Friday, May 20, 2022

#நெஞ்சுக்குநீதி..
தீண்டாமை பாவச் செயல் 
தீண்டாமை தண்டனைக்குரிய குற்றம் பாடபுத்தகத்தோடு மறந்து போகிற சமூகம் நிலை.. 
இதைப்போல நிறைய படங்கள் வந்திருக்கின்றன இதுவொரு புலனாய்வு திரைப்படம் என்பதை தாண்டி நிறைய பேசியிருக்கிறது ..
..
ஒவ்வொரு சாதிக்கும் தனி குணம் இருக்குன்னு என் தாத்தா சொல்வார் இப்ப மட்டும் உயிரோடிருந்தால் போயா மசிருன்பேன்  என்கிற  வசனம் சுடுகிறது .. சாதீய உணர்வை மங்காமல் பார்த்துக்கொள்வதில் அப்பன் தாத்தனின் வழிமுறைகளும் செயல்முறைகளும் முக்கிய பங்குவகிப்பதை மறுக்கவியலாது 
உணர்வுபூர்வமாக மெல்ல நம் ரத்தத்தில் ஏற்றபடுகிற "வெறி" தொடர்ந்து நம்மை குதிரைக்கு போடபடும்"கடிவாளம்" போல ஒரே எண்ணத்தில் ஓட வைக்கிறது .. 
"எல்லோரும் சமம்னா யாருதான் சார் ராசா" கேள்வியில் விடையறியா "மூலம்" நம்மை  வேட்டையாடும் எல்லோரும் சமம் என நினைப்பவர் தான் ராசா என்றாலும் கேள்வி வேர் எந்தளவு ஊடுறுவியிருப்பதை புரிந்துக்கொள்ளமுடியும் 
..
சாதிசங்கங்களையும் தலையில் கொட்டி நமக்காக பேசுவான் என நினைத்தால் மத்தவனுக்கு செருப்பா இருக்கிறான் என்று உரைக்கிறமாதிரி பேசுவதும் படிச்சு பெரியாளா வந்தா நமக்காக எதுவும் செய்றதில்லை என்ற யதார்த்தத்தை போகிற போக்கில் சொல்கிறது திரைப்படம்.. காவல்துறையில் சாதிய நிலை
எந்தளவு புரையோடி இருக்கிறதென்பதும் "அதுங்க" என்ற சொல்லாடல் உணர்த்துகிறது ..
நான் FC சார் ..அவரும் நீங்களும் ஒண்ணா ..இல்லை சார் அவரும் அய்யர் சார் நமக்கெல்லாம் மேலே..
நீங்க SC யா என கேட்க ஆமாம்சார்.. அவுங்க  எங்களுக்கு கீழே சார் என்பதிலிருந்து தீண்டாமையின் கொடூரம் அது எந்தளவு வேரூன்றியிருக்கிறதென்பதை காட்டியிருக்கிறார்கள் ..
..
தமிழகத்தில் இத்தனை ஆண்டுகள் பகுத்தறிவு பிரசாரம் மேற்கொண்ட போதும் இன்னமும்  பெருநகரங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் சிற்றூர்களில் சாதீய கோரதாண்டவம் இருப்பதை ஒப்புக்கொள்ளவேண்டும் .. பட்டியிலின மக்களிடையே கூட படித்தவுடன் "மேட்டிமைதன்மை " குடியேறி சொந்த இனமக்களை கூட புறக்கணிக்கிற/ தவிர்க்கிற நிலைதானிருக்கிறது.. 
படம் முழுக்க சாதிய படிநிலைகளை அதன் வேரின் விஷத்தை தோலுரித்து சட்டத்தின் முன் அனைவரும் சமமென சொல்கிறது ..சட்டம் நீதி எல்லாநேரமும் கைகொடுப்பதில்லை நியாயம் பேசுவதில்லை.. அதன் கட்டமைப்பு சாதீய அடுக்குநிலையில் உருவானது.. சாமனியனால் பெறமுடியாது .. 
மிருகபலம் கொண்டது பணம் புகழ் சாதி மதம் இவை காவல்துறை  நீதித்துறைகளில் வேரூன்றி அசைக்கமுடியாமல் இருப்பதை 
நாம் ஒப்புக்கொள்ளதான் வேண்டும் ..
..
Article 15 நமக்கு தந்த உரிமை மற்றவர்களையும் சமமாக மதிக்கவேண்டும் 
இனம் மொழி சாதி மதம் பாகுபாடு பார்க்க கூடாதென்பதை உறுதி செய்தாலும்.. 
வளரும் தலைமுறையினரிடையே 
சமத்துவத்தை எல்லாரும் சமம் என்பதை "சரியாக" போதிக்கவேண்டும் .. "பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்" பேசுபொருளாக மாறவேண்டும் சாதிசங்கள் அது சமுதாய வளர்ச்சிக்கல்ல என்பதையும் மக்கள் உணரும் வகையில் தொடர் நடவடிக்கைகள் ஏற்பட்டால் தான் அது 
"நெஞ்சுக்கு நீதி" 
..
உதயநிதிக்கு நல்ல படமாக அமைந்திருக்கிறது ..இயல்பான நடிப்பும் மிகைப்படுத்தாத திரைக்கதை நகர்வும் யதார்த்தமான வசனங்களும் ஒரு
நல்ல சினிமாவை தந்திருப்பதில்  மகிழ்ச்சி
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment