Monday, July 31, 2023

அகவை..
ஒன்று 
கணக்கில் கூடி..
..
என் தேடல்
நின்றபாடில்லை
தேடல் இல்லையேல்
நானில்லை..
..
காதலில்
கவிதையில்
அறிவியலில்
ஆன்மீகத்தில்
என் தேடல்..
நின்றபாடில்லை ..
..
என்னை நானே
எடைப்போட
கிழிசல்கள்
நிறைந்த
உண்மைகள்
வலிதரும்
பக்கங்கள்
அதை வார்த்தையில்
வடிக்க ..
என்னால் இயலாது ..
.. 
உண்மையை மட்டும்
பேசி போக
யோகி இல்லை நான்
கெட்டவன்..
கேடுகெட்டவனில்லை..
மிருகம் சிலநேரம் 
என்னுள்
வந்து போகும்..
..
ஒரு சார்பு பேசும்.
திராவிடன்..
தமிழ் பேசும்
பாமரன்..
அன்பு பேசினால்
அடங்கிப்போவேன்
அடக்க நினைத்தால்..
ஆட்டிவைப்பேன்..
..
சினம் சொன்னால்
சிவந்து போவேன்
சிரிக்கச் சொன்னால்
கரைந்து போவேன்
தமிழ் சொன்னால்
மலர்ந்துப்போவேன்..
..
அன்பில் மலரும்
அருந்தமிழ் பேசும்
அறிவியல் பேசும்
சான்றோர்கண்டால்
எழுந்து நிற்பேன்
..
அடிமை பேசும்
மடமைச் சொல்லும்
அறிவிலி கண்டால்
சிரித்து வைப்பேன்..
..
தினம் தினம்
புதிதாய் ஒரு
புத்தகம் ..
சில..பக்கங்கள்
சிலவரிகளாவது
வாசிக்க வேண்டும்
புதிதாய் 
ஒர்அறிவு
தினம் தினம் வேண்டும்..
..

வெற்றி..தோல்வி
உழைப்பு.. உயர்வு
அகங்காரம் ஆணவம்
அமைதி அன்பு..
நல்லது கெட்டது
எல்லாம் வேண்டும்
என்னை இழக்காத
என்னுள் வேண்டும்..
..
யாரையும் துன்புறுத்தாக
சொல்லில் சுவைமாறாத
சொக்க வைக்கும்
தேன் தமிழ்..
என்னுள்..
தீயாய் வேண்டும்
அணையாத..
தீயாய் வேண்டும்..
..
இரக்கம் கொள்ளும்
இதயமும்..
ஈகை கொண்ட நெஞ்சும்
சுனை  மாறா அறிவும்..
நிறம் மாறாமல் நானும்..
வேண்டும்..

***********************
என்னை தொலைபேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து சொன்னவர்களுக்கும் முகநூலில் வாழ்த்திட்ட நல்உள்ளங்களுக்கும் 
நேரில் வந்து வாழ்த்திய நண்பர்களுக்கும் 
நன்றி!..
..
#நன்றியோடு..
*******************
அன்பெனும்
பெரும்மழையில் நான்
கொஞ்சம் மூச்சு முட்டுகிறது
அன்பிற்குண்டோ 
அடைக்கும்தாழ்..
..
முன்னிலும் முனைப்பாய்
செயல்பட வேண்டும்
இன்னும் இன்னும் 
நிறைய அறிந்திட வேண்டும்
புதிதாய் தினமொரு சேதி
அறிவில் சேர்த்திட வேண்டும்..
..
பழைமை பேசி
பாசாங்கு செய்வோரை
அறிவின் கூர் கொண்டு
வென்றிட வேண்டும்..
மூடம் தொலைத்து
முற்போக்கு விதைத்து
சொல்லும் சொல்லின்
வலிமை உணர்ந்து
கொண்ட கொள்கை
உறுதியுடைத்து
செப்பிடவேண்டும்..
..
அறிவேற்றதை
ஆய்ந்து சரியென்பதை
நாகரீகமேலிட
நல் சொல்லெடுத்து
நா.. இனிக்கும்
தேன்தமிழ் குழைத்து..
நல்லவர் சபையில்..
நவின்றிட வேண்டும்..
..
எப்போதும் போல்
இயல்பாய்..
இனிதாய்
ஈகைக்குணத்தோடு..
நேர்மையாய்
நான் ..நானாகவே
எப்போதும் வேண்டும்..
இன்னும் கொஞ்சம்
விரிவாய் விவேகமாய்
பகைவரும் 
போற்றும்வண்ணம்
கதைக்கவேண்டும்...
..
#அன்பெனும்_பெரும்மழையில்_நான்
..
ஆலஞ்சியார்

Sunday, July 30, 2023

அகவை அறுபதில்
அகமோ இருபதில் தான்..
இன்னமும் ..
செய்தததும் 
செய்ய செய்தததும் 
புள்ளியை தாண்டவில்லை..
ஆனாலும் அகம் மகிழ்கிறது 
..
வஞ்சனை இல்லை 
தற்புகழ்ச்சி இல்லை
வேண்டாததை விரும்பியதில்லை 
நீண்ட நாள் பகைமை கொணடாடியதில்லை 
அதிகம் ஆசைப்பட்டதில்லை 
ஆணவம் தலைக்கேற்றியதில்லை 
ஆனாலும் 
அவசரமும் கோபமும் அகன்றபாடில்லை..
..
வழி நெடுக நல்லவர்கள் 
வழிகேட்டில் விழாமல் காத்தனர் 
அறம் சார்ந்த அறிஞர்கள்
பகுத்தறிவை தந்தனர்.. 
வழிபோக்கனைப்போல வந்து சிலர் 
வாழ்வை வாழச் சொன்னனர்..
புத்தி போதாதது என்றனர்..
தலையில் கொட்டியும் 
தோளில் தட்டியும் 
செப்பனிட்டனர் 
..
ஆசைப்படு அளவோடு 
அகந்தை குறை..
பசித்து உண்,
பகிர்ந்து வாழ் 
பக்கத்து வீடடுக்காரனை நேசி 
இரக்கமும் ஈகையும் விடாதே 
அது உன்னை 
சரிந்துவிடாமல் காக்கும் 
பெரியவர்களை பேச விடு 
ஆடுவதை குறை.. 
ஆர்ப்பார்ட்டம் தவிர் 
என்றான் வழிபோக்கன் ..
..
நிலம் உனதல்ல 
நீ வந்து போகிறவன் 
முன்னவர்கள் 
நட்டதையும் விட்டதையும்
அனுபவிக்கிறாய் 
எதேனும் மிச்சம் வை 
ஓரு செடியேனும் நடு 
அது நிழலேனும் தரலாம் 
இங்கே எதுவும் உனதில்லை 
என்றான் வழிப்போக்கன் 
..
இத்தனை ஆண்டுகள் ஆயினும்
என்ன செய்தோம் என்ற கேள்வி துரத்துகிறது 
அன்பை விதைக்கவும்
பகுத்தறிவுக்கொண்டு 
கற்றதை போதிக்கவும் 
பாகுபாடற்ற சமுகம் அமைய
சிறியளவிலேனும் 
இயங்கிட வேண்டும்..
கற்றதை அறிந்ததை 
பிறர் சொல்லிக் கேட்டதை 
மூடம் தவிர்த்து 
முன்னோர் செப்பியதை இயன்றளவு எழுதிட வேண்டும் 
..
என்னையும் மீறி 
ஆர்ப்பரித்தெழும் 
அகந்தை 
தான் எனும் திமிர்
சின்ன சின்ன விடயங்களில்
காட்டும் அலட்சியம் 
எதிர்கருத்தை 
இளக்காரம் செய்தல் 
புரிந்தே புரியாததுபோல் நகர்தல்
சுற்றிவளைத்து சொக்கட்டான் ஆடுதல்
செவி இருந்தும் கேட்க மறுத்தல்
சில நேரம் சிலநேரம் அமைதியாய் இருத்தல் 
இவையெல்லாம் விடுதல் வேண்டும்..
..
அறுபதென்பது 
வெறும் "எண்" தான்
இன்னும் நிறைய 
தேட
சேகரிக்க,
கற்க.. 
கற்றதை "பறைய"
வேண்டியிருக்கிறது ..
காலம் தரும்/ தந்த படிப்பினையை
வரும் தலைமுறைக்கு தரவேண்டும்
நல்ல மனிதர்களை கொண்டிருக்கிறேன் 
அவர்களின் வாழ்த்துகளோடு 
தொடர்வேன்..
..
ஆலஞ்சியார் 







 

Tuesday, July 18, 2023

NDA கூட்டம்.. 🤣
எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து 
I.N.D.I.A (Indian national Democratic Inclusive Alliance) 
அமைந்தவுடன் தன் கூட்டணி கட்சிகளை அழைத்து கூட்டம் நடத்தி நம்மை
 நகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது.. 
..
யாரெல்லாம் இவர்களோடு என்பதிலிருந்தே தெரிகிறது பாஜகவின் பதற்றம் .. சிவசேனாவிலிருந்த  பிரிந்து வந்த ஏக்நாத் ஷிண்டே  தேசியவாத காங். லிருந்து பிரிந்து வந்த அஜித் பவார், நிதிஷ்குமாரின் பிரிந்த ஜித்தன்ராம், என பரிதாபகரமானவர்களை வைத்துக்கொண்டு NDA கூட்டணி ஆலோசனைக் கூட்டம் .. அதில் தமிழகத்திலிருந்து த.மா.க வாசன்,புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் பச்சைமுத்து போன்ற செல்வாக்குமிக்க🤣 தலைவர்கள் காண  I.N.D.I.A அணி திகைத்து நிற்கிறது..
..
பிரதமர்  ஊழல்வாதிகள் கூட்டணி அமைத்திருப்பதாக எடப்பாடியையும்  அஜித் பவாரையும் வைத்துக் கொண்டு  சிரிக்க வைக்கிறார் ..
பாஜகவின் பயமும் தோல்வியும் 
கண்முன்னே தெரிகிறது 
பாஜகவின் அராஜகம் கட்சிகளை உடைத்து  கொள்ளைப்புற வழியே ஆட்சி அமைப்பது  அரச இயந்திரத்தை மிரட்டவும் பயமுறுத்தவும் பயன்படுத்துவது தங்களை தவிர யாரும் யோக்கியர்கள் இல்லை என நினைப்பது,  நீதித்துறையையும்  தன்னாட்சி அமைப்பையும் அலங்கோலப்படுத்தி ஜனநாயக மாண்புகளை கொன்று சர்வாதிகாரத்தின் உச்சத்தில் நின்று கொக்கரிப்பதும், நாடாளுமன்றத்தில் ஊழல்,பொய், என்று கூட பேசகூடாது என தடை விதித்து அவசரகாலத்தை விட  மோசமான 
உண்மையில் ஜனநாயகற்ற நிலை..
 நாடு மிக மோசமான காலகட்டத்தில் மீண்டும் ஒரு சுதந்திர போர் தேவை என்பதை உணர்ந்து எதிர்க்கட்சி கள் ஒருங்கிணைந்திருப்பது நம்பிக்கையை  தருகிறது
..
ராகுல் மிக தெளிவாக பாஜகவிறகும் எதிர்க்கட்சிக்குமான போராட்டம் அல்ல நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் கொள்கைக்கெதிரான  போராட்டம் என்கிறார்.. உண்மை அதுதான் பாஜகவின் செயல்பாடுகள் அதிகார தோரனைகள், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்ற திமிர் பேச்சுகள், ஊடகங்களை விலைக்கு வாங்கி தொடர் பொய் பரப்புரைகள்,நீதிபதிகளை மிரட்டபடுவதும் கருத்தியலாளர்கள் கொல்லபடுவதும், சிறுபான்மையினரும் பட்டியியலினத்தவர் மிரட்டி ஒடுக்கபடுவதும், பன்முகத்தன்மையை சிதைக்க நினைப்பதும் மத கலவரங்கள் மூலம் பதற்றத்தை கொண்டுவந்து மக்களை பீதியில் வைத்திருப்பதும் சாதி மோதலை உருவாக்கி மக்களின் உணர்வுகளை வெறியூட்டி குளிர்காய்வதும் தான் பாஜகவின் அரசியல் சித்தாந்ததம்..
..
மக்கள் நிம்மதியோடு ஒற்றுமையாய் பல்வேறு சமய கோட்பாடுகளும்,நம்பிக்கைகளும், மற்றவர் வாழ்வில் இடைஞ்சலாக இல்லாமல் வாழ்ந்து உலகிற்கு இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்று பறைச்சாற்றி வாழ்ந்த நாட்டில் மதம் பிடித்து நாசம் செய்துவிட்டது ..  தெருவில் போகும் ஒன்று வீட்டிற்கும் நுழைந்து அழுக்காக்கிவிட்டு போனால் துடைத்து சுத்தம் செய்துதானே ஆகவேண்டும்  அதை செய்ய தான் (I.N.D.I.A).. 
தேசத்தின் தேவையும் அதுதான் 
..
இழந்த ஜனநாயகத்தை மீட்க அனைவரும் ஒற்றுமையாய் வாழ பாசிச பயங்கரவாத கொடுங்கோல் ஆட்சியை விரட்டியடிக்க இன்றைய
 தேவை.. (I.N.D.I.A).. 

எங்களுக்கு பதவி தேவையில்லை இந்தியாவை மீட்டெடுக்க வேண்டியது மிக முக்கியம் என காங்கிரஸ் உணர்ந்திருக்கிறது..  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்க்கே .. மிக தெளிவான திட்டமிடலோடு தொடங்கி பயணிக்கிறது .. பாஜக அதனால் தான் பதறுகிறது ..  
..
தொடர்ந்து ஒருகட்சி பத்தாண்டுகளுக்கு மேல் அதிகாரத்தில் இருப்பது ஜனநாயகத்திற்கு கேடு .. பாசிசத்தின் கொடூர பற்களை பிடுங்குவோம்.. இந்தியாவை சுத்தப்படுத்துவோம்.. 
இந்திய ஒன்றியம் நமக்கானது எவன் அப்பன் வீட்டு சொத்தும் இல்லை.. 
Really 
INDIA is BORN..
..
தமிழ்நாடு பிறந்த நாளில்
I.N.D.I.A பிறந்தது மகிழ்ச்சி ..
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்
மதுரையில் ஓர் அறிவாலயம்.. 
..
எழுதுகோல் கொண்டு சமூகத்தை பண்படுத்திய பேரரசனின் நூலகம்
ஒரு இனம், சமூகம் மேம்பட, பண்பாட்டை காக்க, இனத்தின் மேன்மையும் வளமையும் அழியாது காக்க, புனைச்சுருட்டுககளைச் சொல்லி மடமையில் மூழ்க செய்யாமல் அறிவுக்கொண்டு பார் உண்மை விளங்கும் வரலாறு தெரியும் பண்பாடும் கலையும் மொழிவளமும் சொல்லாட்சியும் புரியும் என்ற மாமன்னனின் பெயரில் ஒரு அறிவாலயம்.. அரசியல், சமூகநீதி, தொலைநோக்கு சிந்தனை,பார்வை,செயல் என வாழ்ந்த காலத்தில் "தரு" வாய் நின்று நிழல் தந்த எங்கள் ராசராசனின் பெயரில் நூலகம்..
சமூகத்தின் இருளகற்ற காலமெல்லாம் எழுதிய கலைஞரின் பெயரில் நூலகம் ஆதிக்கத்தின் பிடியில் இருந்த கல்வியை அனைவருக்கும் கிடைக்க ஊர்தோறும் பள்ளி, தொடங்கி மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரியென கல்விப்புரட்சி செய்த பெருமகனார் கலைஞர் பெயரில் நூலகம் 
சங்கம் வளர்த்த மதுரைக்கு ஓர் பொன் மகுடம் 
..
 ஒரு இனத்தை வரலாற்றை பறைசாற்ற,  அறிவுடைமை சமூகமாய் திகழ்ந்த தமிழனின் வரலாற்றை, எதையும் அறிவுக்கொண்டு பார்த்த தமிழனின் பெருமையை உலகிற்கு சொல்ல தமிழ் வளர்த்த மதுரையில் மாபெரும் நூலகம்  .. என்பதாண்டு பொதுவாழ்வு பெருமகனுக்கு இந்திய ஒன்றியத்தின் தவிர்க்கமுடியாத ஆளுமையாய் தன் தொலைநோக்கு சிந்தனையால் எவரும் தொட முடியாத உச்சத்தை தொட்ட பேரறிவாளனின் பெயரில் நூலகம் 
விளிம்புநிலை மக்களின் துயர் துடைக்க காலமெல்லாம் உழைத்த ஓய்வறியா ஒப்புமையில்லா பேரருளாளனுக்கு மதுரையில் புகழ்பேச ஓர் அறிவுசுரங்கம் 
..
நூலகம் அறிவின் நுழைவாயில் ..
அறிவுடைய சமுதாயமாக மாற நல்லொழுக்க சமூகத்தை சமைக்க,எதையும் அறிவுக்கொண்டு பார் விளங்கும் புரியும் மேம்படும் , அறிவின் நிழலே பண்பை தரும், உலகத்தை அறியலாம், பொய் எது என புரியும் புரட்டுகள் பொசுங்கும்,  உண்மை எனும் ஒளி வழிகாட்டும், வழிநடத்தும்,..
..
கலைஞர் நூற்றாண்டு நூலகம் பன்முகத்தனமையோடு ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாய் அமைந்திருப்பது திராவிடம் தந்த அறிவுப்பசிக்கான தீனி .. குழந்தைகள் தொடங்கி ஆய்வு மாணவர்கள் என அனைவருக்கும் பயன்படும் வகையில் அமைந்திருப்பது திராவிட அரசு படிப்பிற்கு தரும் முக்கியத்துவத்தை சொல்கிறது இந்திய ஒன்றியத்திலேயே அதிகம் நூலகம் கொண்ட தமிழ்நாடு அதனால் தான் சிலர் பதறுகிறார்கள்.. மக்களை மடைமையில் வைத்திருந்தால் ஏன் என்று கேட்க மாட்டான் மதத்தை புராணபுரட்டைச் சொல்லி வயிறு வளர்க்கலாம் அடிமையாக நடத்தி அதிகாரம் செய்யலாம் என நினைப்பவர்கள் கலக்க மடைகிறார்கள்.. பெட்டிகடை வைத்து முதலாளியாகலாம் அப்பன் தொழில் இருக்க ஏன் அடுத்தவனிடம் கைக்கட்டி வேலை பார்க்கிறாய் என மடைமாற்ற செய்கிறார்கள் ஆனால் திராவிட அரசு கல்வி முக்கியம், அதுவே உன்னை திருத்தும் மேம்படுத்தும் உயர்த்தும் நல் வழிகாட்டும் மானத்தோடு தலை நிமிர செய்யும் என தொடர்ந்து அறிவுக்கண்ணை திறக்க கடமையாற்றுகிறது.. 
 ..
நூலகம் அறிவின் திறவுகோல்..
திராவிடம் அறிவின் தேடலுக்கான பாதை .. மாண்பமை தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல்  கருணாநிதி ஸ்டாலின்
Chief Minister of Tamil Nadu 
M. K. Stalin 
 மாபெரும் அறிவு சுரங்கத்தை மக்களுக்கு தந்து வரலாற்றில் இடம் பெறுகிறார் .. காலமெல்லாம் தமிழ் சமூகம் நன்றியோடு நிற்கும் ..
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

Friday, July 7, 2023

நாடு..
இந்தியா மிக மோசமான சூழலில்,  கடமை உணர்வற்ற ஊடகங்கள், நெறிதவறும்,நீதிமன்றங்கள், பாவிகள் தங்களோடு இணைந்தால் அடுத்த நொடி புனிதர் ஆகலாம்.. கோடிகளில் ஊழல் செய்ததாய் அமலாக்கத்துறை ரெய்டு  நடத்தி பாஜகவில் இணைத்து புனிதவேசம் கட்டுகிற கொடுமை.. சனாதனம் தான் நாட்டை ஆள்கிறது, ரஷிகளும் மகான்களும் தான் வழிநடத்துவதாக ஒரே கூச்சல்.. நாட்டின் சட்டங்கள் வளைந்து நிற்கிறது.. தலைமை அமைச்சர் ஊழலை ஒழிப்பதே என் தலையாய பணி என்று PMCARE திட்டத்தில் எவ்வளவு வந்தது எப்படி வந்தது எங்கு சென்றதென சொல்லமறுத்து நியாயஸ்தன் ஆகிறார்.. 
..
பக்கத்து வீட்டுகதவில் சிறுநீர் கழித்தவனை நாம் கண்டுக்கொள்ளாததால் மனபிறழ் மனிதனை மூஞ்சியில் சிறுநீர் கழிக்கிறான் மனநோயாளி.. பிஞ்சு குழந்தையை கற்பழித்தவன் மாலைபோட்ட வரவேற்கிற நிலை  திருடனும் கொலைகாரனும் பாரத் மாதாக்கீ ஜெ போடுகிறான் கிரிமினலை கட்சி சேர்த்து கட்சியை வளர்க்கிற பாஜக தேசத்தின் சாபம்
..
நீதிமன்றங்கள் நீதியை இழந்து நிற்கிறது   வேண்டியவர்கள் தண்டிக்கபட கூடாதென காலதாமதம் செய்து ஊழல் குற்றவாளிக்கு அரசு செலவில் நினைவு மண்டபம் அமைக்கும் அதிசயம் உலகில் எங்கும் பார்க்க முடியாது .. ராணுவத்தில் பிடியில் இருந்த அண்டை நாட்டில் கூட உச்சநீதிமன்றம் நடுநிலையாக நின்றது இங்கே சொல்வதற்கே படு கேவலம்..
..
தீர்ப்பு வல்லவனுக்கே சாதகமாய் நிற்பதும் சாமானியன் சொல்லன்னா துயரை சந்திப்பதும் 
நெறி தவறும் நீதியாளர்களுக்கு பணி முடிந்து உயர் பதவி தருவதும்  நேர்மையோடு சட்டத்தின் அடிப்படையில் தான் தீர்ப்பு சொல்வேன் என்போருக்கு கொலை மிரட்டல் விடுப்பதும் அரசே அதற்கு துணை நிற்பதும் இந்திய ஒன்றியத்தின் இறையாண்மையை கொன்று தின்கிறது 
..
உலகின் சிறந்த ஜனநாயக கட்சி, நாங்கள் தான் ஊழலுக்கு எதிரானவர்கள் உத்தமர்கள் என்பவரின் பொய்களையும் வேசகட்டலையும் கணக்கிட்டால் அழுகிய வாடை வருகிறது ..  தேர்தல் நேரத்தில் பொய்யான தகவலை தந்ததற்காக பதவியை பறிக்கலாமென்றால் முதலில் பட்டம் பெற்றதாக தாக்கல் செய்த மூலவரை தான் முதலில் நீக்கவேண்டும்.. அப்பாவு வழக்கில் இன்னமும் தீர்ப்பு வரவில்லை.. 
..
இந்தியாவின் முகம் உலக அரங்கில் வேர்த்து நிற்கிறது.. மதமும்,சாதியும், புராணபுரட்டும், பொய்யும், கலவரமும் மானுடப் பற்றற்ற செயலும் இந்தியா எனும் பிரமாண்டத்தை சிதலடைய செய்கிறது.. நாக்கில் ராமரும்,கக்கத்தில் கொடுவாளும் வைத்திருக்கிறார்கள் என்றார் அம்பேத்கர்.. இந்த மண்ணை சிறு சுயநலக்கூட்டம் தங்களின் வளரச்சிக்காக,  பெரும் சமூகத்தை மடைமையில் ஆழ்த்தி சுகமாக வாழ்வு  வாழ்கிறது.. இந்திய நற்குணமே பன்முகததன்மையில் பெருமைக்கொள்வதும், இணைந்து நிற்பதும் தான்.. பாஜக ஆட்சிக்கு வந்ததலிருந்து ஒரு கூட்டம் மட்டம் உயர்வடைகிறது .. விடுதலை பங்கு கொள்ளாத கூட்டம் அது.. திறக்கப்படாத கதவுகளுக்குள் காரியம் சாதிக்கும் கூட்டம் அது..
இந்திய ஒன்றியத்தின் நெடும் துயரம் அது ..
..
இந்துத்துவா என்பது அனைத்து இந்து சமூகத்திற்கானதல்ல .. எல்லோரையும் சமமாக நடத்தபடுவதுமல்ல .. ஒருசாராரின் எண்ணங்களும், மேன்மையும்,காத்துநிற்க பயன்படுமே தவிர ஒரு பயனுமில்லை.. மனநோய் பாதித்த இளைஞரின் மீது மூத்திரம் கழிக்கும் செயல்தான் அவர்களின் யதார்த்தம் ..இதோ மூத்திரம் கழித்த சுக்லா குடும்பத்திற்கு ₹50,000 பிராமணர் சங்கம் அறிவித்திருக்கிறது ..இதுதான் அவர்களின் உண்மையான முகம் 
 ..
2024 அனைவரையும் அரவணைத்து, வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்கி சமநீதியை வழங்கி பதற்றமற்ற சூழலை தரும் நிலை வரவேண்டுமானால் பாஜக விரட்டப் வேண்டும்  பொய்யர்களின் கூடாரம் தகர்க்கபடவேண்டும் மதவெறியும் கலவரமும் ஆயுதமாக கொண்டு திரியும் மகாபாவிகள் கையிலிருந்து இந்தியா மீட்கபடவேண்டும்  சுய பெருமை
களைந்து நாட்டை மீட்க ஒற்றுமையாய் ஒருங்கிணைந்து நின்றால் வெல்லலாம்.. எதிரி ஒன்றும் அத்தனை பலசாலி இல்லை ஆனால் பிரிக்கும் சூழ்ச்சி அறிந்தவன் .. 2024 நமக்கானது வெல்வோம் 
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

Monday, July 3, 2023

உதயநிதியின் பார்வையும், பதிலும் அவரின் அரசியல் புரிதலையும் மேன்மையையும் காட்டுகிறது .. ஈராயிரமாண்டு அடித்தமர்த்தலை சில ஆண்டுகளுக்குள் மாற்றத்தை தந்துவிட முடியாதென்றாலும் ஐம்பதாண்டுகளாக அதன் பிரச்சாரத்தை அடுத்த கட்ட நகர்வை நோக்கியே திராவிட இயக்கங்கள் பயணிக்கின்றன..
..
யாரெல்லாம் ஆதிக்கம் செலுத்துகிறாரகளோ அவர்களுக்கெதிராக தான் இயக்கம் நின்றிருக்கிறது, தொடர்ந்து  நிற்கும்.. பெண்கள் மீது குடும்பம் திணிக்கும் ஆதிக்கம், 
அடிமைத்தனம் தொட்டு  எங்கெல்லாம் எவரெல்லாம் அழுத்தபடுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவாய் நின்று குரல் கொடுக்கும்..  காலங்காலமாய் அமுக்கிவைக்கபட்டவர்கள்,மூர்ச்சையாகி கிடந்தவர்கள் இன்று தலைநிமிர காரணியாக திகழ்ந்தது திராவிட இயக்கங்கள்தான்
..
தலித்தியம் பேசும் இயக்கங்கள்,நபர்களுக்குள்ளும் பாகுபாடும், தீண்டாமையும் இப்போதுமிருப்பதை காணலாம்.. இன்றும் அருந்ததியர்களை  சக்கிலிய பய என்றழைக்கும் பறையர் "பெருமகன்களை" ரஞ்சித்தின் கவனகுறைவாக பார்க்கவேண்டுமா..,? அருந்ததியினர் உள்பட ஓதுக்கீட்டை எதிர்த்தவர்கள் யார்
 இடைசாதி திமிரென்பவரகள் தங்களை விட தாழ்நதவன் என்ற மனப்பான்மையை விடவேண்டும்.. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்றுணர்தல் வேண்டும்..
..
இந்திய ஒன்றியத்திற்கே எடுத்துக்காட்டாய் சமூகநீதியை பறைசாற்றும் மாநிலம் தமிழ்நாடுதான் முழுவதுமாக சமநீதியை உரிமை பெற்றுதந்துவிட்டோம் என்றெல்லாம் தம்பட்டம் அடிக்க மாட்டேன் இன்னும் அடக்குமுறையும் ஆணவமும் தலைக்காட்டுகிறதென்பதும் அதற்கு சாதி மத அமைப்புகள் காப்புகட்டுவதும் , தேர்தல் அரசியலில் பெரியளவில் ஆதிக்கம் செலுத்துவதும் மறைப்பதற்கோ மறுப்பதற்கோ இல்லை .. நிறைய தடங்கல்களும் தடைகளும் தொடர்ந்தாலும் இன்னமும் வெகுமக்களை பாகுபாடற்ற சமூகத்தை உருவாக்க காரணியாய் அமைந்ததற்கு திராவிடமே காரணம்.. வடமாநிலங்களில் முதல்குடிமகனை நடத்தும்விதம் நாம் காண்பதுதான்.. இங்கே எதிர்த்து பேசவும் போராடவும் உரிமைகளை பெறவும் பெரியாரெனும்  பெருஞ்சுடர் வெளிச்சம் தந்தது .. 
..
திமுகவை விமர்சிக்கும் இவர்கள் சனாதனத்தை, ஏற்றதாழ்வை, தங்களின் சித்தாந்ததமாக கொண்டு செயல்படும் பாசிச பாஜகவை மெல்லியளவில் கூட தும்முவதில்லை.. இவர்கள் சமூகநீதி எல்லாம் திமுக எதிர்ப்பில் கரைந்துபோகும் .. 
..
நீங்கள் இப்போது தான் சமூகநீதிப் பற்றி
பேச முனைகிறீர் நாங்கள் ஏற்கனவே விரிவுரை நிகழ்ந்தியவர்கள்.. "பராசக்தி" அருளியவர்கள் மலைக்கள்ளனையும் மாமன்னனாக்கிய கூட்டம்ங. 
"பரியாரி" கடையை சிகை அலங்காரக்கடையாக மாற்றியவர்கள்.. திமுக சமூகநிதிக்கான இயக்கம் தொடர்ந்து பேசும்  பகுத்தறிந்து செயல்படும்.. 
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்
மாமன்னன் ..
சமூக அவலங்களை இன்னும் இங்கே ஏன் தேவை பெரியாரிய கருத்துகள் என்பதையும் இந்த கட்டமைப்பே "கௌரவம்" எனும் போதையில் வீழ்ந்து கிடைப்பதை என்னதான் அதிகாரத்தில் அமர்த்தினாலும் எங்கள் முன் பொம்மலாட்ட பொம்மைதான் என்பதையும் அதன் வலியையும் மிக நேர்த்தியாக காட்சிபடுத்தியிருக்கிறது ..
..
வடிவேலு எனும் "மகாகலைஞன்" வாழ்ந்துகாட்டியிருக்கிறார் .. ஃபஹத் இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகரில் ஒருவர் அவரின் கண்கள் அவரை உடல்மொழியை,குணத்தை அவரின் பாத்திரத்தை பேசுகிறது.. நூறுபக்க வசனத்தை அவரின் கண் மொழி நொடியில் உணர்த்திவிடுகிறது .. உதய் சிறந்த கதை தேர்வை அரசியல் சமசரம் செய்து கொள்ளாமல் நடித்திருப்பது கவனத்தை ஈர்க்கும் 
.. 
சமூகநீதி என பேசிக்கொண்டிருந்தாலும் இன்னமும் சம நீதியை நம்மால்  வழங்க முடியவில்லை என்ற உண்மை நம்மை அறைகிறது..  சில காட்சிகள் நுண்ணரசியலை எது நமக்கு சாத்தியம் பாதுகாப்பு என்பதை சொல்கிறது .. வடிவேலு வீட்டில் புத்தரும் அம்பேத்கரும் ஆனால் பிரச்சனையை தீர்க்க முதல்வரை சந்தித்த விட்டு போகும் போது பாத்துப்போ என்கிற போது நான் பழைய மாமன்னனல்ல என வடிவேலு சொல்வார் அப்போது பெரியாரை காட்டுகிறார்கள் மெல்லிய புரிதல் வருகிறது தமிழ்நாட்டில் பெரியாரெனும் "பெருஞ்சுவரே" காக்கும் வழிநடத்தும் ஒருங்கிணைக்கும் என்பதை உணர்த்துகிறது  நமது அடையாளம் பெரியார் தான்
..
எத்தனையோ பேர் சொல்லியும் உட்காரமாட்டார்ண்ணு சொல்லுறீயே நீ உட்கார சொன்னீயா ..?
, உங்க அப்பாவை நிக்கவைச்சது என் அடையாளம் உன்னை உட்கார சொன்னது என்னோட அரசியல் 
என கூர்மையான வசனங்கள்
மிரட்டல் நடிப்பு, காட்சிபடுத்திய விதம் அழகுதருகிறது 
தமிழ் சினிமாவில் இன்னமும் நாம் பேச வேண்டிய விவாதிக்க வேண்டிய புரிந்துக்கொள்ள வேண்டிய விடயங்கள் வரவேண்டும், தலித் அரசியலாக பார்க்காமல் தங்களை உயர்ந்தவர்களாக நினைக்கும் மனநோயை சீர்படுத்த வேண்டியதை தொடர்ந்து தமிழ் சினிமா செய்யும் இங்கு பேசாமல் வேறெங்கு பேச முடியும் .. 
சாதி மசுருல்லாம் இல்ல அப்பன் எனக்கு கொடுத்துவிட்டு போனது நான் என் மகனுக்கு நான் கொடுக்கணும் என்ற வசனம் உறைய வைக்கிறது 
..
பொழுதுபோக்கிற்கான படமல்ல சமூகத்தின் பழுதை நீக்க சொல்லும் படம் .. சமூகநீதி,சமநீதி வேண்டுமென்பதை சொல்லும் திரைப்படம்
 ..
ஆலஞ்சியார்