காதல்
உள்ளில் துளையிட்டு ஊடுறுவும் உணர்வு
அகத்தில் அமர்ந்து மெல்லியதாய் எப்போதும் புன்சிரிக்கும்.. மறந்து திரிந்தாலும் இடையிடையே பெருமூச்சோடு ஜீவனை வெளிகாட்டும் ..
வாழ்வின் இறுதிவரை நம்மோடு சேர்த்தணைத்தே நடக்கும் .. பலமுறை பூத்தாலும் முதல் முறை மொட்டாகி நின்றதே அத்தருணம் வாழ்வில் எல்லாநிலையிலும் உம்மை கண்ணீர் கசியவிடும் .. கல்வெட்டைப்போல நெஞ்சில் வரைந்த வரிகள்
அழிக்கமுடியாத திரவியமாய் நிற்கும்.. காதல்
உன்னை புதுப்புதித்துக்கொள்ள உதவும் ..
..
மலரும் நினைவாய் .. சில வருடம் முன்பு
ஒருநாள் பழரசக்கடையில் தனியே அமர்ந்து
ராசாவின் இசையை ரசித்து மகிழ்ந்திருந்த போது எதிரில் வந்து நின்று நானிங்கே அமரலாமா என்றவுடன் நாடிதுடிப்பு அடங்கியதைப்போல பிரமையில் நான்.. நடுதரவயது கூடவே 15 வயது மகளோடு சின்னசிரிப்போடு நலமா நான் யாரென்று தெரிகிறதா என்றபோது மீண்டும் பிறந்ததைப்போல உணர்ந்தேன் .. எப்படியிருக்கிறாய் பையன் என்னபடிக்கிறான் இடையில் ஒருமுறை உன்னை பார்த்தேன் ஜவுளிகடையிலிருந்து வீட்டம்மாவை அழைத்துக்கொண்டு டூவீலரில் வெளியேறியதை பார்த்தேன் .. சிலநிமிடம் அடைமழைப்போல் கொட்டி தீர்த்தாள் .. என் மகள் இளையவள் 8 ல படிக்கிறாள் பெரியவ இந்த வருடம் +2 முடிக்கிறா ..
மீண்டும் எப்படியிருக்கே .. நிலைகுலைய வைத்தது என்னை அவளின் வரவும் பேச்சும் ..
..
அரும்புமீசை காலத்தில் அறிந்தும் அறியாத வயதில் ஒருநாள் திடீரென காதல் கடிதம் தந்து
அதை பிரித்து படிப்பதற்குள் நெஞ்சில் பட்டாம்பூச்சிகள் வண்ண மினுக்கி பறந்ததெல்லாம் வந்து போனது ஆசை வார்த்தை பேசி அழகுதமிழில் சிணுங்கி ஆற்றங்கரையில் விரல் கோர்த்து நடந்தும்.. ஆற்றுமணலில் புத்தகத்தால் முகமூடி படுத்திருந்தவேளையில் நெற்றியில் முத்தமிட்டதெல்லாம்.. மழைநின்று இலைசிந்தும் நீரில் நனைந்தபடி அன்பாய் பரிமாறிய முத்தங்கள்.. நிறைய கதைத்தும் மௌனமாய் சிலநிமிடங்கள் விழிகள் பார்த்தும் பேசிய ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்தது..
அதிகால பனிமூட்டத்தில் மனமகிழ காத்துநின்றதெல்லாம் வாழ்வின் வசந்தங்கள்
கண்ணீர் கசிய கடைசியாய் பேசிவிட்டு போனதெல்லாம் வந்துபோனது .. நிறைய கதைக்கவேண்டும் போலிருந்து அக்கம்பக்கம் பார்க்காமல் அழவேண்டும் போலிருந்தது நீண்ட மௌனம் சொல்லாத வார்த்தைகள் காலம்கடந்த ஞானம் இவையெல்லாம் இழப்பையே தரும் .. அடாவடியாய் அழுத்தமாய்
கடைசிவரை நின்றிருக்கலாம் விடமுடுயாதென போராடி இருக்கலாம் நமக்கான வாழ்வை நாமே வாழ்ந்து பார்த்திருக்கலாம் .. பொய்யான முகமூடியோடு வாழ பழகாமல் மெய்யாய் நாம் நாமாய் இருந்திருக்கலாம் ..
..
திரும்ப முகத்தெதிரே கை சுடக்கிய போது ஞானம் கலைந்து சிரித்துவைத்தேன் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன்.. கடந்தகால நினைவுகள் தவிர்த்து எல்லாம் பேசினாள்.. பையன் பைக்கில விரசா போறான்
என்ற அக்கறை கூட வந்தது திரும்பவும் பாதாம்கீர் வரவழைத்து குடித்தோம்.. நேரமாறது நான் கிளம்பட்டா .. என்ற போது
Still love you என்றேன் தலையில் கொட்டி ..
நீ திருந்தமாட்டே எனச் சிரித்து வரேன் என சென்றவள் வாசல் அருகில் நின்று திரும்பி எனை பார்த்து தலையசைத்த போது ..
மீண்டும் அதே பட்டாம் பூச்சிகள் வண்ணமாய் மின்னின..
..
காதல் உள்ளில் துளையிடும் உணர்வு
..
No comments:
Post a Comment