ராமநாதபுர சமஸ்தானத்தின் மன்னர் சண்முக ராஜேஸ்வர சேதுபதி. மன்னர் மானியம் ஒழிக்கப்பட்ட பிறகும் மன்னராகவே இருந்தார். எப்படியெனில் சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் முதல் மூன்று தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தார்.
மன்னராக இருந்தவர் அந்தப் பகுதியில் வெற்றி பெறுவது பெரிதல்ல, அவர் மனுத்தாக்கல் செய்வோதோடு சரி. ஓட்டுக்கேட்டு வரமாட்டார்,கையெடுத்து கும்பிடமாட்டார். ஆனாலும் 1952 சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் தொடங்கி 57,மற்றும் 62 வரை அவர்தான் எம்.எல்.ஏ,வாக வெற்றி பெறுவார். திமுக 57ல் தேர்தல் களத்தில் இறங்கிவிட்டது. இருந்தாலும் 57லிலும் 62லிலும் திமுகவுக்கு வேட்பாளர் கிடைக்கவில்லை. இருந்த பொறுப்பாளர்களும் தயங்கினர்.
1967 தேர்தல் வருகிறது ராமநாதபுரம் தவிர்த்து ஒரு பட்டியலை அண்ணா தயாரிக்கிறார். கூட்டணிக் கட்சிகளும் திமுகதான் ராமநாதபுரத்தில் போட்டியிட வேண்டும் என ஒதுங்கிக்கொண்டன. ஒரு சட்டமன்ற உறுப்பினர் சீட்டு வீணாய்ப் போனது என்றபடி அண்ணா அடுத்த வேலையை பார்த்துக்கொண்டிருந்தார்.
கலைஞர் அண்ணாவிடம் போய் அண்ணா ஏன் ராமநாதபுரத்தை வாங்கிக்கொண்டு அன்னப்போஸ்டாக விட்டுக்கொடுக்கிறீர்கள் என்று கேட்டார்.
அண்ணா சொன்னார் “ விட்டுக்கொடுக்கவில்லை தம்பி..நம்பிள்ளைகள் யாரும் அங்கு தயாரில்லை. தென்னரசே சொல்லிவிட்டார் இனி என்ன இருக்கிறது’ என்றார்.
“வேட்பாளர் பெயர் தங்கப்பன், எனக்காக அவரை அறிவியுங்கள் அண்ணா, தென்னரசுவிடம் நான் பேசிக்கொள்கிறேன்” என்று கலைஞர் சொல்லிவிட்டார். தயக்கம் கொண்ட அண்ணா கலைஞர் சொன்ன வேட்பாளர் குறித்து விசாரிக்கிறார்.
“ஓ அந்தத் தங்கப்பனா? அவர் பெயர் குதிரை வண்டி தங்கப்பன். பேருந்து நிலையத்தில் குதிரை வண்டி ஓட்டுகிறார்” என்று செய்தி வருகிறது.
கலைஞரின் மேலிருக்கும் நம்பிக்கையில் அண்ணாவும் அறிவித்துவிடுகிறார். கூட்டணிக்கட்சிகளுக்கும் நிம்மதி.
மன்னர் விசாரிக்கிறார். இம்முறை திமுகவே போட்டியிடுகிறது என்று தகவல் வருகிறது. வேட்பாளர் பெயரைக் கேட்டதும் வெடித்து சிரிக்கிறார். “நம்ம அரண்மனை கிழட்டுக்குதிரைகளை கொடுத்த விலைக்கு வாங்கி பிழைக்கும் தங்கப்பனா என்னை எதிர்த்து நிற்பது..’’ என்று அரண்மனைக்குள் போனவர் வெளியே வரவேயில்லை.
கலைஞர் களத்துக்குப் போனார், தங்கப்பனுடன் வீடுவீடாகச் சென்றார், வீதி வீதியாய் சென்றார். முடிவாய் ‘குதிரை வண்டி’ தங்கப்பன் ராமநாதபுர சமஸ்தானா மன்னரை வென்றார். அதன் பின்னர் மன்னர் போட்டியிடவேயில்லை.இப்படி ஜனநாயக களத்திலும் மன்னர் தோரணையில் அதிகாரத்தை கைப்பற்றியிருந்த மன்னர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவியது திமுக என்கிற அரசியலியக்கம்.
யார் யாரை முடிப்பது என்பது இங்கு வேலையில்லை, யார் இறுதிவரை மக்களுடன் இருப்பது என்பதே வேலைத்திட்டம். ஒரே தேர்தல் முடிவுகளில் அரசியல் ஆசையை மூட்டைகட்டியவர்களின் முடிவுகளை கண்ட இயக்கம் திமுக. மன்னாதி மன்னர்களை வீட்டுக்குக்கு.. sorry அரண்மனைக்கு அனுப்பிய கட்சி இது.
திமுக என்கிற இயக்கம், வெற்றுச் சலசலப்புக்கு அல்ல, காடு அதிரும் வேட்டோசைக்கே அசராமல் நிலம்பாவி நிற்கும் பெருங்களிறு!
..
வரவனை செந்தில்