Wednesday, February 11, 2026

இஸ்லாமியர்களின் வாக்கு வங்கி..
..
தொடர்ந்து தமிழ்நாட்டில் விவாதிக்கப்படும் விடயமாக இருக்கிறது.. உண்மையில் இஸ்லாமியர்கள் ஒட்டுமொத்தமாக திமுகவிற்கு வாக்களிக்கிறார்களா என்றால் பதில் பரிகாசமாக வரும்.. 
அவர்களின் "தலைமை" போதை என்னைச் சுற்றியே இயங்க வேண்டும் என்ற பேராசை தனித்"தவில்" ஆக ஓசை கேட்க வேண்டுமென்ற பேராவல் ஒற்றுமையை சிதைத்து தனி ஆவர்த்தனம் செய்கிறார்கள் ஆனால் முஸ்லிம்களின் ஒற்றுமையின்மைக்கு திமுகதான் காரணம் என்று ஒப்பாரி வைப்பார்கள்.. தங்களுக்குள் அதிகாரம் வேண்டுமென்ற எண்ணம், தானே "ராஜாவாக" வலம் வரவேண்டும் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் பிரதிநிதியாக தானே அடையாளப்படுத்தப்பட வேண்டுமென்ற பேராசை இந்த சமூகத்தின் சாபக்கேடு..
..
IUML கொஞ்சம் கொஞ்சமாக கரைய தொடங்கியது ஏன் என யாருமே யோசிப்பதில்லை.. ஏன் எல்லோரும் ஒரு குடையின் கீழ் நிற்க வேண்டுமென எண்ணுவதில்லை.. யார் தலைமை ஏற்பது என்பதில் தான் தலையாய பிரச்சனை இருக்கிறது.. இன்றைய முஸ்லிம்கள் புதிதாக யார் கட்சி தொடங்கினாலும் தொப்பியோடு போய் முன் வரிசையில் நின்ற கூவுகிற நிலை  எப்படி வந்தது..  ஆளுக்கொரு அமைப்பை ஏற்படுத்தி அந்த வட்டத்தில் ஆதிக்கம் செலுத்துவதால் என்ன பயன்..  யாருக்கும் இதனால் எந்த பயனுமில்லை/பலனுமில்லை என்பதை உணராத சமுதாய தலைவர்கள்.. கொடுமை
..
காலங்காலமாக திமுகவிற்குதான் வாக்களித்தோம் என்பதெல்லாம் பழங்கதை.. இப்போதெல்லாம் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு குழுக்களில் பயணிக்கிறார்கள் .. நாளைக்கு ஒரு அமைப்போ கட்சியோ தொடங்கினால் முதல் துண்டு இஸ்லாமியனுதாக இருக்கும்.. இதில் குறைகூற இவர்களுக்கு "திராவிடம்" இருக்கிறது.. மாண்பமை A.K.A .அப்துல் சமது காலத்திலிருந்தே காண்பதுதான் பன்மொழிப்புலவர் அப்துல் லத்தீப் சாஹிப் பிரிந்த போது திமுகதான் காரணம் என்று சொன்னவர்கள் அதற்கு முன்பே அப்துல் ஜப்பார் பிரிந்து எம்ஜிஆரோடு சென்றதை கணக்கில் கொள்ளவில்லை.. முஸ்லிம் லீக்கும் அதிமுக திமுக என்று மாறி மாறி சவாரி செய்தது..
..
இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை அனைத்து இஸ்லாமிய கட்சிகள்/அமைப்புகள் ஒருங்கிணைத்து ஒரு கட்சியாக செயல்பட முடியாவிட்டாலும் இணைந்து  தனித்து களம் கண்டு எத்தனை விழுக்காடு வாக்கு என்பதை உறுதி செய்தால் வரும் காலங்களில் உங்களுக்கான அதிகாரம் கைக்கூடும்.. இல்லையெனில் ஒரு தொகுதி இரண்டு தொகுதிகளுக்குள் முடங்கி போகும் சமுதாயமாக பரிதாபகரமான நிலைதான் வரும் காலங்களில் கிடைக்கும்.. 
ஒற்றுமை எனும் கயிற்றை 'பற்றி' பலமாக பிடித்துக் கொள்ளுங்கள் என்பதெல்லாம் "கிதாப்" களில் மட்டுமே காணலாம்..
..
இளைஞர்களில் வழி கெடுத்ததில் இன்றைய தலைவர்களுக்கும் கணிசமாக பங்குண்டு.. உணர்ச்சி மேலிட பேசி கோப தணலில் நிறுத்தியது தவிர வேறொன்றும் பெரிதாக இல்லை.. ஆளுக்கொரு கொடியோடு போராட்டம், அரசிற்கெதிராக நிறுத்தல் இவை தவிர வேறென்ன கண்டீர்.. பொது சமூகத்தோடு கரம் சேரத்து கரை சேர்வது இன்றைய காலக்கட்டதில் அவசியம்.. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதல்ல .. நாம் யாரை தீர்மானிக்கிறோம் யாரை முன்னிறுத்துகிறோம் நமது பங்களிப்பில்லாமல் எதுவுமில்லை எதுவும் நடக்காது என்ற நிலை எப்போது உருவாக்க போகிறீர்கள்..
..
சிலர் இப்போதும் திமுக வஞ்சித்துவிட்டது என்ற குரலில் மெல்லிதாய் முணுமுணுக்கலாம் .. ஏன் அதிகார பகிர்வு தரவில்லை என கேள்வி கேட்கலாம் .. எந்த அரசியல் கட்சியும் எத்தனை விழுக்காடு என கணக்கு பார்க்கும் என்பதை எப்போது உணர போகிறீர்.. "நெஞ்சில் இடமிருக்கு" என்பதில் கோபம் கொள்ள என்ன இருக்கிறது.. உங்கள் பலத்தை நீங்கள் நிரூபிக்காத வரை எதுவும் நடந்துவிட போவதில்லை..
..
இந்தியா முழுக்க இதுதான் நிலை.. கேரளத்தில் மெச்சதக்க  வகையில் இஸ்லாமிய இயக்கத்தின் செயல்பாடு இருக்கிறது.. மற்றபடி இந்திய ஒன்றியம் முழுவதும் காங்கிரஸைப் போல தேய்ந்துக்கொண்டிருக்கிறது.. இந்திய அரசியலையே தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய IUML இன்றைய நிலைமை...?
கும்பகோணத்தில் நடந்த அனைத்து முஹல்லா மாநாடு எத்தனை ஜமாத் புறக்கணித்தது.. ஏன் உங்களால் பெரும்படையை திரட்ட முடியவில்லை.. தவ்ஹீத் ஜமாத், தமுமுக,  ம.ஜ.க ஏன் வரவில்லை.. முதலமைச்சரை அழைத்து கூட்டம் நடத்தினால் போதுமா.. அரங்கில் திமுகவினர் தானே அதிகம்..  ஏன் அனைவரையும் அழைத்து அரவணைத்து முன்னெடுத்திருந்தால் வழி திறந்திருக்குமே.. செய்ய மாட்டீர்கள்.. உங்களுக்குள் பிரிவினை என்பது ஊறிப்போன விடயம்.. காலங்காலமாய் புரையோடிப் போய் சீழ் பிடித்த மனம் .. என்ன செய்துவிட்டீர்  இட ஒதுக்கீட்டை உயர்த்தி கேட்டீரா என கேட்கிறீர்.. ஏற்கனவே பலமுறை சொன்னதுதான்.. ஆந்திர முஸ்லிம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உச்சநீதிமன்றம் பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் பரிந்துரை இல்லாமல் உள் ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என்றதை கணக்கில் கொண்டுதான் கலைஞர் பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் பரிந்துரையோடு சிறுபான்மையினருக்கு (கிருஸ்துவம்,இஸ்லாம்,ஜெயின்)
வழங்கினார் ..  அதாவது 8% விழுக்காடு வழங்கலாம் என்ற பரிந்துரையில் கிருஸ்துவர்கள் 3.5% முஸ்லிம்களுக்கு 3.5% ஜெயின் சமூகத்திற்கு 0.5% என தந்தார்.. 
ஆனால் கிருஸ்துவர்கள் நாங்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பொது பிரிவில் இதைவிட அதிகமாக பெறுகிறோம் எனச் சொல்லி வேண்டாம் என்றனர்.. ஆனால் அதை நாம் கேட்க முடியாது.. மீறி தந்தால் உள்ளதும் போகும்..  பாமக உள்ஒதுக்கீட்டு நிலை அறிந்தது தான் தீடீரென அறிவித்துவிட்டு தேர்தல் முடிந்தவுடன் உச்சநீதிமன்றம் ரத்து செய்ததே அதைப்போல நடக்கும்..
..
முதலில் உங்கள் பலத்தை நீங்கள் நிரூபியுங்கள்.. வானத்தை தொட ஆசை தான்.. ஆனால் "ஏணி"கூட நம்மிடமில்லை.. இரவலில் நாம், ஊர்ந்து செல்லும் நிலை .. நம் பலம் நாமே அறியாமல் இருக்கிறோம் என்ற புரிதல் கூட இல்லை.. எத்தனை அமைப்புகள் (48).. ஆனால் அவரவர் தன்சுயத்திற்காக சமுதாயத்தை கூறு போடுகிறார்கள் .. "ஒற்றுமை" சமுதாய தலைவர்களுக்கு ஒவ்வாமை.. ஆனால் இதற்கும் திமுக தான் காரணம் என்பார்கள்
..
சாதாரண வீடுகளின் கதவை தட்டாதீர்கள்.. உங்கள் கைகள் சொர்க்கத்தின் கதவை தட்டும் அளவிற்கு நீளமானது ..என்ற "#மௌலானா_ரூமியின்" வரிகள் ஞாபகம் வருகிறது.. நீங்கள் ஒற்றுமையோடு ஒருங்கிணைந்து ஒரு குடையில் நின்றால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.. நீங்கள் சுயத்திற்காக பலமறியாது நிற்கிறீர்கள்.. "சாதாரண கதவுகளை" தட்டிக் கொண்டே காலம் கடத்திக் கொண்டிருக்கிறீர்.
ஒருங்கிணைந்தால் உங்கள் கைகள் நீளமானவை.. 
..
குருதியைக் கொண்டு காயத்தை கழுவாதீர்கள் (ரூமி)..
..
ஆலஞ்சியார்


No comments:

Post a Comment