ஒரு படம் ..
மனதை உலுக்கி தூங்கவிடாமல் செய்யுமா.. விளிம்புநிலை மக்கள் அதிலும் "இருளர்கள்" இருப்பிடம் கூட இல்லாத நாடோடிகள் என அறிய படும் பூர்வகுடிகள் பற்றிய படம் .. சிறிது பிசகினாலும் டாக்மன்ட்ரி வாசம் அடிக்கும் மிக நேர்த்தியாக செதுக்கியிருக்கிறார் இயக்குனர் ..
..
முதல் காட்சியே இருளர்கள் ஒட்டர்களின் வாழ்வை ..யாரும் கேட்க ஆளில்லாத சமூகம் .. மற்ற சாதிகள் பெயர் சொன்னவுடன் விடுதலை செய்வதிலிருந்தே எத்தகைய கொடூரமனபடைத்தவர்களாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் நாம் என தலைகுனிய வேண்டும் .. சாதாரண லாக்கப் மரணம் என கடந்துவிடமுடியாதவாறு நம்மை உலுக்குகிறது .. இருளர் மக்கள் பிரகாஷ்ராஜிடம் சொல்லும் காட்சிகளும் அதிலும் அந்த பெண் தனக்கு நேர்ந்த அவமானத்தை சொல்லும் போது அவரது உடல்மொழியும், பெண்கள் மீதான வன்கொடுமை என தப்பித்துக்கொள்ள முடியாமல் நம்மை கிழித்து எறிகிறது ..
..
ஆதிக்கசாதி திமிரை இடையிடையே சொன்னாலும் சில காட்சிகளே என்றாலும் செவிட்டில் அறைந்தது .. அதிலும் நீங்க சொல்லும் போது தான் ("நூல் பிடிச்சாமாதிரி" ) சந்தேகம் வருது என்பது நூறுபக்க வசனத்திற்கு சமம் ..தெளிவான திரைக்கதை இரண்டே முக்கால்மணி நேரம் இமைமூடாமல் இருக்கையில் இறுத்தியதைபோல நகரவிடவில்லை .. படம் முடியும் போது நெஞ்சம் கனத்தது ..
..
இந்த நேரத்தில் பேராசிரியர் கல்யாணி அவர்களை நாம் போற்றவேண்டும் .. தன் வாழ்நாள் முழுவதும் இருளர்களுக்காக வாழ்ந்து வருபவர் ..
நடிகர் சூர்யா,லிஜோமோல், மணிகண்டன்
என இப்படத்தில் நடித்தவர்களை
இயக்குனர் சரியாக பயன்படுத்தியிருக்கிறார் மிகையில்லாத நடிப்பு ..
தலைப்பை சிலர் விமர்சிக்கிறார்கள் இதைவிட நல்ல தலைப்பை வைக்கமுடியாது .. ஒடுக்கபட்டமக்களுக்காகவே வாழ்ந்த மனிதர் அம்பேத்கர்..
பொய் வழக்குகளில் ,விசாரணை கைதியாக வாழ்நாளை முழுவதும் சிறையில் வாழும் எளியவர்கள் .. இவர்களையெல்லாம் எப்போது விடுவிக்க போகிறோம் .. சமூக அக்கறையோடு இன்னமும் நிறைய கதவுகள் திறக்கபடவேண்டும்..
..
சிறந்த படைப்பு சமூக அக்கறையோடு அழுத்தமான திரையில் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தியிருக்கிறார்..
இப்போது தான் தமிழ்சினிமா வெற்றிமாறன், பா.ரஞ்சித்,மாரி செல்வராஜ் த.செ.ஞானவேல்
என மண்ணை நேசிக்கிறவர்கள் மண்ணை சார்ந்தவர்கள் கையில் வந்து "நல்ல படங்கள்" வர தொடங்கியிருக்கிறது ..
இது கூட ஒருவகை "விடுதலை " தான்
மணிகளும் சந்தர்களையும் நம்மை அறியாமலேயே கொண்டாடி வந்திருக்கிறோம் .. நம்மை பற்றிய கவலைகள் நமது வாழ்வியல் சிக்கல்கள் நம் மீது சுமத்தபடும் சுமைகள் , நம்முடைய இழப்புகள், மறுக்கபடும் உரிமைகள் இவையெல்லாம் பேச நம்மை சார்ந்தவர்கள் மட்டுமே முன்வருவார்கள்
..
த.செ.ஞானவேல் கைகொடுங்கள் ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment