Wednesday, November 16, 2022

வைகோ..
கலிங்கபட்டியில் வாக்களித்துவிட்டு வைகோ செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் குரலில் பழைய கம்பீரம் காணவில்லை வயது மூப்பு காரணமாக இருக்கலாம் ..ஆனாலும் அவர் தன் மகன் வையாபுரி அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை எனச் சொல்லி அதற்கான காரணத்தை சொன்னபோது எங்கே சறுக்கியதென்பதை உணர்ந்தவராக தெரிகிறார் ..55 ஆண்டு பொதுவாழ்வில் மதிமுக தலைமையேற்று 25 ஆண்டுகளில் எத்தனை பொதுகூட்டங்கள் நடைபயணங்கள் என விவரித்து நிறைய இழந்துவிட்டதைப் போல பேசினார் .. உண்மையின் வலி உணர்ந்து பேசுகிறார்..
..
எங்கே சறுக்கியதென்பதை உணர்ந்ததன் வெளிப்பாடு .. திமுக பொதுச் செயலாளர் திமுக துரோகிகளின் பட்டியலிட்டு வைகோ பெயரை குறிப்பிட்டபோது எதிர்வினையாற்றவில்லை .. திமுகவின் தலைமை பொறுப்பை அடைய விரும்பி அதற்கான காய்நகர்த்தல்கள் செய்தபோதும் .. குமரிகடற்கரையில் அடுத்து நீதான் என இதே துரைமுருகனும்,வீராசாமியும் சொன்ன போது பெரியாரைப்போல கலைஞரும் 95 வயதுவரை உயிரோடிருந்தால் என வினவ நிசப்தம் நிலவியதே அப்போதே அடிசறுக்கியதை உணராமல் போனார் ..  13 ஆண்டுகளுக்கு பிறகு  ஆட்சிவந்த உடன் கள்ளதோணியில் இலங்கை பயணம் அது எந்தளவு தலைவலியை திமுக அரசிற்கு தந்தது .. கலைஞர் உயிருக்கே ஆபத்தென RAW எச்சரித்தபோதும்  தம்பி அப்படியெல்லாம் செய்யமாட்டான் என நம்பிக்கை தந்தாரே அந்த தலைவரின் தலைமையை எதிர்த்து திமுகவை உடைத்து 9 மாவட்ட செயலாளர்களோடு நாங்கள் தான் திமுக என்றென்ற போது கலைஞர் .. அண்ணா தந்த இயக்கத்தை கட்டிகாக்க எப்படியெல்லாம் போராடினார் .. தஞ்சையில் பொதுக்குழு நடந்தால் தான் பாதுகாப்பென அண்ணன் கோ.சி.மணியிடம் சொல்ல பொதுக்குழுவும் தொடர்ந்து பொதுக்கூட்டமும் ஏற்பாடானது 980 பேர்களுக்குமேல் கலந்துக்கொண்ட பொதுக்குழு கூட்டம் கலைஞரின் குரலுக்காக காத்திருந்ததே தழுத்தழுத்த குரலில் என் தலைவன் பேசும் போது கண்ணீர்களில் நீர்வழிய கூட்டம் அமைதிகாத்ததே.. இரவு பொதுக்கூட்டத்தை எப்படி நடத்துகிறார்கள் பார்ப்போமென சிலர் கலவரத்தை ஏற்படுத்த போகிறார்கள் என அறிந்து என்ன மணி இதெல்லாம் என்ற போது இரு வருகிறேன் என புறப்பட்டு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து மடித்துகட்டிய வேட்டியோடு மாவீரனைப்போல கர்ஜித்தாரே அண்ணன் மணி.. யாராவது எதையாவது செய்ய நினைத்தால் நடப்பதே வேறு என எச்சரித்ததும் அதை தொடர்ந்து கலைஞர் பொதுக்கூட்டத்தில் பேசியதும் மறக்கமுடியுமா வைகோ அவர்களே.. அதே இடத்தில் எத்தனை முறை கழகத்தின் கம்பீரக்குரலாய் கலைஞரின் போர்வாளாய் முழங்கியிருப்பீர்கள்..
..
திராவிட இயக்கம் தன்னலமற்ற தொண்டர்களால் தலைமைத்துவம் கொண்ட பெருந்தலைவர்களால் ஏற்றுக்கொண்ட கொள்கை வெற்றிபெறவேண்டும் என்ற வேட்கையோடு பணியாற்றும் எண்ணற்றவர்களால் உருவானது ..காலம் தலைவனின் தீர்மானிக்கும் ஆம்.. ஒருமுறை தலைவர் கலைஞரிடம் சங்கம் ஹோட்டலில் வைத்து நண்பரோடு சேர்ந்து நேர்காணல் செய்தபோது நீண்டகால தலைமையும் ஆலமர நிழலில் எதுவும் வளராமல் போகுமே என்று சிறுப்பிள்ளைத்தனமாய் கேள்வி எழுப்பிய போது காலம் தீர்மானிக்கும் நல்ல தலைமையை உருவாக்கும்  மறைந்த போது யார் தலைவரென்று கட்சி தீர்மானித்தது அதேபோல காலம் சரியானவரை முன்னிறுத்தும் தேர்வுசெய்யும் என்றார் .. 
வைகோ தொடர்ந்து கட்சியில் இருந்திருந்தால் இன்று துரைமுருகன் இடத்தில் அவர்தான் இருந்திருப்பார் .. 
ஈழப்பயணமும் அதை தொடர்ந்து தொடர் சறுக்கலும் சிலரின் தூண்டுதலால் "மறுமலர்ச்சி "யை ஏற்படுத்தபோவதே சொல்லி கடைசியில் மறுபடியும் திமுக என்ற நிலைக்கு பலர் வந்து சேர்ந்ததும்.. அடையாளம் மறுக்கபடுகிற சூழலில் நிற்பதும் மாணவர் பருவத்திலிருந்தே வைகோவை கண்டு வளர்ந்து கட்சியில் பணியில் அலைந்துதிரிந்த காலம் நிழலாடுகிறது.. சிறந்த பார்லிமெண்டேரியனாக, நல்ல பேச்சாளராக, இளகியமனம்படைத்தவராக உலக அரசியலை உணர்ந்தவராக இருந்தவர் உள்ளூர் அரசியலை அறியாது போனதும்.. தனக்கு சற்றும் பொருந்தாத தலைமைத்துவம் மதிமுக கட்சியை பலவீனபடுத்தியதும் தான் தமிழகம் கண்டது .. தன் மகன் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை என சொல்லும் போது பொதுவாழ்வில் காலம் தந்த கசப்பான உணர்வுகளும் வலியும் தெரிகிறது .. சிறந்த தலைவராக வரவேண்டியவர் காலமறியாது எடுத்த முடிவு பருவம் தெரியாது விதைத்தப்போல வீணாய் போனது .. தமிழக அரசியலில் தவிர்க்கமுடியாதவர்தான்.. ஆனால் துரோகம் என்ற சொல் பின்தொடர்ந்தே வரும் .. 
காலம் வலியது 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment