Friday, July 12, 2024

நான் யார்..
தெரிந்தால் சொல்லுங்களேன்..
போகும் பாதையெல்லாம் 
பொய்களால் விளைந்திருக்க
போகுமிடம் தெரியாமல் 
தவிக்கிறேன்...
போய் சேர நேரமாகும் ..
அதுவரை ..
வந்ததை பற்றி தெரிந்துக்கொள்ள ஆசை..
..
நான்யாரென நானறியேன்..
நஞ்சுண்டு வந்தவனா  
நஞ்சை கக்க வந்தவனா..
வழிநெடுக வினை விதைக்க வந்தவனா..
பூச்செண்டு தொடுத்து 
மயக்கும் வித்தையறிந்தவனா..
சொல்லில் சுவை கூட்டி 
சொல்லவந்ததை உன் மூளையில் ஏற்றி 
மழுங்கடிக்க வந்தவனா..
பேராசை பிடித்து பித்தனாய்..
எல்லாம் எனக்கென்று..
எல்லாம் எனக்காதென்று..
விடாமல் பொறுக்கும் எச்சனா..
அடுத்தவர் உரிமையை அபகரித்து
அலங்கோலபடுத்தி ..
சிரித்துமகிழ்ந்து சீரழிக்க வந்தவனா..
எல்லாம் அறிவேனென்று எகத்தாளம்பேசி
ஏனெயர் சிந்தனையில் சிறுமைபட்டவனா..
நானறியேன்.. நான்யாரென்று
..
பொய்யும் புரட்டும் 
புகழ்ச்சியும் போதையும்
நீடித்திருக்காது..
வஞ்சனை கொண்ட நெஞ்சம் வாழாது..
நெஞ்சில் கசடும்.. 
நேர்மையில் பிறளும்..
அடுத்தவனை கெடுத்து வாழும் வாழ்வும்..
வக்கனையாய் சூது செய்து வீழ்த்தினாலும்
அறமே  வெல்லும் இனிதாய் இறுதியில்
பண்பில் உயர்ந்தோர் சொல்லில்
பெரியவர் தம் செயலில்
பகட்டில்லா வாழ்வில்
பக்கத்து மனிதனை நேசித்தலில்
முகம் பார்த்து.. 
குலம்பார்த்து 
ஈயாத மனதில்..
யாரென்ற அகந்தை கொள்ளாத நெஞ்சில்
வாழ்கிறேனா.. நான்..
..
இதுவரை..
சூழ்ச்சியால் யாரையும் வீழ்த்தியதில்லை 
யாசிப்பவனை .. 
முற்றத்திலிருந்து விரட்டியதில்லை..
கை கவளம் சோறாயினும் ..
பசியென்று வந்தவனுக்கு தராமல் விட்டதில்லை
அடுத்தவர் உரிமையை அபகரித்ததில்லை
பங்காளியோடு பகைமை பாராட்டியதில்லை
பக்கத்துவீட்டுகாரனின் காற்றை நான்  சுவாசித்ததில்லை 
பகட்டுகாட்டி பெருமை கொண்டதில்லை
இல்லையென்ற போதும் யாரிடமும் யாசித்ததில்லை..
பேராசை கொண்டு அலைந்ததில்லை..
புகழுக்கஞ்சி போர்வைக்குள் அடைந்ததுண்டு
அதிகம் பேசாமல் ..
தனிமையில் திரிந்ததுண்டு..
ஆன்றோர் சொல்லாயினும் அறமில்லையேல் 
சினம் கொண்டதுண்டு..
இனம் மொழி கலையென்றால் 
இருப்பதையும் இழப்பதுண்டு..

யார் நான்..
..
பிழைக்கதெரியாதவன் 
அகம்பாவத்தில் அலைகிறான் 
வாழதெரியாதவன்.. 
வக்கற்றவன்..
அதிகம் பேசும் கழனி பானை ..
திமிரால் அழிந்தவன் ..
வளைந்து நெளிந்து..
விட்டுகொடுக்க தெரியாது..
அடிப்படையையே தகர்க்கிறவன்..
புதுமை.. பேசும் பைத்தியம்..
நாத்திகன்.. 
இன்னும் இன்னும் 
நிறைய சொன்னார்கள்..
உண்மையில் நான்..
யார்..
யாமறியேன் ..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment