Friday, April 6, 2018
ஏன் இந்த தயக்கம்
நான் இங்கே நானாய் இல்லையென்றா
நான் எப்போது நானாய் இருந்தேன்..
பொய் எனும் முகமூடிதரித்து
நயவஞ்சக சொல்லெடுத்து
நாவில் தேனோடு விசம் சேர்த்து..
உதடு சிரிக்க..
உச்சரித்ததெல்லாம்
நான் சுயமாய் செய்ததில்லை
..
பொய்யில் கட்டி வைத்த சுவனத்தை
நம்ப சொல்லி மதமென்றும் பிரிவென்றும்
நாமே உயர்ந்தவனென்றும்..
நம்மில் தாழே..
உள்ளவனெல்லாம் மனுஷனாய் பிறப்பதற்கே தகுதியில்லையென நம்ப வைத்து..
கூர்தீட்டி .. முனை மழுங்காமல் எம்மை காத்து வருவது யார்
..
அப்பனும் அம்மையும் சொன்னதை நம்பி
அப்பனின் திமிரில் விளைந்ததெல்லாம் நன்மையென எண்ணி..
சாதி பாசத்தை என்னையும் அறியாமல் என்னுள் விதைத்தது யார் ..
பத்துவயது வரை அண்ணன் தம்பியாய் தெரிந்தவனை
பங்காளியென பெயர்த்தது யார்
கூட நடந்த கூட்டாளியை
கேட்டிற்கு வெளியே நிறுத்திவைத்து
அதெல்லாம் வெளியே வச்சுக்கு வீட்டுக்கு கொண்டுவராதே என்ற போதே..
நான் என்னை இழந்துவிட்டேனே ..
..
அம்மாவிடம் அய்யனிடம்
அண்ணனிடம் அக்காளிடம்
சொன்ன பொய்தான்..
அரவணைத்து வந்தவளோடும்.
அவள் அணைப்பில் விளைந்த முத்துக்களோடும் .. சொன்னது
என்ன விதைத்தார்களோ அதுதானே விளையும்...
..
பொய் பொய்..
எல்லாம் பொய்
உதடு சிரிக்கிறது
உள்ளத்தில் கொலைவெறி
எப்படி உயர்ந்தானென்று ..
வெளியில் வந்தேன்..
விவரமாய் பேசினர்..
அடுக்கடுக்காய் பேசியதெல்லாம்
உண்மையில்லை..
கல்வியில்.. கலையில்..
கலாச்சாரமென்ற திணிப்பில் ..
வேதத்தில்.. வியாக்கானத்தில்
செப்பிய வித்தைகளில்..
வீரமாய் பேசி வெறியை வளர்த்ததில்
அரசியலில் ஆன்மீகமெனும் உளறலில்
ஊகூம்....
ஆன்றோர் சபையில்
அறிவின் நிழலை
தேடி தேடி கலைத்ததுதான் மிச்சம் ..
பேசும் போதினித்தது
பேசிய பிறகுதான் தெரிந்தது
பேசியதெல்லாம் மூளைச்சலவையென..
..
நான் சொல்வது சரியென்பவன்..
முட்டாள்..
நான் சரியென்பவன்
அயோக்கியன்..
யார் சொன்னாலும்
அறிவுக்கொண்டு பாரென்பவனே..
சிறந்த வழிகாட்டி..
..
தேடுகிறேன்.. தேடிக்கொண்டே இருக்கிறேன்..
நல்லவனை.. நா நயமின்றி.. நாணயமாய்
செயல்படுவோனை..
சொன்னதை சிந்தி ஏற்பது அறிவின் தேடலில் என்பவனை..
எங்கிருந்தும் வரலாம்
வரும் போது சொல்கிறேன்..
..
அதுவரை பொய் சூழ வாழ்கிறேன்..
நானே பொய்..
நான் சரியென்பதும் பொய்....
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment