Sunday, July 30, 2023

அகவை அறுபதில்
அகமோ இருபதில் தான்..
இன்னமும் ..
செய்தததும் 
செய்ய செய்தததும் 
புள்ளியை தாண்டவில்லை..
ஆனாலும் அகம் மகிழ்கிறது 
..
வஞ்சனை இல்லை 
தற்புகழ்ச்சி இல்லை
வேண்டாததை விரும்பியதில்லை 
நீண்ட நாள் பகைமை கொணடாடியதில்லை 
அதிகம் ஆசைப்பட்டதில்லை 
ஆணவம் தலைக்கேற்றியதில்லை 
ஆனாலும் 
அவசரமும் கோபமும் அகன்றபாடில்லை..
..
வழி நெடுக நல்லவர்கள் 
வழிகேட்டில் விழாமல் காத்தனர் 
அறம் சார்ந்த அறிஞர்கள்
பகுத்தறிவை தந்தனர்.. 
வழிபோக்கனைப்போல வந்து சிலர் 
வாழ்வை வாழச் சொன்னனர்..
புத்தி போதாதது என்றனர்..
தலையில் கொட்டியும் 
தோளில் தட்டியும் 
செப்பனிட்டனர் 
..
ஆசைப்படு அளவோடு 
அகந்தை குறை..
பசித்து உண்,
பகிர்ந்து வாழ் 
பக்கத்து வீடடுக்காரனை நேசி 
இரக்கமும் ஈகையும் விடாதே 
அது உன்னை 
சரிந்துவிடாமல் காக்கும் 
பெரியவர்களை பேச விடு 
ஆடுவதை குறை.. 
ஆர்ப்பார்ட்டம் தவிர் 
என்றான் வழிபோக்கன் ..
..
நிலம் உனதல்ல 
நீ வந்து போகிறவன் 
முன்னவர்கள் 
நட்டதையும் விட்டதையும்
அனுபவிக்கிறாய் 
எதேனும் மிச்சம் வை 
ஓரு செடியேனும் நடு 
அது நிழலேனும் தரலாம் 
இங்கே எதுவும் உனதில்லை 
என்றான் வழிப்போக்கன் 
..
இத்தனை ஆண்டுகள் ஆயினும்
என்ன செய்தோம் என்ற கேள்வி துரத்துகிறது 
அன்பை விதைக்கவும்
பகுத்தறிவுக்கொண்டு 
கற்றதை போதிக்கவும் 
பாகுபாடற்ற சமுகம் அமைய
சிறியளவிலேனும் 
இயங்கிட வேண்டும்..
கற்றதை அறிந்ததை 
பிறர் சொல்லிக் கேட்டதை 
மூடம் தவிர்த்து 
முன்னோர் செப்பியதை இயன்றளவு எழுதிட வேண்டும் 
..
என்னையும் மீறி 
ஆர்ப்பரித்தெழும் 
அகந்தை 
தான் எனும் திமிர்
சின்ன சின்ன விடயங்களில்
காட்டும் அலட்சியம் 
எதிர்கருத்தை 
இளக்காரம் செய்தல் 
புரிந்தே புரியாததுபோல் நகர்தல்
சுற்றிவளைத்து சொக்கட்டான் ஆடுதல்
செவி இருந்தும் கேட்க மறுத்தல்
சில நேரம் சிலநேரம் அமைதியாய் இருத்தல் 
இவையெல்லாம் விடுதல் வேண்டும்..
..
அறுபதென்பது 
வெறும் "எண்" தான்
இன்னும் நிறைய 
தேட
சேகரிக்க,
கற்க.. 
கற்றதை "பறைய"
வேண்டியிருக்கிறது ..
காலம் தரும்/ தந்த படிப்பினையை
வரும் தலைமுறைக்கு தரவேண்டும்
நல்ல மனிதர்களை கொண்டிருக்கிறேன் 
அவர்களின் வாழ்த்துகளோடு 
தொடர்வேன்..
..
ஆலஞ்சியார் 







 

No comments:

Post a Comment