Sunday, November 27, 2022

அன்பின் உதய் ..
வாழ்த்துகள் .. ❤️‍🩹
திமுகவின் நம்பிக்கையாக வலம் வர தொடங்கியிருக்கிறீர்கள் ..
"வாரிசு" என்ற சொல்லை தாண்டி உழைத்திட இன்னும் அவகாசம் உண்டு .. ஆனால் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கவேண்டும் வேறெங்கும் தேட தேவையில்லை.. கண்முன்னே தளபதியின் உழைப்பு உணர்த்தும் உன்னத வழிதனை ..
..
தொடர்ந்து கவனித்து வருகிறேன் "இவன் பாட்டனை நினைவுபடுத்தும் பேரன் " என காதுபட பேசுவதை கேட்க முடிகிறது.. எதையும் சந்திக்கும் துணிவு,நகைச்சுவையோடு கடந்துபோகும் பாங்கும், இன்றைய அரசியலில் எது தேவை என அறிந்து காய் நகர்த்துவதும் வியப்பை தருகின்றன..  சில முக்கிய பதவிகளை இவர் பரிந்துரைக்கிறாரென்றும் அப்படி பரிந்துரைத்தவர்களின் செயல்பாடுகள் மெச்சதகுந்ததாக இருப்பதாக "முக்கியதலைகள்" பேசுகின்றன .. எதிர்கருத்தே இல்லாத நிலை என்பது தொடக்கத்தில் பலமாக தோன்றும்  காலங்கடந்து அது பலவீனப்படும் என்பதையும் .. கலைஞர் என்ற பெருந்தலைவரின் சொல்லும் செயலும் வாழ்வும்,  நமக்கு தந்திருக்கிற அரசியல் பாடம் .. புரியும் என்று நினைக்கிறேன் ..
..
உதய் ..
நீண்ட பயணம் காத்திருக்கிறது 
காலம் சரியான நேரத்தில் வாய்ப்பை தரும் .. ஆனால் சினிமா பொதுவாழ்வு என்ற இரட்டைசவாரி சில வேளை சறுக்ககூடும் எச்சரிக்கை .. பொதுவாழ்விற்கு அதிகநேரம் ஒதுக்குதல் முக்கியம் 
ஏனெனில் கேளிக்கை தரும் புகழ் நிழலைப்போன்றது ..நாம் சூரியனின் வெளிச்சத்தில் களிப்பவர்கள் .. பொதுத்தொண்டொன்றே நமக்கான அங்கீகாரத்தை தரும் .. 
திராவிட இயக்கத்தின் கருத்துக்களை கொண்டு சேர்க்க "கலை" பயன்படும் ..அதுவே அளவுமீறினால் கசக்கும் ..
.. 
மக்களிடம் செல், மக்களோடு கலந்திரு, மக்களுக்காக உழை .. என்ற பேரறிஞரின் சொல் தாரக மந்திரமாய் ஒலித்தால் நம்பிக்கை கீற்று முகில் கிழிந்து வெளிவரும் கதிரவனின் ஒளிப்போல பயன்படும் .. மிக பெரிய எதிர்காலமிருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள் .. திமுகவின் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக சிறந்த எதிர்காலமிருப்பதாக வெளிப்படையாக பேசுகிறார்கள் ..
என் அச்சமெல்லாம்  புகழ்ச்சியில் வீழ்ந்துவிடாமல் மக்களுக்கான உழைப்பில் கவனம் செலுத்தி போற்றுபவரைவிட விமர்சிப்பவரின் கருத்தில் கவனம் கொண்டு செயல்படவேண்டும் 
..
செயல்படு .. 
ஓயாது உழை ..
கவனம் கொள்..
புகழுக்கு செவிசாய்க்காதே ..
நமக்கானதை காலம் தரும் அதுவரை  தாத்தனைப் போல 
அப்பனைப்போல உழை ..
அடித்தளம் பலமாக வேண்டும் 
ஜால்ராக்களின் புகழில் மயங்காதே 
அது வசந்தம் தேடி வரும் பறவையை போன்றது ..
வசந்தகாலம் முடிந்தால் பறந்துவிடும் 
வேரினை தேடு 
அது புகழாது
காக்கும் ..
"வேரை" அறிதல் வேண்டும் 
கிளைகளைகண்டு ஆனந்தம் கொள்ளாதே 
வேரின் சக்தியில் தான் மரம் தழைத்து நிற்கிறது 
திராவிடத் "தருவின்" வேர்களை இனம் கொள் ..  திராவிடத்தை இளம்தலைமுறையிடம் கொண்டு சேர்த்தலும் ,கொள்கை உறுதியோடு செயல்படுதலும் வாய்ப்பை தேடி வரும் வரை மக்கள் பணியில் தொய்வில்லாமல் உழைத்தலும்  உயரத்தில் கொண்டு நிறுத்தும் 
யாரும் தொட முடியாத உயரத்தில் 
பிறந்தநாள் வாழ்த்துகள் உதய்
Udhayanidhi Stalin 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment