விகிதம் தர அரசியல் கட்சி முன்நிற்குமே.. தமிழகம் என்றில்லை எங்கெல்லாம்  முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கிறார்களோ அங்கே நாக்பூரின் கைக்கூலிகள் படைவரிசை காட்டுகிறார்கள் ..
..
சமுதாய ஒற்றுமையும் ஆளுமைமிக்க தலைமையின் வழிகாட்டுதலும், தன்னலமற்ற சேவை செய்யும் மனபான்மைக் கொண்ட இளைஞர்களும்,கல்வியில் இந்திய ஒன்றிய மாநில அரசு பணிகளில் அதிகளவில் இடம்பெற முயற்சியும் தேவை .. அரசு இயந்திரத்தில் மிக சொற்மாகவே இஸ்லாமியர்கள் படித்துவிட்டு (இடஒதுக்கீடு மெரிட்) வெளிநாடு மோகத்தை தவிர்த்து அரசாங்க பணிகளில் சேருவதற்கு முன்வரவேண்டும்.. நிறைய கல்வி நிலையங்களும் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக முயற்சிக்கவேண்டும் .. இவையாவையும் ஒருங்கிணைக்க வழிநடத்த கண்ணியத்திற்குரிய
"காயிதெமில்லத் " போன்ற தலைவர் கிடைக்கும் வரை 
"நாதியற்ற" நிலைதான் ..
..
ஆலஞ்சியார்

Monday, June 6, 2022

இந்தியா பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என அரபுநாடுகள் குரல் உயர்த்தியிருக்கிறது .. அதற்கு பதிலளித்த தெலுங்கானா ராஷ்ட்ரீய சமதி பாஜக கேட்கவேண்டுமே தவிர ஏன் இந்தியா கேட்கவேண்டும் என்கிறது .. மேலோட்டமாக பார்த்தால் பாஜக என்ற கட்சி மீது பழியைப் போட்டு நழுவபார்க்கிறார்கள் ..
.. 
உண்மையில் பாஜக அதிகாரத்தை கைப்பற்றியதில் தொடங்கியது இந்த இஸ்லாம் வெறுப்பு .. சமூக வலைதளங்கள் பத்திரிக்கை, தொலைகாட்சிகள் என வரிசைகட்டி குறிப்பாக அதுவரை வெளியே தலைகாட்டாத பார்ப்பனர்கள் சமூக ஆர்வலர்களாக ,தேசபிமானிகளாக வலம் வர மெல்ல மெல்ல விசத்தை கக்கிக்கொண்டிருந்தார்கள் .. முஸ்லிம் மீது வன்மம் அவர்கள் உடையில் உணவில் கல்வியில் என தொடர்ந்து தடைபோட்டும் பொது சமூகம் முன் அவர்களை வந்தேறிகள் போன்றும், இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் போன்றும் சித்தரித்தார்கள் .. துறவிகளுக்கு கூட முஸ்லிம்கள் இந்துக்களிடமிருந்து இடத்தை வாங்கி பள்ளிவாசல் கட்டுகிறார்கள் என பேசும் துணிவும் வந்தது ..
..
குறிப்பாக இடைசாதி இளைஞர்களை மூளைச்சலவை செய்து அடியாட்களாக்கி கலவரம், அடித்தமர்த்தல் காரியங்களில் ஈடுபட செய்து அதற்கு அரசே பாதுகாப்பு செய்திட்ட கொடூரம் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் நடந்தது.. மாட்டுக்கறிக்காக மனிதனை வேட்டையாடிய கும்பல்  தேசபக்தியாளனாக காட்டபட்டதும் பசுவிற்கு உயிர்வளி (ஆக்சிஸன்) தந்தவர்கள் சிசுவுக்கு தந்தவனை அவன் முஸ்லிம் என்பதால் தேசதுரோக வழக்கு பதிவு செய்ததும் இந்த பொதுசமூகம் வாய்மூடிதானே இருந்தது.. மீண்டும் அவர்களை வெற்றி பெற செய்தவுடன் ஆட்டம் அதிகமாகி கடைசியில் அரபுலகம் மன்னிப்பு கேட்க சொல்லும் நிலைக்கு வந்துநிற்கிறோம் ..
..
முஸ்லிமாக வாழ்வதற்கே இந்திய தேசத்தில் ஒவ்வொரு நாளும், நொடியும் அவன் தேச பற்றாளனாய் நிரூபிக்க வேண்டிய சூழலை உருவாக்கியது யார்.. இன்று எல்லா சமயத்தை ஒன்றாக பார்ப்பதாக அறிக்கை விடும் விஷமிகள் தானே.. தொடங்கி வைத்தது இன்று திருப்பி தாக்க தொடங்கியவுடன் இந்தியா பன்முகதன்மையோடு வாழும் நாடு என நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது .. ஒரே நாடு ஒரே கலாச்சாரம் ஒரே மொழி, ஒரே பண்பாடு என வேற்றுமையில் ஒற்றுமைக்கு வேட்டுவைக்க பார்த்தவர்கள் இன்று அறிக்கைவிடுகிறார்கள் ..
..
நிபுர் சர்மாவிற்கு 6 கோடி பிராமணர்கள் ஒன்று சேர்ந்து துணைநிற்க வேண்டும் என பதறுகிறார்கள் குறித்துக்கொள்ளுங்கள் 3% விழுக்காடிற்கு குறைவான ஒரு சமூகம் பிரதமரை ஜோக்கர் என்கிறது .. இங்கே அந்த மூன்று விழுக்காட்டிற்காக இந்தியா அவமான படலாம் ..97% விழுக்காடு அடங்கியிருக்க வேண்டும் என நினைப்பதற்கு பெயர் தான் பாசிசம் ..பிரதமரே ஆனாலும் எங்கள் முன் ஜோக்கர் தான்  என்று சொல்வதிலிருந்து இந்த நாடு இந்த அரசு  பார்பனர்களுக்கு மட்டுமே என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள் .. ஆர்எஸ்எஸ் எண்ணத்தை செயல் திட்டத்தை இங்கே அமல்படுத்த பிரதமர் ஒரு கருவியாக செயல்பட வேண்டும் 
..
சர்வதேச சமூகம் முன் இந்தியா தலைகுனிந்து நிற்கிறது.. வெறுப்பு அரசியல், பொய் பித்தலாட்டம், வரலாற்றை மாற்ற முயலுதல், தொடர்ந்து வன்மம் கொண்டு சிறுபான்மையினரை வேட்டையாடுதல், கல்வியில் மதத்தை நுழைத்தல், என தொடர்ந்து மனித குலத்திற்கு தீங்கிழைக்கும் ஆர்எஸ்எஸும், அதன் அரசியல் வடிவமான பாஜகவும் நாட்டிற்கு கேடு ..
இங்கே பிராமணீயம் ஒடுக்கபட்டால் மட்டுமே நல்ல சமுதாயம் நல்லிணக்க சமுதாயம் பிறக்கும் ..
..
இந்தியா எவன் தந்தை வீட்டு சொத்து அல்ல நம்மோடது ..
..
ஆலஞ்சியார்

Sunday, June 5, 2022

இஸ்லாமியர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக இரண்டு செய்தித் தொடர்பாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்திருக்கும் பிஜேபி..
அனைத்து மதங்களையும் மதிப்பதாக  விளக்கம் அளித்து பூச பார்க்கிறது .. நுபுர் சர்மா நிபந்தனையின்றி கருத்தை பின் வாங்குவதாக அறிக்கை வெளியிடுகிறார் ..
..
வளைகுடா நாடுகள் தங்கள் இறைதூதரை இழிவாக பேசியதற்காக கண்டனத்தை பதிவு செய்கிறது .. குப்பைத் தொட்டியில் மோடியின் படம் முகத்தில் பூட்ஸ் கால் அச்சு .. இந்தியாவில் மெல்ல படரிய நச்சுவிதையால் இன்று இந்தியா தலைகுனிகிறது.. வெறுப்பு அரசியலை விதைத்தவர்கள் அறுவடைக்கு அஞ்சுகிறார்கள் .. இந்திய துணை ஜனாதிபதி கத்தர் சென்றிருக்கும் போதே தூதரை அழைத்து  கண்டனத்தை பதிவு செய்கிறது ..
இந்தியர்களை வெளியேற்ற வேண்டுமென்ற குரல் ஒலிக்க தொடங்கியிருப்பது ஆபத்தானது ..
அரபு நாடுகளில் இந்தியப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்கிற குரல் வலுத்து வருகிறது..
..
இவையாவும் பாஜகவின் வெறுப்பு அரசியல் காரணம் .. குறிப்பாக இஸ்லாமியர்களை இரண்டாம் பிரஜைப்போல நடத்துவதும்  மதவெறியை உயர்த்தி பிடித்ததின் விளைவு.. சமானத்தோடு வாழ்ந்த மக்களிடையே அதிகார போதையில் பிரிவினையை மனங்களில் விதைத்ததால் இன்று எதை பேசுகிறோமென தெரியாமல் இந்திய இறையாண்மைக்கும் மதநல்லிணக்கதிற்கும் வேட்டுவைக்கிறார்கள் .. வளைகுடாவில் கசப்புணர்வு படர தொடங்கியிருப்பது நல்லதில்லை.. இங்கே இந்தியர்கள் மீதான நன்மதிப்பை சீரழிக்க பாசிச வெறியர்கள் முனைவு ஆபத்தானது ..
கட்சியிலிருந்து இடை நீக்கம், மன்னிப்பு என தற்காலிக தீர்வு சரிசெய்யாது .. பாஜக தொடர்ந்து பரப்பும் விசத்தை, வெறுப்புணர்வை நிறுத்த வேண்டும் இல்லையெனில் விலைகொடுக்க வேண்டி வரும் ..
..
சர்வதேச சமூகத்தில் இந்தியாவின் முகம் சிதைக்கபடுகிறது .. 
இந்தியர்கள் மீது கொண்ட நன்மதிப்பு பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பின் மிகவும் மோசமடைந்திருக்கிறது ..
..
எச்சரிக்கை ஒலிகேட்கிறது கவனம் 
..
ஆலஞ்சியார்

Saturday, June 4, 2022

விக்ரம் ..
கமல் படம் இல்லை..
படம் முழுவதும் ஆக்ரமித்து one man show காட்டாமல் இன்றைய நிலையறிந்து நடித்தபடம் .. படத்தில் பகத் "மிகச்ச நடனாக" மிரட்டியிருக்கிறார்..
கமல் சக நடிகர்களுக்கு வாய்ப்பு தந்து படத்தின் ஓட்டத்தை வேகம் குறையாமல் செய்ததும்
விஜய் சேதுபதி வழக்கம் போல தனித்திறமையை பதிவு செய்திருக்கிறார் 
..
இரண்டு விடயங்கள்.. கமல் படத்தில் வரும் வைணவ மேலாதிக்கம் இல்லை .. பிக்பாஸில் கூட மய்யத்தின் லோகோ பறித்த கோட் அணிந்திருப்பார் இதில் அரசியல் குறியீடுகள் இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார் .. அது சரி சொந்த தயாரிப்பில் எல்லாம் ரிஸ்க்  எடுக்கமாட்டார் .. கமலின் சமீபத்திய தோல்விகள்,  விஸ்வரூபம்2, படுபாதாளத்தில் தள்ளியதும் சபாஷ் நாயூடு வெளிவராமல் இருப்பதும் அவரை அரசியலில் சம்பாதிக்க வழி செய்தது .. கொஞ்சம் மெச்சபட்டவுடன் கமலின் "சினிமா போதை " மீண்டும் நம்மிடம் கொண்டுவந்திருக்கிறது ..
..
நல்ல நடிகராக சிலநேரம் தலைகனத்தோடு திரிந்தாலும் "தமிழ் சினிமா " கொண்டாடி தீர்க்கவேண்டியவர் என்பதில் மறுகருத்தே இல்லை .. பாபநாசம் படத்தில் புதைத்த  இடத்தை தோண்டும் போது அவரின் முகபாவனை சற்று திமிர் கலந்ததாக இருக்கும் ஆனால் மலையாளத்தில் மோகன்லால் அப்பாவியைப்போல முகத்தை வைத்திருப்பார் .. கமலிடம் சிலநேரம் நடிப்பில் மிகை / திமிர் இருக்கும் .. கமலிடம் சிலநேரம் திகைப்பு தட்டினாலும் மதுரத்தை வேண்டாமென்றா சொல்லும்.. கமல் திரைத்துறையில் வித்தகன் .. தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல், போலி நாத்திகம், வைணவப்பற்று, குளிர்காயல், இதையெல்லாம் தாண்டி  அவரின் பரிட்சார்த்தம் (முயற்சி தேடல்) பாராட்ட வேண்டிய ஒன்று .. தமிழ் சினிமா கண்ட நல்ல திறமையாளர்களில் ஒருவர் .. அவரது அரசியல் புரிதல் குப்பை ..
மய்யம் என்ற ஒன்றே உலகில் எங்கும் எதிலும் இல்லை இரு எதிர்மறைகள் தான் (உண்டு- இல்லை, நன்மை-தீமை) இயக்கத்தின் அடிதாளம் .. 
..
விக்ரம் பகத் படமா, விக்னேஷ் படமா, கமல் படமா, என்பதை தவிர்த்து நல்ல ஜனரஞ்சகமான படம் .. கமலுக்கு இந்த வெற்றி* அவசியம் தேவை .. இன்னமும் சில வருடங்கள் அவரின் பங்களிப்பை உறுதி செய்ய இந்த வெற்றி தேவைபடுகிறது .. கமலுக்கு நடிப்பு சினிமா தான் சரி என மக்கள் அளித்திருக்கும்  வரவேற்பை உணர்ந்து நல்ல படங்களை தரவேண்டும் .. எல்லா ஜாம்பவான்களுக்கு அடி சறுக்கும் காலம் தரும் பாடம் அது .. அதிலிருந்து மீண்டு தனக்கான கதாபாத்திரத்தை தேர்வு செய்து காலத்திற்கேற்ப மாற வேண்டும் .. அப்படி செய்தால் தொடர்ந்து சினிமாவில் இருக்கலாம் .. மூன்றாண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இல்லை பிக்பாஸ், அரசியல் என பொழுதை கழித்தாலும் மக்கள் விரும்புவதென்னவோ கமல் எனும் நடிகனில் "சினிமா" வை  என புரிந்திருக்கும் .. நல்ல படங்களை தந்து மக்களை மகிழ்விக்கும் கலைஞனாக கமல் திகழ வேண்டும் ..
கலைஞானி கமல் 
..
ஆலஞ்சியார்